ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

சத்தமின்றிப் பூக்கும் பூ




இரக்கமற்ற இறந்த காலம் தகித்துக் கொண்டிருக்கும் எண்ணங்களைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு அவன் இரவில் தனிமையை விசும்பலாக்கிக் கொண்டிருந்தது, அதில் வழியும் கண்ணீரில் இரக்கமில்லாத ஒருத்தியின் இரும்புக் கரம் பற்றி சொற்கள் சிதறிக் கொண்டிருந்தன. அந்த ஊற்று அதன் இரு வருட பயணத்திற்குப் பின் சற்றே வற்றிய ரணமாய் வழிந்துகொண்டிருந்தது. வாழ்க்கைச் சமாதானத்திற்காக ஒரு வெள்ளைத் தாளை எடுத்து எழுதிக் கொண்டிருந்தான்...

அன்புள்ள அம்மா,

இரண்டு வருட காலமாக நான் உன்னிடம் இருந்த எல்லா இணைப்புகளையும் துண்டித்துக் கொண்டிருக்கிறேன். இந்த மடல் உனக்கு அதிர்ச்சியையோ மகிழ்ச்சியையோ கொடுக்கலாம். உன்னைப் பற்றி நான் ஊர்க்காரர்கள் சிலரிடம் கேட்டுக் கொள்வதோடு சரி. என் இதயத்துக்குள் ஒளிந்திருக்கும் சோகங்களைப் பகிர்ந்து கொள்ள உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லையென்றாலும், உனக்கு எனது சோகம் வயதுக் கோளாறாக தோன்றியிருக்கக் கூடும். வலி கொடியதாயினும் அந்த சோகத்திற்கு பின்பு கிடக்கும் எனது உணர்வுகளின் ஈரம் இன்னும் காய்ந்துவிடவில்லை.

இந்த பூமியின் எத்தனையோ காதல்களில் எனதும் ஒன்று. அவள் பேச்சுக்களெல்லாம் குழந்தைத்தனமானது என எண்ணிக்கொள்வேன், அவள் ஒவ்வொரு முறையும் விபரீதமாக ஏதோவொன்றைச் செய்துவிடும்போதும் அல்லது சொல்லி விடும்போதும். அவளின் அந்தத் தன்மையே என்னை அவளின் உணர்வுகளுக்கு அருகே அழைத்துச் சென்றது. ஆம், அவளைச் சீர்படுத்தத் துணிந்து என்னைப் பாழ்படுத்திக் கொண்டேன். அவள் என்னை விட்டு பிரிய ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் என் உயிரை உறிய ஆரம்பித்தாள். அவளின் போக்கு இந்த முறை குழந்தைத் தனமானதாய் தெரியவில்லை, அது திட்டமிட்டதாய் தெரிந்தது. அவளின் இதயத்தில் எனக்கான ஒரு ஊசி முனையிடமும் ஒதுக்காததை உறுதி செய்தபடி இருந்தன அவள் செயல்கள். போகட்டும்... அவள் போன வழியே பழகிய நாயைப் போல சென்று கொண்டிருந்த மனது சற்று தூரத்தில் அவள் சுவடின்றி வந்த வழியே திரும்பி வந்து கொண்டிருந்தது. நீ கூட பார்த்திராத நான், ஏன் நான் கூட பார்த்திராத என்னைப் பார்த்தேன். அது என்னிடமிருந்து விலகியே நின்றது. என்னை விட்டு விலகி நிற்கும் என்னைப் பற்றிய சோகத்தில் மது ஒன்றே உணர்வுப் பாலமாய் இருந்தது. எனக்குப் பொழுதுபோக்காய் இணையம் அமைந்தது. ஆமாம் எனது நத்தை நகரலான நரக நேரங்களின் பொழுதுகளை நான் போக்கத்தான் வேண்டியிருந்தது. தமிழில் எழுதப்பட்ட அனைத்து காதல் தோல்வி கவிதைகளும் மனப்பாடமே ஆகிவிட்டது ஒரு சமயம். நானும் எழுதினேன் அவளுடன் பகிர்ந்து கொண்ட நாட்களின் வாசத்தையும் மோசத்தையும் விரல் முனை வழியே இணையத்தில். வாசித்தவர்கள் பாராட்டினார்கள், அதில் ஓடிக் கொண்டிருக்கும் வலி அறியாமல்.

யாருமற்ற அநாதையாய் தெரியும் நிலவினருகே நட்சத்திரம் ஒன்று பிரகாசமாகத் தெரிந்தது, அதை சிந்தித்துக் கொண்டே இருந்த பொழுது முகம் தெரியாத ஒரு பெண்ணிடமிருந்து எனக்கொரு மின்மடல், எனது படைப்புகளைப் பாராட்டி... ஏனோ தெரியவில்லை அந்த மடலுக்கு எனக்கு பதிலனுப்பத் தோன்றிற்று. அனுப்பினேன்... என் கசந்து போன வாழ்க்கையை வார்த்தைகளிலே ஏற்றுவதைத் தடுக்க முடியாமல் தோற்றுக் கொண்டே சென்றன அவளுக்கெழுதிய என் மடலின் சொற்கள். அவளும் அதை தேற்றும் விதமாக பதிலளித்தாள். அந்த பதில் எனக்குப் பிடிக்கவில்லை, எனது சோகத்தில் விளைந்த கர்வம் அதைப் பார்த்து எக்காளமாய்ச் சிரிக்கச் சொன்னது எனது உலர்ந்துகிடக்கும் உதடுகளை. எங்கள் மின்னஞ்சல் பயணம் சில மாதம் தொடர்ந்தது. வளர்ந்த குழந்தை தொட்டிலை விட்டு மெத்தைக்குத் தாவுவது போல் எங்களது வளர்ந்த பேச்சு மின்மடலை விட்டு மின்னரட்டைக்குத் தாவியது.

எந்த உறவைச் சொல்லியும் வளராத பேச்சு அது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பேச்சு அது. ஏனோ எனது எல்லா இரகசியங்களையும் அவளிடம் அம்பலப்படுத்தினேன், நீ சின்ன வயதில் என்னை அம்மணமாக நிறுத்தி அடித்தது முதற்கொண்டு. அவள் உம் கொட்ட மறந்ததேயில்லை. அவளுடைய அனுபவங்கள் சில சொல்வாள், நான் நினைத்துக் கொள்வேன் அவளது சொற்களைப் போலவே அவளும் குட்டையானவளோ என்று... ஆள் வேண்டுமெனின் குட்டையாக இருக்கலாம், ஆனால் அவள் எண்ணங்கள் குட்டையல்ல அது பாயும் நதி. அதில் ஒரு பரிசலில் பயணித்தேன், அதுவும் அவள் தந்த நம்பிக்கைப் பரிசலில்.

எனக்குள் அவள் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. என்னை விட அறிவாளியான அவளிடம் தோற்று மண்டியிட்டது என் நட்பு, அவள் பாதங்களைச் சரணடைந்த போது அது காதலாக பரிணமித்திருந்தது. அவளிடம் மனம் விட்டுக் கேட்டேன், என்னை இவ்வளவு தூரம் கரை சேர்த்த நீ வாழ்க்கை முழுதும் துணை வருவாயா என்று. அவள் ஒரு சிரிப்பானை மின்னரட்டையில் பதித்தாள். அதற்கான அர்த்தம் எனக்கு எட்டவில்லை. ஆனால் மறுபடி ஒரு முறை தோல்வியைச் சந்தித்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமையைக் கொண்டிருந்தேன், அதுவும் அவளளித்த பரிசு. நாங்கள் சந்திக்கும் தேதி முடிவானது.

சவரம் செய்தேன், இரண்டு வருடங்கள் கழித்து சற்று அலங்காரத்தைக் கண்டது எனது முகம். அவளைப் பார்த்தேன். எனக்கு முன்னரே வந்து அமர்ந்திருந்தாள் நான் சொன்ன அதே பூங்காவில், அதே இருக்கையில்.... அங்கே சென்றதும் என்னிடம் ஒரு துண்டுக் கடிதம் கொடுத்தாள். "என்ன மின்னரட்டைப் பழக்கம் போகவில்லையோ" என சிரித்துக் கொண்டே கேட்டேன், அப்படியே அவள் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். வாங்கி வாசித்தேன். தான் ஊமையென்றும், நான் ஒரு ஊமையை மணக்கவே ஆசைப்படுகிறேன் என்றும், அவளுக்கு என்னை விட ஒரு வயது மூப்பு என்றும் எழுதியிருந்தது. நான் பேச ஆரம்பித்தேன் கண்கள் வழியாக கண்ணீரின் துணை கொண்டு, வாய் பேச முடியாது ஊமையானேன். அவளைச் சம்மதிக்க வைத்து விட்டேன். உன்னைப் போல ஒரு தாயாக அவளிருப்பாள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. என்னை நீ இன்னும் நேசித்துக் கொண்டுதான் இருப்பாய். இந்த மடல் உனது கையில் கிடைத்த பிறகு அவளோடு நான் அங்கே இருப்பேன்.

அன்புடன்,
உன் பிள்ளை.

வீடு

- சிறுகதை


இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

விதிப்படி ஒரு ப்ளாகரில் இருந்து ஒரு கதைதான் அனுப்பவேண்டியுள்ளதால், இந்தக் கதையை என் கவிதை ப்ளாகரில் இட்டுள்ளேன்.

சுட்டி இதோ http://oliyavan-kavithaikal.blogspot.com/2009/06/blog-post_28.html

காற்றோடு பேசும் இளங்குருத்து

-சிறுகதை

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது. சுட்டி http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html


அன்றைய கடமையை முடிக்கப் போகும் சூரியன் இரவின் மடி தேடி வேகமாக ஓடத் தொடங்கியது வழியெங்கும் மேகங்கள் மீது வண்ணங்கள் தூவிக் கொண்டே, அதை அண்ணாந்து ரசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள் அம்மு. ஐந்தாம் வகுப்பு முடிக்கப் போகும் அவள் பூமியில் நடைபயில வந்த சொப்பன தேவதை. பள்ளியிலே சுமாராக மதிப்பெண் வாங்கும் குழந்தைதான். மின்னஞ்சல் இணையமென இரண்டு வயதிலிருந்தே பல விசயங்களைத் தெரிந்து வைத்திருக்கும் 21ம் நூற்றாண்டின் சராசரி நகரத்துக் குழந்தை. வழியெங்கும் பூவை உதிர்த்துவிட்டு அவளின் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தது அவளின் குடியிருப்பின் சாலை.

தாத்தா பாட்டியிடம் தினம் தினம் நடந்ததை அவள் சொல்லிவிடுவது வழக்கம். இன்று அவளுக்கு கூறுவதற்கு ஒரு முக்கியமான விசயமிருந்தது. அவளிடம் எப்பொழுதுமே குறும்பு செய்யும் சுந்தர், இன்று அவளைப் பிடித்து கிழே தள்ளிவிட அவளுக்கு முட்டியில் சிராய்ப்பு. வந்த கோபத்தில் உதட்டைப் சுழித்துக்கொண்டே சுந்தரைக் கீழே தள்ளிவிட்டு கையிலிருந்த பையால் அடி அடியென்று அடித்துவிட்டாள். சுந்தர் அழுதுகொண்டே ஆசிரியரிடம் சொல்ல, ஆசிரியர் இருவரையும் சமாதானப் படுத்திவிட்டு, அம்முவின் காயத்தில் மருந்திட்டுக் கட்டி அனுப்பினார்கள். அவளுக்கோ அது ஒரு வலியாகவே சிறிதும் படவில்லை, ஒரு துளி கண்ணீரும் வரவில்லை, இருப்பினும் இன்று தாத்தா பாட்டியிடம் சுந்தரை அடித்ததைப் பற்றிக் கூறப்போகும் சிந்தனையிலேயே பெருமையாக சென்று கொண்டிருந்தாள். இது போன்று அவள் இதற்கு முன்னரும் நடந்துகொண்டிருந்தாள், அப்பொழுதெல்லாம் வீட்டிற்கு சென்று நடந்ததைக் கூறியதும் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என அனைவரும் சேர்ந்து ஒன்றாகச் சிரித்துவிட்டு அவளைப் பாராட்டிய வண்ணமே இருப்பார்கள்.

ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அவளுடைய அம்மா லதா கொடுக்கும் பறக்கும் முத்தம் அவளுக்கு சாயங்கால விருந்து. அவள் வந்து சற்று நேரத்திலேயே வந்துவிடும் அப்பா அவளது நெத்தியில் முத்தமிடுவது அவளுக்கு மிகப் பிடித்த ஒன்று. அவள் வருகைக்காகவே எத்தனை வேலையிருந்தாலும் அம்முவை எதிர்பார்த்தபடி வாசல் கதவிற்கு எதிரிலுள்ள சோஃபாவில் அமர்ந்திருப்பாள் லதா. அம்மாவின் அன்பு முத்தத்தினை எதிர்பார்த்தபடியே வீட்டுக் கதவை திறந்தாள் அம்மு. வழக்கமான அதே புன்னகை தளும்பிய முகத்தோடு பறக்கும் முத்தமொன்று கொடுத்து விட்டு "ம்... என் ராசாத்தி பைய இறக்கி வச்சுட்டு ரெண்டு நிமிஷம் உட்கார்ந்திருக்குமாம், அம்முகுட்டிக்கு அம்மா காப்பி எடுத்துட்டு வருவேணாம். அது வரைக்கும் தாத்தா பாட்டி கூட பேசிக்கிட்டு இருங்க" சமையலறைக்குள் நுழைந்தாள் லதா.

பையை இறக்கி வைத்துவிட்டு தாத்தா பாட்டியிடம் அன்று பள்ளிக்கூடத்தில் அவள் கூடப் படிக்கும் சுந்தரை அடித்துவிட்டதை சொல்லி முடித்தாள். தனது காலில் அடிபட்டதையும் காண்பித்தாள். தாத்தாவும் பாட்டியும் அவள் காலைப் பார்த்து சலனப்படாமல் அவளிடம் சுந்தரை அடித்தது குறித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். லதாவும் அவளுக்கு அடி பட்டதை பெரிதாகப் பொருட்படுத்தாமல் அவளுடைய தைரியத்தைப் பாராட்டிய படி இருந்தாள்.

"அம்மு, அம்மாகிட்ட வந்து காப்பி வாங்கிட்டுப் போ, அம்மா அடுத்து சமையல் வேலை செய்யணும்" லதா கொஞ்சும் குரலில் அம்முவை அழைத்தாள். அம்மாவிடம் காப்பி வாங்கி வர சமையலறைக்குள் ஓடிப் போய் அம்மு சிணுங்கிக் கொண்டே "அம்மா, காப்பி தா". "இதோ இங்க இருக்கு பாரு, எடுத்துக் குடிம்மா, பக்கத்துலேயே மிச்சர் எடுத்துக்கோ" லதா. மெதுவாய் காப்பியையும் மிச்சரையும் சாப்பிட்டு முடித்துக் கொண்டிருக்கையில் அவளுடைய அப்பாவும் வந்தாயிற்று. "ஹை அப்பா, அப்பா" சத்தமிட்டுக்கொண்டே ஓடிப் போய் ராஜேஷின் அருகில் சென்று நின்று கொண்டாள். அவளுக்கான வழக்கமான முத்தத்தைப் பரிசாக கொடுத்துவிட்டு "அப்பா போயி ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன், அப்பா உனக்குப் பிடிச்சது ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன், இன்னைக்கு என் அம்முக்குட்டிக்குப் பிறந்தநாளேச்சே, உங்கம்மா, எங்கம்மா, எங்கப்பா எல்லோரையும் ரெடியா இருக்க சொல்லு" சொல்லிக் கொண்டே வேகமாய் மாடியிலிருக்கும் அறைக்குச் சென்றான்.

"அம்மா, அப்பா வந்துட்டாங்க நீ சீக்கிரம் வாம்மா, தாத்தா பாட்டியும் ரெடி" படபடத்துக் கொண்டிருந்தாள் அம்மு. இரண்டே நொடியில் எல்லோரும் தயாராய் இருந்தார்கள். எல்லோரும் அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாட அவளுக்காக வாங்கி வந்த கேக்கை வெட்டி முடித்தாள். அவளுக்குப் பிடித்த பெரிய கரடி பொம்மையை எல்லோரும் சேர்ந்து பரிசாகக் கொடுத்தார்கள். அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டே சிலிர்த்துப்போய் நின்றாள். "அம்முக்குட்டி ஓடிப் போயி தாத்தாக்கும் பாட்டிக்கும் தண்ணி எடுத்துட்டு வருமாம், தாத்தாவும் பாட்டியும் உனக்கு இன்னைக்கு சிங்கம் கதை சொல்லுவோமாம், சீக்கிரம் போ" செல்லமாக முதுகைத் தட்டினார் அம்முவின் தாத்தா. டுர்ர்ர்ர்ர் என வாயிலேயே வண்டி ஓட்டிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்து "அம்மா தாத்தாக்கும் பாட்டிக்கும் தண்ணி வேணுமாம்". இரண்டு குவளையில் தண்ணீரை ஒரு தட்டில் வைத்து கவிழாமல் பிடித்துக் கொண்டே சோஃபாவின் அருகில் வந்தாள்...

கடிகாரம் 9.30 மணியைக் காட்டியவாறு இருந்தது. கார் வரும் சத்தம் கேட்டது, அங்கிருந்த ஒருவரை ஒருவர் பார்த்துப் பதறியபடியே முழித்துக் கொண்டிருந்தனர். "அம்மு, யாரு வர்றது? நாங்க கிளம்பட்டுமா" ராஜேஷும் லதாவும் பதட்டமானார்கள். சரியென தலையசைத்தாள் அம்மு. மறுநொடியே இருவரும் மறைந்தனர். இருவர் காலடிச் சத்தம் அருகி வருவது போல இருந்தது. உடனே தாத்தாவும் பாட்டியும் விடைபெற்றுக் கொண்டு சோஃபாவின் பின் சென்றவாறே மறைந்தனர். சட்டென வெயிலைக் கண்ட இருளாய் அறையில் இருந்த எல்லோரும் ஒவ்வொரு மூலைக்கும் ஓடி மறைந்தனர். வாசற்கதவு திறக்கும் சத்தம் கேட்டது, திடுக்கிட்டவளாய் திரும்பிப் பார்த்தாள் அம்மு.

"என்ன அம்மு, யாருமே இல்ல, கையில வெறும் தட்டை வச்சுகிட்டு என்ன செஞ்சுட்டு இருக்க? அம்மா இதோ முப்பது நிமிஷத்துல சாப்பாடு செஞ்சுத் தர்றேன்" லதா. "தினமும் இப்படி ரெண்டு பேருக்கும் நேரமாயிடுது, அம்மு பாவம் தினமும் இப்படித் தனியா வீட்டுல இருக்க வேண்டியதாயிடுது, எங்க அப்பா, அம்மாவை இங்க கூட்டிகிட்டு வந்துடலாம்னா அதுக்கும் வேண்டாம்ங்குற..." வெறுத்துக் கூறிய படியே மாடிப்படி ஏறிப் போய்க் கொண்டிருந்தான் ராஜேஷ்.

அவன் பெயர் பழனிவேல்...

பால்ய காலத்து குறிப்புகள் - 3

ஒரு நீண்ட தனிமையின் பின்னர் தூங்கிவிடும் சில இரவுகளில் திடீரென என் கனவைக் கிழித்து வரும் ஒரு கூரிய தென்றலாய் அவன் ஞாபகம்... சற்று நேரம் விழித்திருந்து அவனைப் பற்றிய நினைவுகளை அசைபோட்டு விட்டு இப்பொழுது அவனைச் சந்திக்க முடியாத சூழ்நிலையை எண்ணி மனக்கனத்தோடு மீண்டும் தூங்கிவிடுவது வழக்கம். அவன் எங்கே இருந்தாலும் அவனுக்கான ஒரு ஆத்மார்த்தமான இடம் என் மனதில் என்றும் உண்டு. அவன் பெயர் பழனிவேல்...

ஒவ்வொரு நாளும் காலை அம்மாவிடம் சென்று தொண்டைக்குள் தொடங்கி உதட்டிலேயே முடிந்துவிடும் கம்மிய குரலில் "இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டுக்குறேம்மா, நாளையில இருந்து ஸ்கூலுக்கு போயிடுறேன்" என்று கூறுவது எனக்கு பழக்கம். அப்பொழுது தான் என் அம்மாவுடன் பழக்கமானார் பழனியம்மா, ஆம் இன்று வரை அவர்கள் பெயர் எனக்குத் தெரிந்ததில்லை, அவர்களை அப்படி அழைத்தே பழக்கப் பட்டுவிட்டேன். என்னை பள்ளிக் கூடத்திலிருந்து சில நேரம் கூட்டி வரும் என் அம்மாவும், பழனியம்மாவும் பேசிக் கொண்டே வருவார்கள். நான் எல்.கே.ஜி, யூ.கே.ஜி படித்தபொழுது சீறுடை அணிந்தால் பள்ளிக்குத்தான் போகிறேனென எண்ணிக் கொண்டு சீருடை அணிய மாட்டேனென வண்ண உடை போட்டுக் கொண்டு பள்ளிக் கூடம் கூட்டிப் போய், பள்ளிக்கூடத்து ஆயா முன்னர் என்னை சீருடை அணிய வைப்பார்களாம், சின்ன பிரம்பைக் காட்டி பயமுறுத்திய படியே, இந்தக் கதையெல்லாம் பழனியம்மாவிற்கு மனப்பாடமே ஆயிருக்கக் கூடும்.

அப்பொழுது கிடைத்த என் பால்ய காலத்து சிநேகிதன்தான் பழனிவேல். அவனுடன் பழக ஆரம்பித்த பிறகு பள்ளிக்கூடத்திற்கு லீவு எடுப்பதாகக் கூறி வந்ததை நிப்பாட்டிக் கொண்டேன். அவனும் நானும் ஒரே வகுப்பில் படித்ததே இல்லை, இருப்பினும் ஒவ்வொரு சாயங்காலமும் என் அம்மாவுடனோ, அல்லது அப்பாவின் வண்டியிலோ நானும் அவனும் வந்திடுவோம். அப்பொழுதெல்லாம் என் அப்பாவின் முன்னர் நானும், அப்பாவின் பின்னர் அவனும் உட்கார்ந்து கொள்வோம். ஒருநாள் பழனி என் அப்பாவிடம் "பாஸ்கரப்பா, நீங்க பாட்டு பாடிட்டு வர்றீங்களா?" என்று கேட்டான். அதைக் கேட்டு என் அப்பாவிற்கு பயங்கர ஆச்சரியம், வாயைத் திறந்து பாடவில்லை, அதுவும் எனக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் சிறுவனுக்கு எப்படி தெரியவந்ததென்று... எங்களை இறக்கிவிடும் போது, உனக்கெப்படி தெரியுமென அப்பா கேட்டதற்கு அவன் கூறிய பதில் என் முதல் ஸ்டெதஸ்கோப் சோதனை அனுபவம்... "பாஸ்கரப்பா, நான் கீழ விழுந்துடக் கூடாதுன்னு உங்கள கெட்டிமா புடிச்சுப்பேனா, அப்போ முதுவுல காத வச்சு கேக்கும்போது நீங்க பாடுறது கேக்குது" என்று. என் அப்பாவிற்கும் அந்த சோதனை புதிதுதான், அவனை மெச்சிக் கொண்டார் அன்று முழுவதும்.

நான் ஆறாவது படிக்கும் காலத்தில் அடிக்கடி அப்பாவை வரவேண்டாமென்று சொல்லிவிட்டு அவனும் நானும் 1 மணி நேரம் நடந்தே பள்ளியிலிருந்து என் வீட்டிற்கு வந்திடுவோம். வருகிற வழியில் கிடக்கும் ஒருவித பெயர் தெரியாத இனிக்கும் காயை எடுத்துச் சப்பிக் கொண்டு போனது இன்னும் நாக்கில் அதன் சுவையையும், என் சுவாசத்தில் மணத்தையும் கொண்டு வருகிறது. சில நேரம் குச்சி ஐஸ், சில நேரம் தர்பூசணி என்று என் வீட்டில் தினமும் கொடுக்கும் 1 ரூபாயில் 50 பைசாவிற்கு எதையாவது வாங்கிவிடுவோம். ஒரு நாள் வெயில் காய்ந்துகொண்டிருந்தது, அவன் செருப்பு பிய்ந்துபோய் விட்டதென்று அன்று செருப்பில்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் காலைத் தூக்கி தூக்கி நடப்பதைப் பார்த்து மனசு பொறுக்காமல் "என்னோட செருப்பைப் போட்டுக்கோ, எனக்கு வெயில் ஒன்னும் பண்ணாது" எனக்கூறி அவனை சமாதானமடைய வைத்து செருப்பை மாட்டிக்கொள்ளச் செய்தேன். உண்மையில் நான் செருப்பின்றி எங்குமே சென்றதில்லை. எனக்குக் கால் வெகுவாகச் சுட்டது, இருப்பினும் அதைக் காட்டிக் கொள்ளாமல் வீடு வரைக்கும் வந்து சேர்ந்தேன், என் வீடு வந்ததும் செருப்பைக் கொடுத்து விட்டு வீட்டிற்குச் சென்று விட்டான். இரவு முழுவதும் எனக்கு கால் வலிப்பதைப் பார்த்துவிட்டு அம்மா கேட்டவுடன் பயந்துபோய் உண்மையைச் சொல்லிவிட்டேன். "அவன் கர்ணன் மாதிரிடி" என்று என் அப்பா பெருமை பேசிக் கொண்டார், உள்ளுக்குள்ளே இப்படி விவரம் தெரியாம இருக்கானே பையன் என்ற எண்ணம் இருந்தது உண்மை. "அப்பா வேணும்னா அவனுக்கொரு செருப்பு வாங்கிக் கொடுத்துடுறேன், ஆனா இனி நீ செருப்பைக் கொடுக்க வேண்டாம்" என அப்பா சொல்லிவிட்டார்.

ஆறாவதில் நான் ஆங்கில வழிக் கல்வியிலும், அவன் தமிழ் வழிக்கல்வியிலும் படித்தோம். அவனது அப்பா தண்டபானி ஒரு மெத்தக் குடிகாரர். இருக்கும் பணம் எல்லாவற்றிற்கும் மொத்தமாகக் குடித்துவிட்டு பல நேரம் பழனியையும், பழனியம்மாவையும் அடிக்கும் பழக்கமுள்ளவர். அவனுக்கு எப்பொழுதுமே அவனது அப்பாவின் மீது ஏக பயம். படிப்பில் மதிப்பெண் சரியாக எடுக்காவிட்டாலும் அடி பயங்கரமாக விழும். இதனாலேயே பள்ளியருகே இருக்கும் ஒரு கோவிலில் உள்ள ஒரு இலையை எடுத்து படிப்பு இலை என ஒவ்வொரு புத்தகத்திலும் வைத்துக் கொள்வான். நான் வழக்கமாக ஒரு மயிலிறகும் அது வளர்வதற்கு இரண்டு அரிசியும் வைத்துக் கொள்வேன். அது வளருவது போலவே எனக்கும் ஒரு எண்ணமுண்டு அப்பொழுது.

பரீட்சை எல்லாம் முடிந்து நாங்கள் கோலி பம்பரம் பட்டமென விளையாட்டை ஆரம்பித்த தருணம் அது. பழனி என் தெருவைத் தாண்டி மண்ணெண்ணெய் வாங்கி வர சென்று கொண்டிருந்தான். "விளையாட வரலியாடா" என்றேன். "தோ, பாஸ்கரு, கிருஷ்ணாயில் வாங்கி வீட்ல குடுத்துட்டு உங்கூட வெளாட வர்றேன்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் எனது தெருவில் எல்லோரும் முணுமுணுத்துக் கொண்டே ஓடினார்கள், என் அம்மாவும் சேர்ந்து. என்னவாக இருக்குமென நானும் பின்னாடியே சென்றேன், அது பழனி வீட்டு முன்னர் போய் நின்றது. கூட்டத்தில் ஒருவர் என் அம்மாவிடம் கூறினார் "பாவம்மா அந்தப்புள்ள... கிருஷ்ணாயில் வாங்கக் கொடுத்த காச வழியில தொலைச்சுடுச்சு, அதுக்கு பழனியம்மா இரு இரு அப்பா வரட்டும் உனக்கு வச்சுக்குறேன்னு சொல்லிட்டு அது ரேஷணுக்கு போயாரதுக்குள்ள இந்தப் புள்ள தூக்கு மாட்டி செத்துப் போச்சும்மா" என்றார். அதிர்ச்சியில் என் அம்மாவும், அழுகையில் நானும்....

"தற்கொலை செஞ்சுக்குறது கோழத்தனன்டா பாஸ்கரு" என்று ஒரு முறை அவன் கூறியது ஞாபகம் வரவே அவனது பூத உடலை பார்க்க மாட்டேனென கோபித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடிவிட்டேன். இப்பொழுதும் யாராவது சின்னக் குழந்தை காசைத் தொலைச்சுட்டேன்னு அழுதா அது எவ்வளவு பணமா இருந்தாலும் உடனே நான் அதைக் கொடுத்துவிடுவேன், கொடுக்கும் பொழுதெல்லாம் பழனி என் கண்முன் வந்து மறைவான். ஒவ்வொரு முறையும் நான் கனவில் விழித்துக் கொள்ளும் பொழுதெல்லாம் தோன்றும், அவனைக் கடைசியா ஒரு முறை பார்த்திருக்கலாமோவென்று...


அவன் பெயர் டோனி...

கடந்தகால குறிப்புகள் - 2
அவன் பெயர் டோனி...

சூழ்ந்திருக்கும் மனிதர்களுக்கு மத்தியிலும் தனிமைப் படுத்தப் பட்ட ஒரு தருணமது. அந்தப் பிஞ்சு மனதிற்குள் அதற்கான காரணங்களாய் சில வேர்கள் மனம் கிழித்து வளர்ந்து நின்றது. அந்த வேர்கள் கிழித்துப்போன இடத்தினிலிருந்து சொட்டுச் சொட்டாய்க் கசிந்திடும் இரணங்களே அந்த வேர்களுக்கு நீராய் மாறியது. மெல்ல மெல்ல அந்த வேர்கள் அவன் முகங்களில் தனிமைக் கிளைகளைப் பரப்பி அதில் கனவு இலைகளை வளர்த்துக் கொண்டிருந்தது.

மெல்ல மெல்ல அவன் அந்தத் தனிமையின் ரசிகனாகிவிட்டான். அவன் முகம் மீது வளர்ந்திருக்கும் அந்த தனிமை மரம் அவனுக்கோர் கற்பக விருட்சமாய்த் தெரிந்தது, அதிலே சுந்தரக் காய்கள் முளைப்பது போலவும், வண்ண மலர்கள் பூப்பது போலவும் கனவு கண்டு கொள்வான் கண்கள் திறந்துகொண்டே. காலை ஏழு மணிக்கே பள்ளி சென்றதும் மற்ற நண்பர்கள் வரும் வரை அந்த பகற்கனவில்தான் அவனது வசந்தம். இன்னும் பேருந்துப் பயணம், வீட்டில் அவனது பெற்றோர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நேரம், அப்படி இப்படியென அவனது தனிமைப் பொழுதுகள் முழுதும் கனவுகளே அவனை வசீகரித்துக் கொண்டிருந்தது. போதைக்கு அடிமையானவனைப் போல, அவனே வீட்டிலுள்ள உரையாடல்களை மெல்ல மெல்ல தவிர்க்க ஆரம்பித்து அவனை அவனே அந்த தனிமைச் சிறையில் செல்லக் கைதியாய் அடைத்துக் கொள்வான். உடனே அந்த கனவுலக தேவதை அவன் எண்ணங்களில் வடிய ஆரம்பித்துவிடுவாள். அந்தக் கனவுலகில் அவனுக்கான தாய், தந்தை, தங்கையென சொந்த பந்தங்கள் இப்படியாய் நீண்டு கொண்டே இருந்தது.

அது ஒரு பின்பனிக்காலம். அன்று அவனை பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டுக்கு அழைத்துவந்த அப்பா, அவனுக்கான பரிசுப் பொருளொன்று வீட்டில் இருப்பதாய் சொன்னார். அவன் அந்தப் பரிசைப் பற்றிய கற்பனைகளில் இறக்கைகளை வளர்த்துக் கொண்டு அவனது கனவுலகம் பூராவும் பறந்து சென்று, நமது உலகத்தின் இன்னொரு விருந்தாளி என உறக்கச் சொல்லியபடியே வீட்டுக்கு வந்தான். அங்கே வேகமாய் வீட்டுக்குள் நுழைய எத்தனிக்கும் பொழுது கருகருவென ஒரு நாய்க்குட்டி வாசலருகே கட்டிப் போடப் பட்டிருந்தது. உயிரற்ற பல பரிசுப் பொருள்களைக் கற்பனையில் சிந்தித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு உயிருள்ள பரிசுப் பொருள் மிகப் பெரிய பொக்கிஷமாய்த் தெரிந்தது. அருகே செல்ல சின்ன பயம் வேறு... கடித்து விடுமோவென்று...

அது ஒரு குள்ளசாதி நாய், குட்டையாய் ஆனால் நீளமாய் வளரும். அதன் காது தரை வரை தொங்கி ஊசலாடும். கருப்பு நிற வெல்வெட்டாய் அதன் மயிர்க் கற்றைகள். தாயைப் பிரிந்த ஏக்கம் அதன் கண்களில் வெகுவாகத் தெரிந்தது. ஒரு வாசல் அடைத்தால் மறுவாசல் திறக்கும் என்ற முதுமொழியின் அர்த்தம் அந்த இருவருக்குமே உண்மையானது. ஆம், அந்தச் சிறுவனின் நிழல் உலகிலிருந்து அவனுக்கான நிஜமாய், இன்னொரு தாய்... நாய் வடிவில்... அந்த நாய்க்கோ அந்தச் சிறுவன் வடிவில் ஒரு மாற்றுத்தாய். இருவருக்குமே பூரிப்பு. மெல்ல மெல்ல அந்த நாய் வளர்ந்தது, அவனது பாசக் கரங்களின் ஆயுள் ரேகைகளோடு சேர்ந்துகொண்டு...

டோனி என்றதும் எங்கிருந்தாலும் ஓடிவந்திடும். ஓடி வந்து அவனைத் தாண்டி வழுக்கிச் சென்றபடி நின்று பின் அங்கிருந்து மீண்டும் அவனிடம் வந்துசேர்வதே அதன் பழக்கம். அவன் சுவரில் முதுகு சாய்த்து காலைச் சம்மளமிட்டு கையில் புத்தகத்தோடு படிக்க ஆரம்பிக்கையில் அது மெல்ல மெல்ல அவன் கரங்களுக்கும் தொடைகளுக்கும் நடுவே முகம் புதைத்துக் கொள்ளும். அவன் மெல்ல மெல்ல கனவுலகிலிருந்து மீண்டு நிஜ உலகிற்கு வரத்தொடங்கினான் டோனியின் ஸ்பரிசத்தினூடே... வீடு முழுக்க எங்கேயும் மண்தரைக்கான இடமேயில்லை, அது ஒரு சின்ன இடம், முழுவதும் வீடும், சுற்றுச் சுவரும், சிமெண்டால் பூசப்பட்ட முற்றமுமென இருக்கும். அந்த நாயை வீட்டுக்கு வெளியில் கொண்டு சென்று மலம் கழிக்க சொன்னால், அது கேட்காது. எவ்வளவு தூரம் அடக்க முடியுமோ அடக்கிக் கொண்டு வீட்டிற்குள் அழைத்து வந்ததும் தன் காலைக் கடனை முடித்து விடும். வழக்கம்போல அதை அள்ளுவது அவனது அப்பா, அம்மாவின் வேலை.

மெல்ல மெல்ல டோனியின் மீதான பாசம் சிறுவனின் அம்மாவிற்கு குறைய ஆரம்பித்தது. "ஏன் நாயை வளர்ப்பானேன் பீயைச் சுமப்பானேன்" என்ற சொற்கள் அடிக்கடி விழ ஆரம்பித்தது. அந்தச் சொற்கள் சிறுவனின் மனதிற்குள் சின்ன சின்ன குண்டூசியாய் குத்த ஆரம்பித்தது. அவன் டோனியிடம் கெஞ்சலானான், அம்மா சொல்வதைப் போல கேட்டு நடந்து கொள்ளென்று... டோனி கேட்டபாடில்லை. அதன் சேட்டைகள் தொடர ஆரம்பித்தது.

மெல்லமெல்ல வரத்தொடங்கிய அந்த மழைக்காலம் கொஞ்சம் கொஞ்சமாக பேய்மழையாய் பெய்யத் தொடங்கியது. மழையென்றதுமே அந்தச் சிறுவனின் வீட்டு முற்றத்தில் தண்ணீர் தேங்கிவிடும். டோனியை வீட்டிற்குள்ளே வைத்திருக்க வேண்டிய சூழல். ஆனால் அவனோ வீட்டிற்குள்ளே படுக்கையறையிலேயே சிறுநீரும், மலமும் கழிக்க ஆரம்பித்துவிடுவான். கொஞ்சமாய் மழை ஓய்ந்திருந்த காலம் வந்தது.

வழக்கம் போல சிறுவனை அவனது பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார் அப்பா. வீட்டில் அவன் இறங்கியதும் ஓடி வரும் டோனியைக் காணவில்லை. தேடினான் கிடைக்கவில்லை. அம்மாவிடம் கேட்டான், "டோனி எங்கம்மா?". அங்கிருந்து ஒரு பதில் எந்த வித சலனமுமின்றி வந்தது "அதை இன்னொருத்தருகிட்ட கொடுத்தாச்சுப்பா, அதை வச்சு நம்மளால சமாளிக்க முடியாது....." அந்த வீட்டின் கூரையிலிருந்து சொட்டுச் சொட்டாய் தூறிக் கொண்டிருந்தது மீத மழை, அவனுக்கு காய்ச்சல் வந்து முணங்கிக் கொண்டிருந்தான் டோனி... டோனி... டோனி... என்று. அவனது கனவு தேவதை மீண்டும் அவனை அள்ளி அணைத்துக் கொண்டு அதே தனிமைப் பிரதேசத்தில் பயணிக்கத் துவங்கினாள்...

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது நடந்த சம்பவம்.

அவள் பெயர் ராஜராஜேஸ்வரி...

கடந்தகால குறிப்புகள் - 1

அவள் பெயர் ராஜராஜேஸ்வரி...

பென்ஸிலிலிருந்து பேனாவிற்கு தாவிய ரம்மியமான பொழுதுகள். நோட்டுகளுக்கான சட்டையைக் கூட நானே இட்ட இதமான கணங்கள். அப்பொழுதெல்லாம் ஒரு வகுப்பிற்கு ஒரே ஆசிரியர்தான். மூன்றாம் வகுப்பு கஸ்தூரி டீச்சர் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். ஒரு சமயத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் விடுமுறை எடுக்கச் செய்து ஊருக்குக் கூட்டிப்போக எத்தனித்துக் கொண்டிருந்த எனது அம்மாவிடம், "பையனை என்வீட்ல வேணும்னா வச்சுக்குறேன், சமத்துப் பையன்" என்று கூறி என் உச்சந்தலையை கஸ்தூரி டீச்சர் கோதிவிட்டது இன்னும் என் கண்ணுக்குள் காட்சி மாறாமல்...

அந்த டீச்சரே மீண்டும் வருவாரா என்ற ஏக்கத்துடன் தொடங்கியது கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் எனது நான்காம் வகுப்பிற்கான பயணம். வெள்ளைச் சட்டை, காக்கி கால்சட்டையென புத்தம்புது உடையில் சீறி வரும் காற்றை எதிர்கொண்டவாறே வண்டியில் பெட்ரோல் டேங்கிற்கும் அப்பா அமரும் இருக்கைக்கும் இடையே தொடர்ந்தது அந்தப் பயணம். எனக்கு எப்பொழுதுமே அப்படி அமர்ந்து போவது பிடிக்கும், அப்பாவின் இரும்புக் கரங்களுக்கூடே, வேகமாக செல்லும் வண்டியிலே மனதிற்குள்ளேயே நான் அந்த வண்டியை ஓட்டிச் செல்வதாய் ஒரு சின்ன நினைவோடு.... இனிமை.

9 மணி பள்ளிக்கூடத்திற்கு 7.15க்கே அப்பா என்னை அழைத்துச் சென்று விட்டுவிடுவது வழக்கம். அப்பொழுதுதான் அப்பா அவரது வேலையை கவனிக்க சரியாயிருக்கும். என்னுடைய பழைய வகுப்பறையில் சிறிது நேரம் உட்கார்ந்து பார்த்துவிட்டு. இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தேன். கோடை விடுமுறையின் இடைவெளிக்குப் பிறகு மீண்டுமந்த பள்ளிக்கூட மண்வாசனை மூக்கைத் துளைத்தது. நேரம் கடக்க கடக்க எனது வகுப்புத் தோழர்களெல்லாம் வந்தார்கள். தலைமையாசிரியர் அறைக்குச் சென்று எனது வகுப்பெதுவென்று தெரிந்து கொண்டு பவனி செல்லும் ஒரு ராஜாவைப் போல வீர நடையோடு வகுப்பு நோக்கிச் சென்றேன். 9 மணி ஆனதும் உள்ளே நுழைந்தார் எங்கள் பள்ளியிலே கண்டிப்பான டீச்சர் பட்டியிலில் ஒருவராய் இருக்கும் சரோஜா டீச்சர். அவரைப் பார்த்ததுமே சின்ன நடுக்கம், இனம் புரியாத சின்ன பயம். தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, வகுப்பு நாளேட்டை வாசிக்கத் துவங்கினார்.

ஒவ்வொருவராக "உள்ளேன் டீச்சர்" சொல்லிக் கொண்டு வந்தவேளை எனக்குப் பழகாத ஒரு புதிய குரல் "யெஸ் மேடம்" என்றது. யாரது வித்தியாசமாக சொல்வது என்ற எதிர்பார்ப்புடன் திரும்பிப் பார்த்தால், எனது உயரம் மதிக்கத்தக்கவள், பளீர் நிறம், இரட்டை ஜடை, அகன்ற சிரிப்பு, சின்னப் பொட்டு, காலில் வெள்ளிக் கொலுசென எனது வகுப்புக்கு ஓர் புது வரவு.

அவளைப் பற்றிய எந்த எண்ணமுமே இல்லாமல் கழிந்தது முதல் இடைத்தேர்வு வரை. அந்த முதல் இடைத்தேர்வில், வழக்கமாக நான் வாங்கும் முதல் ராங்க் அவளெடுத்துவிட்டாள். எனக்கும் அவளுக்குமான மதிப்பெண் இடைவெளி 15 தேறும். நான் வாடிப் போய்விட்டேன். அது நாள் வரை வகுப்பின் சாக்பீஸ், டஸ்டர் எனது கண்கவனிப்பில் இருந்தது மாறிப்போய் அவளது கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. வீட்டிற்கு ராங்க் கார்டை எடுத்துச் சென்றால் "என்னடா முதல் ராங்க் வாங்காமல் இரண்டாவது வந்திருக்க" என்ற கேள்வி, அதுவும் என் அத்தைப் பெண்கள் இருக்கும் நேரத்தில். நான் பளீரென்று பதில் சொன்னேன் "அவள் மட்டும் காலாண்டுக்கு ஒரு பாடத்துக்காவது லீவ் போடட்டும், நான் தான் முதல் ராங்க் வாங்குவேன்" என்று. அங்கிருந்த அத்தனை பேருக்கும் கலீரென்ற சிரிப்பு.

சொன்ன படியே அவள் காலாண்டிற்கு அறிவியல் தேர்விற்கு வரவில்லை. வேறென்ன... நான் தான் முதல் மதிப்பெண். இருப்பினும் அவளுக்குமெனக்குமான மதிப்பெண் வித்தியாசம் வெறும் 25குள்ளாகத்தான். அவள் அறிவியலில் தேர்ச்சியடைந்திருந்தாலே என்னை விட நிச்சயம் முன்னால் சென்றிருப்பாளென என் உள்ளம் துடித்துக் கொண்டது. குரூப் ஸ்டடீஸ் என்ற முறையை அறிமுகப் படுத்தினார் சரோஜா டீச்சர். அதில் முதல் 8 மதிப்பெண் எடுத்தவர்கள் குரூப் லீடராகவும், மீதமுள்ளோர் அவர்களின் அங்கத்தினராகவும் இருக்க வேண்டும், தலா 5 பேர் கொண்ட குழு. மாலை வகுப்பின் கடைசி மணி நேரத்தில் அன்று கொடுத்த கேள்வி பதில்களை மனப்பாடம் செய்யச் சொல்லி சரியாக மாணவர்களை ஒப்பிக்க வைக்க வேண்டியது எங்களது பொறுப்பு. பின்னர் குரூப் லீடரெல்லாம் சேர்ந்து சரோஜா டீச்சரிடம் ஒப்பிக்க வேண்டும்.

அப்பொழுது அவளே வந்து எனது முதுகின் பின்னமர்ந்துகொண்டு பேசலானாள். அவளை ராஜ ராஜேஸ்வரி என்று முழுப் பெயர் சொல்லித்தான் அழைப்பேன். எனக்கு மிகவும் நெருங்கிய தோழியாகிவிட்டாள். நாங்கள் இருவரும் சேர்ந்து படிப்பதும், அவ்வப் பொழுது சாப்பிடுவதும், குரூப்பை கவனிக்க மறந்து சிரித்து பேசிக் கொள்வதும் வாடிக்கையாகிப் போனது. ஆனாலும் அதன் பிறகு அந்த முதல் மதிப்பெண்ணை நான் தவறவிடவில்லை, அவள் எல்லா தேர்விற்கும் வந்தும். ஆனால் அந்த சாக்பீஸையும் டஸ்டரையும் அவள் என்னிடம் கொடுத்த பொழுது நீயே வைத்துக் கொள் என்று பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தேன். நான் வருடா வருடம் வரைதல் போட்டியில் முதலிடம் பிடித்துவிடுவேன், அவளும் அதைப் பாராட்டுவாள். 5ம் வகுப்பிற்கும் அதே சரோஜா டீச்சரே வந்தார். என் வகுப்புக்காரி ஒருத்தி ஓடி வரும்போது திண்ணையில் வழுக்கி முழங்கைக்கு கீழே உடைந்து போனது. அதைப் பார்த்த பதட்டத்தில் என் கைகளை அவள் இறுகப் பிடித்துக் கொண்டாள். இருவரும் அப்படியே உறைந்து நின்றோம் சற்று நேரம்.

5ம் வகுப்பு இறுதித் தேர்வும் முடிந்த பிறகு சொந்த ஊருக்குப் போகும் கனவோடே சட்டென பள்ளிக்கூடத்தை விட்டு கிளம்பிவிட்டேன். 5ம் வகுப்பு வரைதான் அந்த பள்ளிக் கூடத்தில் உண்டு. அதன் பிறகு ஆண்களுக்குத் தனிப் பள்ளி, பெண்களுக்குத் தனிப் பள்ளியென பிரிந்துவிடும். இரண்டும் அக்கம்பக்கம் கூட இல்லை, கொஞ்ச தூரம் போகணும். தேர்வின் முடிவுகளைப் பார்த்துவிட்டு சான்றிதழ்கள் வாங்க வந்த அன்றுதான் என் மரமண்டைக்கு எட்டியது இனி ராஜ ராஜேஸ்வரியைப் பார்க்க முடியாதுன்னு. அவள் இன்னும் எனது எண்ணங்களை விட்டகலாத என்னுடைய முதல் தோழியாகவே இருக்கிறாள்.

தோப்பு

மழைத் துளி மேலே பட்டதாய் உணர்ந்தான். மயக்கம் தெளிந்து மெல்ல கண்விழித்தான். சுற்றிலும் யாரும் இல்லை... யார் தண்ணீர் ஊற்றியது என்று குழம்பிக் கொண்டே, தனது முகத்தை துடைத்தான் மாயன். அது தண்ணீரல்ல, காகையின் எச்சம் எண்பதை உணர்ந்தான். மெல்ல மெல்ல கை ஊன்றி எழுந்தான்.

பசிக்கொடுமை தாங்காது வயிறு புறமுதுகிட்டு ஓடியது, புறமுதுகையே தொட்டுவிட்டது. செங்கல் சூளையில் நிற்பது போன்ற வெப்பம் அவன் உடலெங்கும் பிய்த்தது. சற்றே நினைவுகூர்ந்தான், எதற்கு மயங்கினோம்? மேலே சூரியனை ஏறிட்டுப் பார்த்ததும் மயங்கிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.

அவன் நாக்கு மேல்வாயில் ஒட்டிக் கொண்டது. அப்படியே தொடர்ந்து நடந்தான். அவனது சரும வெடிப்பு தரையில் தண்ணீரின்றி வந்த வெடிப்புகள் போலவே இருந்தன. தண்ணீர் தண்ணீர் என்று முணங்கிக் கொண்டே நடந்தான். இரண்டு மணி நேரம் நடந்தான். வரும் வழியில் ஓய்வெடுக்க ஒரு மரத்தில் கூட இலைகளே இன்றி இருந்தது. ஒரு சில மரமும் கருகிய நிலையில் நின்று கொண்டிருந்தது. அதற்கு மேல் அடியெடுத்து வைக்க முடியாது விழுந்தான் மாயன். அவனை அங்கிருந்த மூன்று பேர் தூக்கிக் கொண்டு போய் அருகிலிருந்த வீட்டுத் திண்ணையில் கிடத்தினார்கள்.

"ஏய் இங்க வா புள்ள, இந்தா ஒரு ஆளு உசுரு போறாப்புல இருக்கு, கொஞ்சம் அத எடுத்துட்டுவா" என்றான் கூட்டத்திலிருந்த ஒருவன். "நீ பாட்டுக்கு போற வர்றவனையெல்லாம் இழுத்துட்டு வந்துகிட்டு இருக்க, குடுக்குறதுக்கு நான் எங்க போறது. ஊரே தண்ணி இல்லாம செத்துகிட்டு கெடக்கு..." என்று கூறிக் கோப்பை நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தாள். அருகில் வந்ததும் அலறிக் கத்தினாள்... "அப்பா, அப்பா" என்று அலறினாள்.

"ஏய் இந்தா புள்ள, இது ஒ அப்பனா? நல்லா பாத்து சொல்லுடி" என்றான் அவள் கணவன் ராசு. "என்னத்த சொல்லுவேன், இப்படி வந்து கெடக்காகளே, நான் என்னத்த சொல்லுவேன். இருக்குறத குடிச்சுட்டு அவுகளாவது நிம்மதியா இருக்கட்டும்னுதானே வீட்ட விட்டு ஓடியாந்தேன், இப்படி ஒடிஞ்சு போயி கெடக்காகளே, நான் என்ன பண்ணுவேன்" என்று புலம்பிக் கொண்டே இருந்தாள். அவள் கையிலிருந்த கோப்பையை வாங்கி அவர் வாயில் தண்ணீர் ஊற்றினான் ராசு. மாயனுக்கு மெல்ல மெல்ல மயக்கம் தெளிஞ்சுது.

இலைகளைனூடே பாயும் கதிர் போல வரண்டு போன இமைகளினூடே பொறுமையாய் பார்த்தான் மாயன். அவனுக்கு எங்கிருக்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமலிருந்தது. உற்றுப் பார்த்தான், அது அவள் மகள் இந்திரா போல தெரிந்தது. "இந்திரா இந்திரா" என்று முணங்கினான். அவள் மாயனை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அழுதாள், "அம்மா எங்கப்பா, அம்மா எங்க" என்றாள்.

புற்றுக்குள் மறைந்திருக்கும் பாம்பு வெளி வருவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு வந்தது மாயனுக்கு. "உன் அம்மா பட்டினியா இருக்கா, ஏதாச்சும் கெடைக்குமானுதான் நான் இம்புட்டு தூரம் நடந்தாந்தேன். நான் வூட்டுக்குப் போகணும் வூட்டுக்குப் போகணும்" என்று சொல்லிக் கொண்டே மேலெழுந்தான்.

"இருப்பா, எலிக்கறி இருக்கு சாப்பிட்டுட்டு, அம்மாக்கு ஒரு எலிக்கறி கொண்டு போப்பா. இந்த பிளாஸ்டிக் பையில் ஒரு டம்ளர் தண்ணி இருக்கு, இதையும் கொண்டு போப்பா" என்று குரல் கரகரத்துக் கூறினாள் இந்திரா. மாயன் அதையெல்லாம் பொருட்படுத்தாம "அஞ்சல, அஞ்சல" என்று அவர் மனைவியின் பெயரை உரக்கக் கூவினார்....

"என்னாங்க என்னாங்க, என்னாச்சு இவருக்கு.... தண்ணி கிண்ணி குடிக்குறீயளா? ஏ இந்தா முழியுங்க.." அஞ்சலை.

தான் இவ்வளவு நேரம் கனவு கண்டதை உணர்ந்த மாயன் மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டு சன்னல் வழியே பின்னால் இருந்த தோப்பை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அஞ்சலை அவனருகே வந்து "தண்ணிய குடிச்சுட்டு தூங்குங்க, நாளைக்கு வெடிய காலையில தோப்ப அந்த கூல்டிங்க்ஸ் காரனுக்கு முடிச்சுக் கொடுக்கப் போகணும்ல" என்றாள்.

தண்ணீர் ஒரு செம்பு நிறைய குடித்துவிட்டு, கட்டிலில் சாய்ந்து கொண்டே மெதுவாய் அஞ்சலையிடம் சொன்னான், "நாம, நம்ம தோப்பை விக்க வேணாம், அது இருக்கட்டும்..." என்று கூறிக் கொண்டே கண் மூடினான்.

மனிதமென்னும் மந்திரம் - சிறுகதை

அப்துல்லா எளிதில் யாருடனும் பழகிவிடும் ஒருவன். வேலை காரணமாக ஒரு சேவல் பண்ணையில் தங்கியிருந்தான். அவன் அறைக்கு அன்று புதிதாய் ஒருவர் இணையவுள்ளார் என்பதை பண்ணைக் காவலர் கூறியிருந்தார்.

"என்ன பாண்டியண்ணே புதுசா இன்னைக்கு யாரோ வர்றாருன்னீங்க, இன்னும் வரலையா?"

"வந்துடுற நேரம்தாம்பா, 8.00 கு இன்னைக்கு வர்றேன்னாரு, 8.30 ஆயிடுச்சு, வந்துடுவாரு."

"சரிண்ணே, புதுசா ஒரு சாவி போட்டுருங்க, இன்னைக்கு வர்றவருக்குத் தேவைப்படும். நான் வேலைக்குப் போயிட்டு வர்றேன்."

வீட்டைக் காலிபண்ணும்போது சாவியையும் சேர்த்தே கொண்டு போயிடுறானுக, ஒவ்வொரு தடவையும் புது சாவி போட வேண்டி கெடக்கென்று புலம்பிக் கொண்டே சாவியை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார்.

கட்டிட வேலை கண்காளிப்பாளன்ங்குறதால அடிக்கடி ஒவ்வொரு ஊருக்குப் போக வேண்டியிருக்கும். இந்த தடவை மதுரைக்கு வந்திருந்தான். பல நேரம் வேலைக்குப் போயிட்டு அடுத்த நாள் காலையில கூட வருவான். வழக்கமா போற திருமங்கலம் ரோட்டுல பேருந்துல இருந்து இறங்கி கட்டிடம் கட்டுற இடத்துக்குப் போயிகிட்டு இருந்தான். வழியில கொஞ்சம் கூட்டமா இருக்குறதப் பார்த்து அங்கே போனான்.

"என்னாச்சுங்க, எதுக்கு இவ்வளவு கூட்டம்?"

"யாரோ வலிப்பு வந்து கிடக்குறாங்க, சாவி கொடுத்தும் நிக்கல" கூட்டத்துல இருந்த ஒருத்தர் கொஞ்சம் அலட்சியமாகவே பதில் சொன்னார்.

"தள்ளி வாங்க, அவருக்கு ஏதாவது ஆயிடப் போகுது, பக்கத்துல மருத்துவமனை எங்க இருக்கு?"

"பக்கத்து தெருவுல கூட ஒண்ணு இருக்குப்பா"

சடாலென கீழே விழுந்திருந்தவரைத் தூக்கிக் கொண்டே கொஞ்ச தூரத்துலேயே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அளவுக்கு அதிகமாகவே கொஞ்சம் மருத்துவமனையை பரபரப்பாக்கிவிட்டான் அப்துல்லா.

"யாருப்பா இங்க இவரை சேத்தது, அவருக்கு சரியாயிடுச்சு, கூட்டிகிட்டுப் போகலாம். அப்படியே நர்ஸைப் பாத்து காசு எவ்வளவுன்னு கேட்டுக்குங்க" டாக்டர் எந்தவித சலனமுமின்றி தனது வேலையை முடித்துவிட்டுக் கூறினார்.

வெளியே இருந்து ஓடிவந்த அப்துல்லா, மூச்சு இளைத்துக் கொண்டே கையிலிருந்த பையை கீழே வைத்தான்.
"நாந்தான் டாக்டர், அவரைக் கூட்டிகிட்டு வந்தேன். எப்படி இருக்காரு, பிரச்சினை ஒண்ணுமில்லையே?!"

உள்ளே சென்று அந்த நபரைப் பார்த்தான்.
"எப்படி இருக்கீங்க. உங்க பை இதுன்னு நினைக்குறேன். எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க. உங்களுக்கு எதுவும் பிரச்சினையில்லையாம். நீங்க இனி உங்க வீட்டுக்குப் போகலாம். பணத்தைக் கட்டிட்டேன். உங்களுக்கு ஆட்டோக்கு எதுக்கும் காசு வேணுமா?"

"உங்களைப் பார்த்தா இஸ்லாம் மாதிரி தெரியுது, நானும்தான். இன்ஷா அல்லா, நல்ல நேரத்துல என்னைக் காப்பாத்துனீங்க. இல்லைன்னா அங்கேயே செத்திருப்பேன்."

"யாருக்கா இருந்தாலும் செஞ்சிருப்பேன். எல்லாமே உயிர்தானே. காப்பாத்த மட்டும்தான் அல்லா உத்தரவிட்டிருக்கான் அழிக்க இல்ல. எனக்கு நேரமாகுது நான் கிளம்பணும். நீங்க எங்க போகணும்னு சொல்றீங்களா?"

"நீங்க செஞ்ச உதவியே போதும். இனி நான் போய்க்குறேன். நீங்க செஞ்ச உதவியை அல்லாகிட்ட போற வரைக்கும் மறக்க மாட்டேன்".

பையையும் எடுத்துக் கொண்டு சேவல் பண்ணையை நோக்கி நடந்தான் காதர்.
"இன்னைக்கு வர்றேன்னு சொன்னவன் நான்ந்தான். வர்றதுக்கு கொஞ்சம் தாமதமாகிடுச்சு. என்னோட அறை எதுன்னு சொல்றீங்களா?"

பாண்டியன், அப்துல்லா அறைக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தார். உள்ளே இருந்த அப்துல்லாவின் படத்தைப் பார்த்துவிட்டு வியப்படைந்த காதர்
"இவருதான் இங்க தங்கியிருக்காரா? இன்னைக்கு நான் செத்துருக்க வேண்டியவன், இவர்தான் என்னைக் காப்பாத்தினாரு" என்று நடந்ததைக் கூறினான்.

"இவனா, நல்ல பையன்பா, இந்தப் பண்ணையில இந்த மாதிரி பையனை நான் பாத்ததில்ல, இங்க திருமங்கல ரோட்டோரத்துல இருக்க ஒரு கோவிலுக்குப் பக்கத்துல ஒரு கட்டிடம் கட்றாங்க, அங்கதான் வேலை பாக்குது இந்தத் தம்பி. சாய்ந்திரம் வந்திடும்."

இதோ வந்துடுறேன்னு சொல்லிட்டு பையிலிருந்து ஒரு கட்டிங் ப்ளேயரும், கத்தியும் எடுத்துகிட்டு உடனே தலை தெறிக்க ஓடினான். அப்துல்லா வேலை பார்க்குற கட்டிடத்தோட அஸ்திவாரத்துக்கு ஓடினான். மதுரையில தொடர்ந்து ஒரு மாசத்துக்கு அங்க இங்கன்னு குண்டு வைக்குறதுக்காக வந்தவந்தான் காதர். தன்னோட உயிரையே காப்பாத்துன அப்துல்லா வேலை பார்க்குற கட்டிடத்துல மூன்று குண்டுகளை வைத்திருந்தான். வேக வேகமாக ஒவ்வொரு குண்டா செயலிழக்க வச்சுகிட்டு இருந்தான். மூன்றாவது குண்டு படாரென்று பெரிய சத்தத்தோடு வெடித்தது. மேலே நின்ற அப்துல்லா முதற்கொண்டு இரண்டு பேர் கீழ விழுந்தார்கள். அடி பலமா படலைன்னாலும் அப்துல்லாவிற்கு கை பிசங்கிக் கொண்டது.

அடுத்த நாள் பாண்டியனிடம் நாளிதழ் வாங்கிப் படித்துக் கொண்டிருந்தான் அப்துல்லா பிசங்கிய கையில் கட்டோடு.
"ஏண்ணே, வீட்டுக்கு வந்தவரோட பை இருக்கு, ஆனா ஆள் வரவே இல்லையே?!"

"வந்து பைய வச்சுட்டு இதோ வர்றேன்னு ஓடிப் போனவருதாம்பா. ஆளைக் காணோம். இன்னைக்குப் பார்ப்போம், வரலைன்னா பையை தூக்கி வெளியே போட்டுடுவோம்"

செய்தித்தாளை உரக்க வாசித்தான்.
"இந்தியாவின் பல நகரங்களையடுத்து மதுரையிலும் குண்டு வெடிப்பால் மக்கள் பீதி. திருமங்கலம் செல்லும் சாலையில் ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி வெடிகுண்டால் சரிந்தது. வெடியில் சிக்கிய ஒரு வாலிபர் அடையாளம் காணமுடியாத வகையில் உடல் கருகி மரணம். அங்கே வெடிக்காத இரண்டு குண்டுகளும் கண்டு பிடிக்கப் பட்டது...."

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 16

குறுந்தொடர் - பகுதி 16

கடந்த காலத்துக்குச் சென்று எதிர்காலத்தை மாற்றும் பொருட்டு பயணிக்கத் தயாராகினர் மூவரும். இப்படி ஒரு அற்புத இயந்திரத்தை இழக்க வேண்டுமா என்ற ஆதங்கம் பாலாவின் முகத்தில் தெரிந்தது. கரனும், லதாவும் நெருக்கமாகப் பார்த்துக் கொண்டனர்.

"கரா, எனக்கு குழந்தை பாக்கியமே இல்லையாம். எனக்கு ஏதோ போல இருக்கு. கடந்த காலத்துக்குப் போனதுக்கப்புறம் நீ என்னை மறந்திடு. உனக்காவது ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்"

"என்ன தியாகம் பன்றதா நினைப்பா. உன்னால குழந்தை சுமக்க முடியலைன்னா என்ன இப்போ? நாம ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்போம். நான் முடிவே பண்ணிட்டேன், கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உன் கூடத்தான்னு"

மழை தூறி முடித்த பின் தெரியும் வானவில்லாய் ஒளிர்ந்தது அவள் முகம். தென்றலோடு மிதந்து வரும் லேசான தூறல் போலானது கரனின் அண்மை. மூவரும் ஒரு முறை சுயம்புவிடமும், சிமியிடமும் விடை பெற்றுக் கொண்டனர். அவர்கள் செல்ல வேண்டிய காலத்திற்கான ஏற்பாடுகளை சுயம்பு செய்தான். அப்படியே அங்கே எங்கே செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு குறிப்பாக கரனிடம் ஒப்படைத்தான்.

கால இயந்திரத்தின் கதவுகள் மூடிக் கொண்டன, பயணத்திற்குத் தயாராகிவிட்டனர். சிமி யாரு? எப்படி இந்த பூமி இப்படி அழிஞ்சிருக்கும்? இன்னும் விடைதெரியாத பல கேள்விகளுக்கான ஒரே விடையான கால இயந்திரத்தை இழக்கப் போகிறோமென்ற எண்ணத்தோடு பாலாவின் முகம் சற்று இறுகிப் போய் இருந்தது.

"கரா, நான் ஒண்ணு சொல்றேன் கேப்பியா?"

"நீ என்ன சொல்லப் போற பாலா? அதைப் பொருத்துத்தான் கேக்குறதும், கேக்காததும்"

"இதோ பார், சுயம்பு சொல்ற படி கேட்டா நாம எல்லோரும் சாக வேண்டியதுதான்"

"வேற எப்படியும் செய்ய முடியாது. அது வலியில்லாத மரணம்தான். ஆனா, இந்தத் தியாகத்தைச் செஞ்சாதான் நாம நம்ம புறப்பட்டு வந்த காலத்துல வாழ முடியும்"

"இல்ல கரா, என்ன இருந்தாலும் இந்த ரகசியமெல்லாம் நம்மளோட அழிஞ்சிடும். நல்லா யோசிச்சுப் பாரு. உனக்கும் லதாவுக்கு இப்ப இருக்குற காதல் அழிஞ்சிடும். நீயும் அவளும் இப்போ எடுத்த முடிவு எல்லாம் வேற மாதிரியா நடக்கலாம். நீங்க திரும்பவும் ஒரு தடவை சுயம்புவை உருவாக்குவீங்க."

"நீ என்னதான் சொல்ல வர்ற?"

"இதோ பாருடா கரா, என்னதான் நாமளே இரண்டு இரண்டு பேரா இருந்தாலும், நான் சாகரதை நான் ஒத்துக்க மாட்டேன்."

"என்னடா சொல்ற, யாரோ மாதிரி பேசுற? எல்லாமே நம்மளக் காப்பாத்திக்கத்தாண்டா."

"நாம இந்த இயந்திரத்துக்குள்ள இருந்து இதை அழிக்காம, நாமளும் சாகக் கூடாது. இதுக்கு நீதான் ஒரு வழி சொல்லணும்"

"உண்மைதான், எனக்கும் இப்போ லதா மேல இருக்க காதலை விட்டுக் கொடுக்க மனசில்ல. அப்போ இதுக்கு நான் ஒரு வழி சொல்றேன். கேளு"

"நாம இந்த இயந்திரத்தை எடுத்துகிட்டுப் போய் சுயம்பு சொன்ன எல்லாத்தையும் செய்வோம், ஆனா கடைசியா சொன்னது மட்டும் வேண்டாம். அதுக்குப் பதிலா விபத்து நடக்குறதுக்கு சரியா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி திரும்பிப் போய், அந்தப் படகை சிமி கவிழ்க்கும் போது, செல்வினையும், மற்ற இருவரையும் நாம காப்பாத்திட்டு, பாய்மரப் படகுல இருந்து சிமி, நாம மூணு பேரு அங்க இருந்து கிளம்பும்போது இந்த இயந்திரத்தை நாம அழிச்சுடலாம். அப்படின்னா அந்த இயந்திரத்தோட சேர்ந்து அங்க இருக்குற நாம எல்லோரும் காணாம போயிடுவோம். பிறகு அந்தப் பாய்மரப் படகையெடுத்துகிட்டு நாம வந்திடலாம்."

"இது நல்ல யோசனையா இருக்கு. இதையே பண்ணலாம்"

திட்டமிட்ட படி அனைத்தையும் முடித்து விட்டு கால இயந்திரத்தையும் அழித்து விட்டனர். பாய்மரப் படகிலிருந்து ஆறு பேரும் தப்பித்துக் கரைக்குச் சென்றனர். லதா தப்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாய் செல்வின் உறுதியளித்தான்.

சென்னையிலிருந்து வந்திருந்தவர்கள், அந்தப் பிராணியைப் பற்றி தீவிரமாக ஆராயவேண்டுமென்றனர். சற்றே சிநேகாவின் நினைவோடு பாலா மூழ்கலானான். லதா கரனின் தோள்களில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டு இருந்தாள்.

கரன் தனது வயிற்றுப் பகுதியை ஒரு முறை தடவிப் பார்த்தான்! அதில் கால இயந்திரத்தின் சூத்திரம் அடங்கிய ஒரு கண்ணாடி (அந்தக் காலத்தில் dic – data in crystal என்ற முறையில் தகவல் சேமிக்கப் பட்டிருந்தது) இருந்தது. அது 2311 ம் ஆண்டிலிருந்து அவன் எடுத்து வந்திருந்தான்.

- பயணத்தோடு ஒளியவன்

இத்துடன் கதை நிறைவுற்றது.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 15

குறுந்தொடர் - பகுதி 15

கரனுக்கு சுயம்பு மீது மகனென்ற பாசம் ஏனோ வரவில்லை.
“சுயம்பு, அப்படியே நீ எங்களுக்குப் பிறந்திருந்தாலும், அதெப்படி இன்னும் உயிரோடு இருக்க?”

“அப்பா, நீங்க ஒரு மருத்துவருக்கு மிக நெருக்கமான நண்பரா இருந்தீங்க, அப்போ, அவர் ஜீன் தெரபிங்குற மருத்துவ முறையால உங்களை சோதிக்க அனுமதிச்சீங்க. அவர் ஒவ்வொரு மனிதனையும் நீண்ட ஆயுள் வாழ வைக்கக் கூடிய மருந்தைக் கண்டுபிடிச்சார். கருப்பையில் கரு சுமக்காமலேயே குழந்தைகளை உருவாக்கவும், அதையும் ரூபாய் நோட்டு அச்சடிப்பது போல அரசே செய்யவும். மகனோ, அல்லது மகளோ தேவைப் பட்டால் விந்தணுக்களை மட்டும் இருவரும் கொடுத்தால் போதும். இப்படி ஒரு கண்டுபிடிப்பைத்தான் அவர் செய்து கொண்டிருந்தார். அதனோடு சேர்த்து ஜீன் தெரபியும் செய்தார். அம்மாவுக்கு கருப்பை பாதிக்கப் பட்டிருந்ததால குழந்தையை நீங்க அவரிடம் சொல்லி அவருடைய சோதனைக் கூடத்திலேயே உருவாக்கினீங்க. அப்படிப் பிறந்தவந்தான் நான். உங்களுக்கு மாறுபட்ட ஜீன்கள் இருந்ததால என்னோட ஆயுள் ரொம்ப அதிகமாயிடுச்சு. நீங்க உங்க 327 வது வயசுலதான் இந்த இயந்திரத்தைக் கண்டுபிடிச்சீங்க. அதை இயக்குறதுக்கு நீங்க இருந்தாதான் முடியும். திடீருன்னு காணாம போயிட்டீங்க. அந்த இயந்திரமும் அங்க இல்ல.”

“அப்போ இந்த இயந்திரம் எப்படி வந்துச்சு?”

“அவசரப் படாதீங்க, ஒரு நாள் ஒரு இயந்திரத்துல நீங்க வந்தீங்க, வந்து என்னிடம் இதைக் கண்டு பிடிச்சுக் கொடுத்தீங்க. இப்போ இந்த இயந்திரத்தை வச்சுத்தான் நீங்க உங்களைக் காப்பாத்திக்கணும்”

“நான் என்னைக் காப்பாத்திக்கணுமா? என்ன சொல்ற?”

“ஆமாம். நீங்க இந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்கும்போதே இத வச்சு எதிர்காலத்துக்குப் போலாமே தவிர பிற்காலத்துக்குப் போக முடியாதபடிதான் செஞ்சிருந்தீங்க. ஆனால் அதை வச்சு பிற்காலத்துக்கும் போக முடியுங்குறதுதான் உண்மை. ஒரு மனுஷன் பிற்காலத்துக்குப் போறதுனால எதுவேணும்னாலும் மாறலாம், அதனால எதிர்காலத்துக்குப் போறது தப்பே இல்லைன்னு நீங்க அடிக்கடி என்கிட்ட சொல்லுவீங்க.”

“இப்போ நீ பிற்காலத்துக்குத்தானே வந்து என்னை இங்க கூட்டிகிட்டு வந்த? அதெப்படி முடிஞ்சுது?”

“நீங்க கேட்குறது சரிதான். உங்க கூட வேலை பார்த்த ஒருத்தர் உங்களோட கால இயந்திரத்தைத் திருடி எடுத்துகிட்டுப் போயிட்டாரு. அவர் எதிர்காலத்துக்கு எங்க போனாருன்னு தெரியல, ஆனா, உடனே பூமி மேல எதிர்பாராத விதமா சூரியனிலிருந்து பெரிய கதிர்வீச்சும், பாறைகளும் விழுந்துச்சு. அதுல இருந்து தப்பிச்சு வந்தீங்க. பிற்காலத்துக்குப் போகக் கூடிய ஒரு இயந்திரத்தை நீங்க யாருமே கண்டு பிடிக்க முடியாத ஒரு இடத்துக்கு அனுப்பி வச்சிருந்தீங்க, அது வந்து சேர்ந்த இடம் இதுதான். அங்க ஒரு ஆள் மட்டுமே போகக் கூடிய ஒரு சின்ன இயந்திரத்தையும் கண்டு பிடிச்சிருந்தீங்க. அந்த சின்ன இயந்த்துலதான் நீங்க உயிருக்குப் போராடிக்கிட்டு இங்க வந்தீங்க. கால இயந்திரக் கண்டு பிடிப்பாலத்தான் பூமிக்கு பெரிய கதிர்வீச்சும், அதனால சில பாறைகளும் வந்து விழுந்துச்சு. அதனால கடந்த காலத்துக்குப் போய் அந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்குறத தடுக்கணும்னு சொல்லி, கடந்த காலத்துக்குப் போகக் கூடிய இந்த இயந்திரத்தை என்கிட்ட கொடுத்தீங்க. அதற்கப்புறம் இறந்துட்டீங்க.”

“அப்போ, இங்க இருந்த பழைய காலத்துக்குப் போற இயந்திரத்தை வச்சுத்தான் நீ என்னைக் கூட்டிகிட்டு வந்திருக்க. சரி, அப்படியே என்னை எதிர்காலத்துல காப்பாத்தணும்னாலும் அதை நீயே செஞ்சிருக்கலாமே. என்னை கூட்டிகிட்டு வர வேண்டிய அவசியம் என்ன?”

“உங்களால மட்டும்தான் அந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்குற இடத்துக்குள்ள போக முடியும். நீங்க அந்தப் பழைய காலத்துக்குப் போய் உங்களோட இயந்திரக் கண்டுபிடிப்பைத் தடுக்கலைன்னா, எதிர்காலத்தின் விளைவு இப்படி ஆயிடும். நீங்க அந்தக் கண்டுபிடிப்பை அழிக்குறதுனால, நீங்க வந்த இந்த இயந்திரத்துக்கு எதுவும் ஆயிடாது.”

கேள்வியின் தொடக்கம் கண்ணில் மின்னியதும் உதடுகள் உதிர்த்தன சொற்களைக் பாலாவிடமிருந்து.
“செல்வினும், இன்னும் இரண்டு பேரும் இறந்துட்டாங்களே அவங்களை எப்படிக் காப்பபத்துறது?”

“நீங்க எல்லோரும் முதல்ல உங்க காலத்துக்குப் போகணும். சரியா விபத்து நடக்குறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி நீங்க போகனும்”

கரன் கேள்வியோடு முந்தினான். “அப்போ நாங்க ரெண்டு ரெண்டா இருப்போமே?!”

“ஆமாம், நீங்க ரெண்டு ரெண்டு பேரா இருப்பீங்க. அப்பந்தான் செல்வினும், மற்ற நபர்களும் உயிரோடு இருப்பாங்க. இப்போ நீங்க அங்க இருந்து 2311 ம் ஆண்டுக்குப் போய் அந்தக் கால இயந்திரத்தை அழிச்சுட்டீங்கன்னா, சிமி நீங்க இருக்க இடத்திலிருந்து மறைஞ்சுடுவான். ஏன்னா, பூமிக்கு ஆபத்து ஏற்பட்ட பிறகு நான் தனியா இருந்தனாலதான் இவனை உருவாக்கினேன். அப்போ உங்க படகை யாரும் கவிழ்க்க மாட்டாங்க. நீங்க எல்லோரும் அங்கே தப்பிச்சுடலாம்”.

“அப்படியே இருந்தாலும் நிகழ்காலத்துலேயும் 2311ம் நாங்க இருப்போமே?”

“ஆமாம், நீங்க இப்போ பயணிக்குற இந்த இயந்திரத்துக்குள்ளே இருந்து இதையும் அழிச்சுட்டீங்கன்னா, நீங்களும், இந்த இயந்திரம் எந்த எந்த காலத்துல இருக்கோ எல்லா இடத்திலும் இந்த இயந்திரம் அழிஞ்சிடும்.” பாலா சலனமாகினான்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 14

குறுந்தொடர் - பகுதி 14

சில வித்தியாசமான சத்தங்கள் எழும்பின, கால இயந்திரம் காலம் கடக்க எத்தனித்தது.

கடலில் வெகு நேரம் தேடியும் இறந்த உடல்களைத் தவிர வேறு யாரையும் கண்டு பிடிக்க முடியாது காப்பாற்ற வந்த படகு திரும்பிப் போய்க் கொண்டிருந்தது. கரை தொடும் தூரம் வரும்போது, திடீரென கடல் நீர் மட்டம் குறைந்து.

படகில் இருந்த காவலர் ஒருவர்
“கடல்த்தண்ணி உள்வாங்குதுப்போய், சுனாமி வரும்னு நினைக்குறேன். எல்லோரும் இறங்கி ஓடிடலாமா?”

அருகிலிருந்த மீனவர் ஒருவர்
“அப்பிடித்தான் நினைக்குறேனுங்க, ஆனால் இந்த இடம் கொஞ்சம் பாறையும் சேறுமா இருக்கும், இறங்கிப் போறது ரொம்ப கஷ்டம், அதுவுமில்லாம இறங்கிப் போகும் போது தண்ணி வந்துட்டாலும் கஷ்டம்”

பேசிக் கொண்டிருக்கும்போதே படகு தரை தட்டியது. திடீரென்று காவலர் கத்தினார்.
“அதோ பாருவே பெரிய அலை வருது, சுனாமின்னுதான் நினைக்கேன்”

“இல்ல எசமான், பயப்படாதீய, ஒண்ணும் ஆகாது”

வந்த அலை அப்படியே படகைத் தூக்கிக் கொண்டு கரையருகே சென்றது. கடலின் சீற்றமும் குறைந்து, கடல் உள்ளுக்கும் வெளியேவுமாக சற்று நேரத்தில் அடங்கிப் போனது. செல்வினின் தாயார் கடற்கரையில் கதறிக் கொண்டிருந்தார்.

மறுபுறம் முழுதும் ஒளியாய் இருந்த இடத்திலிருந்து மெல்லியதாய் ஒளி குறைய ஆரம்பித்தது. சுற்றிலும் முழு இருட்டு. கதவு பொறுமையாகத் திறந்தது. சிமி ஆர்வத்தோடு இறங்கினான்.
“வாங்கஎல்லோரும் வாங்க இதுதான் என் இடம்”

ஒரு கதவைத் திறந்து எல்லோரும் உள்ளே நுழைந்தனர். அறையிலிருந்து வந்த வெளிச்சம் ஜன்னல் வழியே வரும் காலை நேரத்து வெளிச்சமாய் படர்ந்தது கால இயந்திரத்தின் மேல்.

லதாவின் இதயம் அடித்துக் கொள்ளும் சத்தம் வெளியே கேட்டது!
“கரா இது என்ன இடம்?”

“என்னன்னு தெரியல, இது நிச்சயமா 4453ம் ஆண்டுதான்”

அங்குள்ள எந்தப் பொருளுமே பார்த்திராதப் பொருளாய் இருந்தது. அங்கிருந்த ஒரு அறைக்கு சிமி மூவரையும் அழைத்துச் சென்றான். மெல்லிய சத்தத்தோடு கதவு திறந்தது.

“இது என்ன இடம் சிமி? இதுதான் 4453ம் ஆண்டின் மிச்சம்னு எங்கப்பா சொல்லுவாரு”

“இதுதான் என் தந்தையினுடைய அறை, இதோ அவர் வர்றாரே!”

அடர்ந்த தாடியுடன் அதே முகம், இயந்திரத்தில் பார்த்த அதே முகம். கரனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.
“நீங்க ........தான் சுயம்புவா?”

“ஆமாம்ப்பா. நீங்க என்னை வா போன்னே கூப்பிடலாம்னு ஏற்கனவே சொன்னேனே”

“நீங்க என்னை விட வயசானவரா இருக்கீங்க, உங்களையெப்படி வா போன்னு கூப்பிடுறது?”

“எத்தனை வயசானாலும் நான் உங்க பையந்தானே! நீங்க என் அப்பாதான், இவங்க என் அம்மாதான்”

லதாவும், கரனும் திருமப்த் திரும்பப் பார்த்துக் கொண்டனர். “நீங்க என் பையனா?”

“ஆமாம் அப்பா. நீங்க மீண்டும் என்னிடம் வருவேன்னு சொன்னீங்க, அது உங்களுக்கு தெரியாது”

“என்னதான் நடந்துச்சுன்னு கொஞ்சம் விளக்குறீங்களா?“

“நிச்சயமா சொல்றேன். நீங்க இப்போ இருக்குறது 4453ம் ஆண்டில். இது நீங்க கண்டு பிடிச்ச கால இயந்திரம்தான். உங்களுக்கும், அம்மாவிற்கும் திருமணம் ஆனது 2010ல். 2311ல் சூரியனிலிருந்து பெரிய கதிர்வீச்சும், வெடித்துச் சிதறிய பாறைகளும் பூமியில் மோதின. அந்த சிக்கலில் மனிதர்களில் பல பேர் அழிந்தனர். எல்லா நாடுகளும் பொடிப் பொடியாச்சு. தொடர்ந்து இருந்து வந்த கதிவீச்சில் மிஞ்சியிருந்த பெண்களின் கருப்பை வெகுவாக பாதித்தது. தொடர்ந்து பிணங்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்த ஆபத்திலிருந்து தப்பித்ததில் நானும், சிமியும் உண்டு. அந்த சம்பவத்திற்குப் பிறகு அம்மா, பாலா மாமா, சிநேகா அத்தை எல்லோருமே இறந்துட்டீங்க. அப்போ இந்த உலகத்துல மிச்சம் எத்தனை பேர் இருந்தாங்கன்னு தெரியல.”

பாலாவின் கண்களில் கேள்விக் குறிகளும், ஆச்சரியக் குறிகளும் தெரிந்தன.
“நீ எந்த சிநேகாவைச் சொல்ற?”

“உங்களோடு படிக்கும் சிநேகாவைத்தான் சொல்கிறேன். உங்களோட மனைவி”

“இதை நான் பொய்யாக்கிட்டா? இப்போ எனக்கு விசயம் தெரியுமே. நான் இனி அவளைத் திருமணம் செஞ்சுக்கலைன்னா?”

“எது வேண்டுமானாலும் நடக்கலாம்! இப்போ எதிர்காலம் உங்க மூணு பேர் கையில”

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 13

குறுந்தொடர் - பகுதி 13

புத்தகத்தின் இறுதி வரியைப் படித்த கரனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இருந்தாலும் அவனுக்கு இந்த இடத்தை விட்டுச் சீக்கிரம் தப்பிப்பதே நல்லதென பட்டது.

"பாலா இதையெல்லாம் வாசிக்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு பைத்தியமே பிடிட்ச்சுடும் போல இருக்கு. முதல்ல இங்கே இருந்து கிளம்பிடலாம்."

"கரா திரும்பத் திரும்ப தப்பு பன்ற. இங்க இருந்து எப்படித் தப்பிப்ப? உனக்கு நீ மட்டும் தப்பிச்சாப் போதுமா? செல்வின் உயிரெல்லாம் என்ன ஆகுறது? நாம அவனைக் காப்பாற்றியே ஆகணும். இல்லைன்னா நீ தப்பிச்சாலும் லதா கண்டிப்பா அந்தக் கொலைகாரங்ககிட்ட மாட்டித்தான் ஆகணும்"

"இப்ப என்னதான் செய்யச் சொல்ற? நம்ம யாருக்கும் இதைப் பற்றி ஒண்ணுமே தெரியாது. என்ன பண்ண முடியும்னு நினைக்குற?"

"சுயம்புகிட்ட பேசுவோம். எங்களை கொலை நடந்த அன்னைக்குக் காலையில கொண்டு போய் விட்டுடச் சொல்லுவோம். அன்னைக்கு நாம எங்கேயும் போகாம, மூன்று பேரும் வீட்டிலேயே இருந்துப்போம்."

"என்னடா சொல்ற? நாம இப்போ பழைய காலத்துக்குப் போனா, அங்க எல்லோரும் இரண்டு இரண்டு பேராதானே இருப்போம்? அப்போ என்ன பண்ணுவ?"

"நீ சொல்றதும் சரிதான். ஆனா செல்வினும் மத்தவங்களும் இப்போ உயிரோட இல்லை. அவங்களைக் காப்பாற்றி பழைய காலத்துல இருந்து இதுல கூட்டிகிட்டு வந்துட்டா?"

"இல்லை, இது எல்லாம் நம்ம கற்பனைதான், உண்மை என்னன்னு நமக்குத் தெரியாது. இதனால பல பிரச்சினை வரலாம். எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் நிச்சயம். இறந்தவங்களை உயிரோடக் கொண்டு வருவது எல்லாம் சரிபட்டு வராது."

"அந்த புத்தகத்துல நீ மீண்டும் வருவேன்னு எழுதியிருக்க, அப்படின்னா ..........."

பேசிக் கொண்டிருக்கும்போதே, திடீரென ஒரு ஒலி கேட்டது. இயந்திரம் முழுமையாக இயங்க ஆரம்பித்து விட்டது போலிருந்தது.

சத்தம் கேட்ட்தும் எல்லோரும் சிமி இருக்கும் இடத்திற்கு விரைந்தனர். அங்கே சிமி தன் தந்தை சுயம்புவிடம் பேசிக் கொண்டிருந்தான். சுயம்பு சொல்லச் சொல்ல ஒரு தலைக்கவசம் போன்ற ஒன்றைத் தலையில் மாட்டிக் கொண்டு அவர் சொல்வதைச் செய்து கொண்டிருந்தான்.

"டேய் கரா, என்னடா நடக்குது?"

"இது சுயம்புவோட குரலாத்தான் இருக்கணும், சிமியை சரி பண்ணுறாருன்னு நினைக்குறேன்."

சற்று நேரத்தில் சரியான சிமி, கரனின் அருகே வந்தான்.
"எனக்கு இப்படித்தான் அடிக்கடி நேரும். வாங்க என் தந்தையிடம் பேசுங்க"

ஒளிக்கற்றையாலேயே திரை போல் காட்சியளிக்கும் அந்த இடத்திற்கு சென்றார்கள். கரன் அங்கே வந்த குரலுக்கு சொந்தக் காரனின் முகம் பார்த்தான். தாடிக்குள் மூடி வைக்கப் பட்ட அந்த முகத்தை உற்று நோக்கினான் கரன்.
"நீங்க தான் சுயம்புவா?"

"ஆமாம், நாந்தான் சுயம்பு. நீங்க என்னை வா போ என்றே கூப்பிடலாம்"

"எனக்கு இதைப் பற்றித் தெரிந்துகொள்ள எந்த ஆர்வமும் இல்லை, எங்களை எங்கள் ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்து விடு"

"நீங்கள் என்னை நேரில் சந்திக்க வேண்டும். அதன் பிறகு உங்களை நானே அனுப்பி வைக்கிறேன்"

"நான் வரமாட்டேன். எனக்கு இங்கே வந்ததிலிருந்தே ஏதோ மாதிரி இருக்கு. உடனடியா எங்களை அனுப்பி வைங்க"

"உங்களை அனுப்பி வைப்பதில் எந்தப் பிரச்சினையும் எனக்கில்லை, ஆனால் எனக்கு தந்த உத்தரவை நான் நிறைவேற்றியே ஆக வேண்டும். அதனால் நீங்கள் மூவரும் என்னுடன் சிறிது நாட்கள் இருந்துவிட்டு பின்னர் போகலாம்"

அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த பாலா குறுக்கிட்டான்.
"இங்கு என்ன நடக்குதுன்னே புரியல. என்னோட நண்பன் செல்வின் உங்களோட சிமியால இறந்துட்டான், கூடவே இங்கு வந்த இருவரும். முதலில் அவர்களைக் காப்பாற்றி விட்டு எங்கு வேண்டுமானாலும் வருகிறோம்"

"எனது சிமியால் ஏற்பட்ட இழப்பிற்கு நான் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும், அவர்களைக் காப்பாற்றுவதில் எனக்கும் உடன்பாடுதான், ஆனால் அது என்னால் இயலாத காரியம். நீங்கள் இங்கே வந்தால் எல்லாம் கை கூடும்"

மழை பெய்து ஓய்ந்த மௌனத்தை ஒத்திருந்த்து அந்த இடம். எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். லதாவிற்கு சொல்ல எதுவுமில்லை. கரன் பாலாவின் கேள்வி நியாமென நினைத்தான், ஆனால் ஏனோ சுயம்பு பேச்சைக் கேட்க அவன் விரும்பவில்லை. பாலாவிற்கோ செல்வினைக் காப்பாற்றுவதும், மேலும் இந்த அதிசயத்தை உணரவேண்டுமென்பதே பெரியதாகப் பட்டது. கரன் பேசலானான்.
"சுயம்பு, எங்களோட உயிருக்கு நீங்க உத்திரவாதம் தருவதா இருந்தா, நாங்க உங்க இடத்துக்கு வர்றோம்."

"மெல்லிய புன்னகை செய்தான் சுயம்பு!"

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 12

குறுந்தொடர் - பகுதி 12

கால இயந்திரத்தில் இருக்கிறோம் என்று தெரிந்த பின்னர் மூவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றியது. இது வரை கால இயந்திரம் சம்பந்தப் பட்டப் படங்கள் மனதுக்குள் எல்லோருக்கும் ஓடியது உண்மை.

லதாவிற்கு எது எப்படியோ ஆனால் இதை விட்டு வெளியேறி விடுவோம் என்றுத் தோன்றியது, கரனுக்கோ இது எப்படி சாத்தியமானது என்று தோன்றியது, பாலாவிற்கோ வேறு எண்ணம்.

“கரா இப்போ என்ன செய்யப் போறோம்?”

“இதை இங்கே இருந்து அதன் வீட்டுக்கே அனுப்பிவிட்டால், நாம் இங்கிருந்து தப்பித்து விடலாம்”

“எப்படிப் போவ? நம்மள தேடி வந்தவங்களும் நாம கிடைக்கலைன்னு திரும்பிப் போயிருப்பாங்க, இதை எப்படி அனுப்பி வைத்து விட்டு இங்கே இருந்து தப்பிப்ப?”

“வேற என்னதான் செய்ய முடியும்?”

“எனக்கொரு யோசனை இருக்கு, சொல்றேன் கேப்பீங்களா?”

எப்பொழுதுமே விளையாட்டுத்தனாமாய் இருக்கும் பாலாவிடம் லதாவிற்கு நம்பிக்கையில்லாமலேயே இருந்தது.
“நாம வீட்டுக்குப் போனால் போதும் பாலா, வேறெதுவும் குழப்பாம இருந்தா அதுவே போதும்”

“பயப்படாத லதா, இந்த இயந்திரத்தை வச்சு நாம நம்ம வாழ்க்கையின் எல்லாப் பிரச்சினையையும் தீர்த்து விட முடியும், நீ அந்தக் கொலையை பார்க்காமல் இருக்க வைக்க முடியும், ஏன் அந்தக் கொலையையே தடுக்க முடியும், செல்வினைக் காப்பாறியிருக்க முடியும், இன்னும் என்ன வேணும்னா. இது நமக்கு கிடைச்ச புதையல். இதை விட்டுக் கொடுக்கக் கூடாது”

இவன் இறுதியில் என்ன சொல்ல வருகிறான் என்பது கரனுக்கு நன்றாகவே புரிந்தது.
“இதோ பார் பாலா, நீ எல்லா விசயத்தைப் போல இதுலையும் விளையாடாத, இதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது, எங்கேயாவது போய் மாட்டிகிட்டா பெரிய பிரச்சினையாயிடும்”

“இந்த விளையாட்டல்லாம் சரி பட்டு வராது பாலா”

“நல்லா சிந்திச்சுப் பாரு. உன்கிட்டப் பேசி இந்த சிமியை அவர் ஊருக்கு அனுப்பி வைக்க சொன்ன சுயம்பு, சிமிகிட்ட பேசி அங்கே வரசொல்லி இருக்கலாமே”

“அதுதான் எனக்கும் புரியல. நான் நினைக்குறேன், சிமியைத் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு இங்கே இணைப்பு துண்டிக்கப் பட்டிருக்கலாம். நாம அதை சரி செய்தா போதும்னு நினைக்குறேன்”

“கரா, நீ இதையும் புரிஞ்சுக்கணும், நமக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது”

“இல்லை இதைப் பற்றியும் சுயம்பு சொன்னாரு, இங்கே இருக்குற ஒரு சிவப்பு பெட்டியில இருக்க ஒரு வித ஸ்விட்ச் C என்ற கணினி மொழியிலதான் எழுதியிருக்காங்க. அதுல என்ன பிரச்சினை இருக்கும்னு அவர் சொன்னாரு, அதை சரி செஞ்சுட்டா போதும்”

“அய்யய்யோ எனக்கு அதெல்லாம் வராது கரா. படிப்புன்னா நீ பாத்துக்கோ, பொண்ணுங்கன்னா நான் பார்த்துக்குறேன்”

“இங்கேயே இருங்க நான் அதைத் தேடுறேன். நீங்களும் தேடுங்க, அது ஒரு சிவப்புப் பெட்டி”

“சரிடா கரா, நானும் லதாவும் இடது பக்கம் தேடுறோம், நீ வலது பக்கம் போ”

“ஏன்? நானும் லதாவும் போகக்கூடாதா?”

“போடா போடா, நீயே எவ்வளவு நேரம்தான் கடலை போடுவ? நானும் கொஞ்ச நேரம் கடலை போடறேனே. இது உன் ஆளுதான், கடிச்சு முழுங்கிட மாட்டேன். போடா போடா வேலையைப் பாரு.”

லதா சிரித்து விட்டாள். கரனும் அதைத் தேடச் சென்று விட்டான். ஒரு வழியாக கீழ் அறையில் இருந்த அந்தப் பெட்டியைக் கண்டு பிடித்துவிட்ட கரன், அதை சரி செய்ய ஆரம்பித்தான். இதையெதையும் கண்டுகொள்ளாமல் சிமி தனக்குத் தெரிந்ததை செய்து கொண்டிருந்தான்.

லதாவும் பாலாவும் தேடிச் சென்ற இடத்தில் ஒரு படத்தில் லதாவும் கரனும் ஒன்றாய்க் கட்டிப் பிடித்து நிற்பது போல இருந்தது. ஆச்சரியம் கண்களைக் கட்டிக் கொள்ள, அருகே கரன் கையெழுத்தில் ஒரு புத்தகமும் இருந்தது. இருவரும் அதை எடுத்துக் கொண்டு கரனைத் தேடிச் சென்றனர்.

“கரா, இங்க பாரு நீங்க இரண்டு பேரும் நிக்குறா மாதிரி ஒரு படம் இருக்கு.”

ஒரு நிமிடம் இரு என்று கூறி விட்டு தனது வேலையை முடித்து விட்டு, இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் இந்த பிரச்சினை சரியாயிடும் என சொல்லிக் கொண்டான்.

புத்தகத்தின் இறுதிப் பக்கத்தைப் புரட்டினால் அதில் ஒன்று எழுதியிருந்தது!

“நான் மீண்டும் வருவேன்!”

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 11

குறுந்தொடர் - பகுதி 11

"நீ யார்? எங்க இருந்து வந்த?"

"நான் ஒரு மனிதன்னு எங்க அப்பா சொல்லுவாரு. நான் ஒரு குழாயில இருந்து பிறந்தவன். ஆனால் எங்க ஊர்ல உங்களை மாதிரி யாருமில்லை, நாங்க மொத்தம் 2 பேருதான் இருக்கோம்"

"உனக்குத் தமிழ் தெரியுதே! எந்த ஊர் உங்க ஊர்?"

"எனக்கு இன்னும் 11 மொழிகள் தெரியும். இந்த இடம்தான் எங்க ஊர். ஒரு இயந்திரத்துல ஏறினேன், ஆனால் திடீருன்னு தண்ணீர் வந்துடுச்சு"

"இது உன் ஊரா? திடீருன்னு தண்ணீர் வந்துடுச்சா? சரி சுயம்பு உனக்கெப்படி தெரியும்?"

"சுயம்புதான் என்னை உருவாக்கினார், அவர்தான் என் அப்பா! நீங்கள்லாம் யாரு? ஏன் இவ்வளவு தண்ணி வந்துச்சு? ஆனால் எனக்கு உங்களைத் தெரியும், உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்"

பாலா குறுக்கிட்டான்.
"சிமி, நீ வந்த இயந்திரம் எங்க இருக்கு? எங்களுக்கு காட்டு"

"இருங்க, இங்கேயே வரும்"
சொல்லி முடித்துவிட்டு கையிலிருந்த ஒரு பொத்தானை அழுத்தினான் சிமி. கடல் கொஞ்சம் கொஞ்சமாக கொப்பளிக்க ஆரம்பித்தது. அந்த அதிர்வில் லதா விழித்துக் கொண்டாள். அலறினாள்...
"கரா, இதுதான், இதுதான் என்னை கொல்லப் பார்த்தது."

"லதா அமைதியா இரு, இது நம்மள கொல்ல வரல. பயப்படாத"

சிமி திடுக்கிட்டான், கொஞ்சம் கோபமாக பார்த்தான். சட்டென முகம் மாறியது
"இவங்க, இவங்களையும் நான் பார்த்திருக்கேன்"

"என்ன சொல்ற சிமி, இவளையும் பார்த்திருக்கியா? எங்க பார்த்த"

அதற்குள் மேலே எழுந்து வந்த ஒரு சாய்வு பட்டு படகு கவிழ்ந்தது. அதில் இருந்த அனைவரையும் சிமி, கடலிலிருந்து வெளியே வந்த அந்த இயந்திரத்திற்கு கூட்டிச் சென்றது.

உள்ளே எங்கெங்கும் வெள்ளை ஒளியால் நிரப்பப் பட்டிருந்தது. அது சட்டென தனது கதவுளைப் பூட்டிக் கொண்டு ஆழத்திற்கு விரைந்து சென்றது.

பாலா ஒருவித படபடப்புடன் சிமியிடம் பேசினான்.
"நாங்க வந்த படகை இடித்தது நீதானா? உன்னால எத்தனை பேரு செத்தாங்கன்னு உனக்குத் தெரியுமா?"

சற்றே கோபமடைந்தான் சிமி.
"என்னிடத்தில் நீங்க என்ன பன்றீங்க, என்னைக் கொல்லதானே வந்தீங்க? அதனாலதான் நானே முந்திகிட்டேன்."

பாலாவைக் கண்ணைக் காட்டி சமாதானப் படுத்தினான் கரன்.
"சிமி, எங்களையேன் கொல்லவில்லை?"

"அதான் சொன்னே உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு!"

"உன்னை இங்கேயிருந்து உன் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்"

"இதுதானே என் ஊர், நான் அப்பாவைத்தான் தேடிட்டு இருக்கேன்"

"இது இல்லை உன் ஊர், நீ வேறு இடத்திலிருந்து இங்கே வந்துட்ட"

"இல்லை, நான் இதுக்குள்ள ஏறி உட்கார்ந்து தூங்கிட்டேன். முழிச்சுப் பார்த்தால் இங்கே நிறைய தண்ணீர்"

சிமியுடன் பேசிக் கொண்டிருந்த கரனைத் தடுத்தான் பாலா.
"என்ன சொல்ற? இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும் கரா?"

"அன்னைக்கு நீ தூங்கிட்டதுக்கு அப்புறம் சுயம்பு என்னிடம் பேசினார். அவர் சொன்னது இதுதான். கடலில் கண்ட உயிரனத்தைத் திருப்பி அனுப்ப வேண்டுமாம்"

பாலா எப்பொழுதுமே கரன் பேச நினைப்பதை அவன் கண்கள் வழியாகவே வாசித்துவிடுவான். அவன் சொன்னதில் உண்மையில்லை என்பதை அறிந்த பாலா, கரனைத் தனியாக கூப்பிட்டுப் பேசினான்.

"டேய், உண்மைய சொல்லு, அவரு என்ன சொன்னாரு?"

"பாலா, நாம இங்க இருந்து சீக்கிரமா போகணும்னா, நான் சொல்றதைக் கேளு. சிமியை இங்க இருந்து அனுப்பி வச்சிடலாம். சிமிக்கு தற்காலிகமா கொஞ்ச நினைவுகள் அழிஞ்சு போச்சாம். உண்மைய சொன்னா சிமியை சுயம்பு அனுப்பினதே என்னையும், உன்னையும், லதாவையும் அங்கே கூட்டிகிட்டுப் போகத்தான்"

"என்னடா சொல்ற? எங்க கூட்டிகிட்டுப் போகணும்?"

"டேய், பாலா. நான் சுயம்பு சொல்லும்போதெல்லாம் நம்பலை. ஆனா இங்க வந்த உடந்தான் தெரியுது, அவர் சொன்னது உண்மைன்னு. நாம இப்போ நிக்குறது ஒரு கால இயந்திரத்துல! இந்த இயந்திரம் 4453 ம் ஆண்டில் இருந்து வந்திருக்கிறது!"

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 10

குறுந்தொடர் - பகுதி 10

கரன் வேகமாகத் உள்ளே இறங்கினான், பாலாவும் கரனும் அந்தப் பாய்மரப் படகை விடுவித்தனர்.

"கரா லதா எங்கே?"

"பாலா, அங்கே தெரியுது அந்தத் தக்கை!"
சற்று தூரத்தில் அந்தத் தக்கை மிதப்பது தெரிந்தது.

வெகு வேகமாக அந்த இடத்தை அடைந்தான் கரன், பாலாவும் அந்த இடத்திற்குச் சென்றான். ஆனால் அங்கே லதா இல்லை, வெறும் தக்கை மட்டுமே மிதந்து கொண்டிருந்தது.

கரனும், பாலாவும் உள்ளே மூழ்கித் தேடினர், லதாவைக் காணவில்லை.

"கரா, அங்கே தெரியுறது லதாதான்னு நினைக்கிறேன், வாடா"
பாலாவும் கரனும் விரைந்தனர்.

"லதா, லதா என்னைப் பாரு, என்னைப் பாரு" கரன் கதறிக் கொண்டிருந்தான்.

பாய்மரப் படகில் ஏற்றிவைத்தான் பாலா. அசைவின்றிக் கிடந்தாள் லதா.

"கரா, அவ தண்ணியக் குடிச்சுட்டான்னு நினைக்குறேன், அவ வயித்த அழுத்து"

கரன் அவள் வயிற்றை அழுத்தினான், சிறிது சிறிதாக அவள் தண்ணீரைத் துப்பினாள். உள்ளங்கையை சூடுபறக்கத் தடவினான்.
"லதா, லதா என்னைப் பாரு, லதா, லதா"

மெல்ல மெல்ல கண்விழித்தாள் லதா, சுற்றி என்ன நடக்கிறதென்பதே புரியாதவளாய் திகைத்தாள். அவளுக்குத் தெரிவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். கரன் தாரை தாரையாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். காலை யாரோ தேய்த்து விடுவது போலிருந்தது. அது பாலாதான் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

"லதா உனக்கெதுவும் ஆகல, என்னைப் பாரு, என்னைப் பாரு"

முழுதாய் கண் திறந்தவள், கரனை கட்டிப் பிடித்து அழுதாள்.
"அ........து அ........து, எனக்குப் பயமா இருக்குக் கரா, எனக்கு பயமா இருக்கு"

"லதா என்னைப் பாரு, என்னது அது? எதுக்கு கீழ விழுந்த? என்ன ஆச்சு?"

"அது, அது வந்து, அது என்னதுன்னு தெரியலை, என்னை கீழே தள்ளிவிட்டுடுச்சு. அது வந்துடும்னு நினைக்குறேன், எனக்குப் பயமா இருக்கு"

"எதுவும் ஆகாது, தைரியமா இரு லதா, நானும் கரனும் இருக்கோம்ல, உனக்கெதுவும் ஆகாது"

படகிருந்த தடமென்று எதுவுமே இன்றி வெகு அமைதியாக இருந்தது கடல். இருட்டி விட இன்னும் கொஞ்ச நேரமே பாக்கி இருந்தது.
"கரையிலிருந்து காப்பாற்ற ஆட்கள் வந்தாலும் எப்படியும் 2 மணி நேரம் ஆகும், அதுவரைக்கும் பொறுத்திரு லதா" பாலா.

"எனக்கென்னமோ, படகை ஓட்டைப் போட்டதே அதுதான்னு தோணுது, இல்லைன்னா இந்தக் கடல்ல படகு ஏன் கவிழணும்? அது திரும்பவும் எப்போ வேணும்னாலும் வரும் பாலா"

"அதெல்லாம் வராது பயப்படாத லதா"

"பாலா, பாலா பின்னாடி..."
வேகமாக தண்ணீரைக் கீறியபடி வந்தது ஏதோ ஒன்று, பாயமரப் படகை வேகமாக தள்ளிய படி, நீண்ட தூரத்திற்குப் போனது.

"கரா தண்ணியில குதிச்சுடாத, தைரியமா இரு"

"பாலா நீ விழுந்துடாத கெட்டியமா புடிச்சுக்கோ"

லதா மயங்கி விழுந்தாள். கரன் அவளைப் பிடித்துக் கொண்டான்.

சட்டென அந்த உருவம் தள்ளுவதை நிறுத்தி விட்டு, படகு மேலே தவ்வியது! அது மனிதன்தான், கொஞ்சம் பெரிய உருவம்.

"பாலா அசையாமல் இரு, அப்படியே இரு"

கரன் இப்படிச் சொன்னதும் அந்த உருவம் கரனை நோக்கித் திரும்பியது. கரனை உற்றுப் பார்த்தது.

"உனக்கு என்ன வேண்டும்? எங்களை எதுவும் பன்னிடாத, சுயம்பு உன்னைப் பற்றிச் சொல்லி இருக்காரு. உனக்கு என்ன வேண்டும்?"

கரனை இன்னும் அருகே வந்து உற்றுப் பார்த்தது. பாலா அதை அடிப்பதற்கு வேகமாக எழுந்தான்.

"பாலா வேண்டாம், இரு இரு, நான் பேசுறேன்"
சட்டென திரும்பிய உருவத்தை திசை திருப்பினான் கரன்.
"உன்னை உங்க ஊருக்கு நான் திருப்பி அனுப்புறேன், சொல்லு எங்க வச்சிருக்க? என்னை அங்க கூட்டிகிட்டுப் போ!"

"என் பெயர் சிமி" என்றது அந்த உருவம்!

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 9

குறுந்தொடர் - பகுதி 9

லதாவும் கரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவள் கண்கள் கரனின் கண்களை விட்டு அகலாமல் நிலை குத்தி நின்றது. கரன் மெல்ல புன்னகை உதிர்த்தான்.

“கரா என்னோட மிச்ச வாழ்க்கை இனி உன்னோடுதான்”

கரனின் மனதில் கோடிப் பூக்கள் பூத்துக் குலுங்கியது.

படகும் சற்றே பெரிய அலையில் சிக்கியது போல குலுங்கியது. படகை ஏதோ வெகு வேகமாகத் தாக்கிவிட்டு மறைந்தது. அது அந்த கடலில் பார்த்த மனிதன் போன்ற உருவம்தான். கரனும், லதாவும் கீழே விழுந்தனர்.

படகு ஓரத்தில் நின்று கொண்டிருந்த செல்வினும், சென்னையிலிருந்து வந்த இருவரும் கடலில் விழுந்தனர். செல்வின் தலையில் அடிபட்டு குருதி வழிந்தோடியது. பாலா சட்டென கடலில் பாய்ந்தான்.

படகின் கீழே தண்ணீர் நிறைய ஆரம்பித்தது!

“லதா இங்கேயே இரு, கெட்டியாப் பிடிச்சுக்கோ, திரும்பி வந்துடுவேன்”

“கரா எனக்குப் பயமா இருக்குடா”

கரனும் கடலில் பாய்ந்தான். பாலா செல்வினை பின்னால் தொங்கிக் கொண்டிருந்த பாய்மரப் படகில் ஏற்றினான்.

கரன் எவ்வளவு தேடியும் மற்ற இருவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

“செல்வின், செல்வின். என்னைப் பாருடா. உனக்கு ஒண்ணுமில்லை, என்னைப் பாருடா” பாலா.
செல்வின் தலையில் படகின் கீழ்புறத்தில் சற்றே நீட்டிக் கொண்டிருந்த இரும்புத் துண்டு பலமாக அடித்ததில் இறந்திருந்தான்.

கரன் பின்புறம் போய் செல்வினின் நாடியைப் பார்த்தான். உயிரில்லை என்பதைத் தெரிந்து கொண்டான். பாலாவை அதிர்ச்சியோடு பார்த்தான்.

“செல்வின் செத்துட்டான்டா, மிச்ச இரண்டு பேரையும் தேடிட்டேன், கிடைக்கலை. நான் எதற்கும் இன்னொரு தடவை பார்த்துட்டு வர்றேன்”

பாலா நடப்பது எதுவும் புரியாதவனாய் துளிக் கண்ணீரோடு திகைத்துப் போய் பாய்மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான். மீண்டும் கடலில் மற்ற இருவரையும் தேட ஆரம்பித்தான். யாரையும் கண்டு பிடிக்க முடியாமல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“கரா, இங்க படகுல ரொம்ப வேகமா தண்ணீர் வருது. எனக்குப் பயமா இருக்குடா” பதறினாள் லதா.
இருவரும் மேலே ஏறினார்கள். படகில் மூவரைத் தவிற வேறு யாருமில்லை. எப்பொழுதுமே படகு ஓட்டத் தெரிந்தவர்கள் இரண்டு பேரோடவாவதுதான் படகை எடுக்க வேண்டும் என்று செல்வினின் தந்தை சொல்லுவார். ஆனால் செல்வின் எப்பொழுதுமே அவன் தந்தைப் பேச்சைக் கேட்பதில்லை.

“பாலா இப்போ என்ன பன்றதுடா? கரையிலிருந்து ரொம்ப தூரம் வந்துட்டோம். என்ன பன்றதுடா”

“கரா அவசரப் படாதே, நிச்சயம் தப்பிச்சுடலாம். படகு மூழ்குறதுக்குள்ள இங்கே இருந்து கரையில இருக்க யார்கிட்டையாவது பேசிட்டா போதும். பின்னாடி பாய்மரப் படகு இருக்கு. கவலைப் படாத தப்பிச்சுடலாம்.”

கரனும் லதாவும் ஒருவரை பார்த்துக் கொண்டனர்.
“லதா பயப்படாத, எப்படியும் தப்பிச்சுடலாம்”

பாலா அடிக்கடி செல்வினுடன் கடலுக்கு வந்திருப்பதால், அவனுக்கு படகிலிருந்து எப்படி கரைக்கு சமிக்ஞை அனுப்புவதென்பது தெரியும். அவசர அவசரமாக தாங்கள் இருக்கும் திசையையும், கிளம்பிய இடத்தையும் சொன்னான்.

படகு சுக்கான் அறை வரை தண்ணீர் வரத் தொடங்கியது. லதாவிற்கு நீச்சல் தெரியாது. இருந்த ஒரு மிதக்கும் தக்கையை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு தண்ணீருக்குள் குதிக்கச் செய்தார்கள்.

கரன் லதாவை இழுத்துக் கொண்டு பின்னால் இருந்த பாய்மரப் படகுக்குப் போனான். பாலா சுக்கான் அறையை விட்டு வெளியே வந்து பாய்மரப் படகு நோக்கி குதித்தான்.

“பாலா அந்த முடிச்சைக் கழட்டுடா. இல்லைனா இதையும் உள்ளே இழுத்திடும்”

“நீ அங்கேயே இரு, நான் கழட்டிடுறேன்.”
பாலாவின் கைகள் நடுக்கத்துடன் கயிறை கோர்த்து வைத்திருந்த அந்த இரும்பு வளையத்திலிருந்து வெளியேற்றப் பார்த்தான். அது கழற்ற வரவில்லை. சிக்கிக் கொண்டது போலிருந்தது.

படகு மேல் முனை வரை முழுக ஆரம்பித்த்து.
“கரா இங்க வாடா இதை இழுத்துப் பிடி”

“இதோ வந்துட்டேன்டா, லதா எதுவா இருந்தாலும் இந்த தக்கையை விட்டுடாத, கெட்டியா பிடிட்ச்சுகோ.”
கரன் தண்ணீருக்குள் தாவினான். படகு மெல்ல மெல்ல இழுத்துக் கொண்டே போனது. கயிறை அதிலிருந்து எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் பாலா. கரன் அங்கே போய் அதை விடுவிப்பதற்குள், படகு வேகமாக அமிழ்ந்தது.
லதா பாய்மரப் படகிலிருந்து கவிழ்ந்தாள்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 8

குறுந்தொடர் - பகுதி 8

பெற்றோர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் லதாவை நல்ல படியாகவே பாட்டி வீட்டில் விட்டு வளர்த்தார்கள். கல்லூரிப் படிப்பிற்காகத்தான் முதல் முறை பாட்டி வீட்டிலிருந்து வெளியூருக்குக் கிளம்பினாள் லதா. படகும், அங்கே வீசும் மீன் வாடையும் அவளுக்கு ஒத்து வராததாகவே இருந்தது. எப்படி ஒரு நாள் தங்கப் போகிறேன் என்ற கேள்வி அவளைக் குடைந்தெடுத்தது. இத்தனை ஆண்களுக்கு மத்தியில் ஒற்றைப் பெண்ணாய் இருப்பது மேலும் அவளுக்கு ஒரு தவிப்பை ஏற்படுத்தியது. யாரிடமும் மனம் விட்டுப் பேச முடியாத சூழ்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக குமுறிக் கொண்டிருந்தாள்.

"கரா, நாம எப்போ திரும்பிப் போவோம்"

"தெரியலையே. டேய் பாலா எப்போடா கரைக்குப் போவோம்?"

"நாளைக்கு அதிகாலை 4 மணிக்கு செல்வின் வீட்டுக்குப் போயிடலாம். அவங்க அப்பாவைக் கூட்டிகிட்டு எம்.எல்.ஏ வீட்டுக்குப் போயிட்டு, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிட்டு வந்துடலாம். இங்க படகுலையே எல்லா வசதியும் இருக்கு. கீழ போனா குளிக்குறதுக்கே வசதி இருக்கு"

லதாவிற்கு சற்றே நிம்மதி பிறந்தது. இருந்தாலும் ஒரு பாதுகாப்பில்லாத உணர்வும், கரனைத் தவிர வேறு யாருடனும் எதையும் பேச முடியாத சூழலும் அவளை ஏதோ செய்தது.

கரனுக்கு அவளது சூழலை உணர முடிந்தது. அவளைக் காதலிக்கப் போவதில்லை என்று அவளிடம் சொல்ல வேண்டுமென்றுதான் காலையில் புறப்பட்டான், ஆனால் இப்பொழுது அவனுள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக அலையோடு அலையாக அலை பாய்ந்திருந்தது.

கொஞ்ச நேரம் உலவிய மௌனத்தை உடைத்தான் பாலா.
"ஆமாம், சிநேகா எப்படி இருக்கா?"

பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இப்பொழுது லதா. இருந்தாலும் இந்தச் சூழலில் இப்படி அநாவசியமாக பேசுவது அவளுக்கு பொறுமையிழக்கச் செய்தது. பாலாவை ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு
"இருக்கா, நல்ல வேளை அவளை யாரும் சரியாப் பார்க்கலைன்னு நினைக்குறேன், என்னை மட்டும்தான் துரத்தினாங்க"

"நல்ல பொண்ணுங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது"

"டேய், பாலா சும்மா இருடா, விளையாடுறதுக்கு இதுவா நேரம்? அவளே நொந்து போய் இருக்கா, அவகிட்ட போயி கிண்டல் பன்னுற"

"என்னடா, அவகிட்ட பேசினா இங்க இருந்து பதில் வருது? ம்......ம்....... நடக்கட்டும். சரி லதா, அப்படியே நானும் சிநேகாவும் பேசுறதுக்கு ஏற்பாடு செஞ்சுக் கொடு, சும்மா கடலை போடத்தான்"

"உனக்கு எப்பவுமே விளையாட்டுதானா பாலா? நேத்து என்னடான்னா அப்படி செஞ்சுட்ட"

"என்ன செஞ்சுட்டேன் லதா? சிநேகா எதாவது சொன்னாளா?"

"ம்........... அவ ஒன்னும் சொல்லல, ஆனா உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும்"

"இது என்ன புதுசா இருக்கு, என்ன விசயம்? அதுக்கு முன்னாடி சிநேகா எதைத் தெரிஞ்சுக்குறதுக்கு கரன்கிட்ட பேசினா?"

"அது... அது..... வந்து......" லேசா வெட்கப் படத் துவங்கிய இதழில் பேச்சே வரவில்லை.

எந்த ஆணுக்கும் தன்னை ஒரு பெண் அவளாகவே காதலிக்கத் துவங்குவது வித்தியாசமான அனுபவம்தானே. கரனுக்குள்ளே ஏதோ செய்தது. வெளியே அவன் அவளைக் காதலிக்க மாட்டேனென்று சொல்லி வந்தாலும், உள்ளூற இப்பொழுது அவள் சொல்லப் போகும் பதிலை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான்.

"சும்மாதான் பேசினா...... வேற ஒன்னுமில்லை. தேவைன்னா அவகிட்ட கேட்டுக்கோ"
சொல்லி விட்டு குணிந்து கொண்டாள்.

"இதெல்லாம் சரியா வரலியே, என்னைப் பற்றி உனக்குத் தெரியும்னு நினைக்குறேன். என்கிட்ட பொய் சொல்ல நினைச்சா, நான் கண்டு புடிச்சுடுவேன்"

"டேய்! விடுடா, வா நாம அந்தப் பக்கம் போகலாம், அவ கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும்"
இந்தச் சூழ்நிலையில் பாலாவை அங்கேயிருந்து நகர்த்திக் கொண்டு செல்வதில்தான் கரன் ஆர்வமானான்.

கொஞ்ச நேரம் அந்த இடத்திலிருந்து சற்று தள்ளியிருந்தார்கள் பாலாவும் கரனும். மீண்டும் லதா இருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கே லதா இல்லை. படகில் வலைகள் குமிக்கப்பட்டிருக்கும் இடத்தில் நின்று கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த இடத்தில் கரியால் ஏதோ கிறுக்கப்பட்டிருந்தது. அதை குணிந்து வாசித்தான் பாலா.
"கரன், நான் உன்னை ஒன்றரை வருசமா காதலிக்குறேன். இதுதான் உண்மை. ஆனால் எனக்கு எப்படிச் சொல்லன்னு தெரியலை"

கரனும், பாலாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பாலா சம்மதச் சமிக்ஞையோடு சிரித்தான். கரன் முகம் ஒளியானது!

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 7

குறுந்தொடர் - பகுதி 7

அலையின் போக்குக்கெல்லாம் ஆடியபடியே நகர்ந்து சென்றது படகு. படகில் செல்வினுடன் சேர்த்து ஐவர் இருந்தனர்.

செல்வின் பாலா அருகில் வந்தான்.
"வாடா பாலா, எப்படி இருக்க?"

திடீரென்று மூவரை ஓரிரவு படகில் தங்க அழைத்தது அவனுக்குப் பெரிதாகப் படவில்லை. வழக்கமாக அவன் அப்பாவுடன் செல்லும் போது கண்ணில் படும் நண்பனையும் சேர்த்து அழைத்துச் செல்வதே அவனுக்கு வழக்கம்.

செல்வினின் கேள்விக்கு விடை சொல்லாமல் மௌனமாய் இருந்தான் பாலா. சற்றுத் திரும்பி கரனைப் பார்த்தான். கரன் இன்னும் லதாவின் அருகிலேயே மிக நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தான். பாலா சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு, செல்வினைக் கூப்பிட்டுக் கொண்டு படகின் அடுத்த புறம் சென்றான்.

பாலா நடந்ததையெல்லாம் செல்வினிடம் சொன்னான்.
"என்ன செய்யனு தெரியல, இவளை வேற இங்கே கூட்டிகிட்டு வந்தாச்சு, இனி என்ன ஆகும்னு தெரியலை".

பெரிய ஆச்சரியத்தோடோ அல்லது அதிர்ச்சியோடோ இதைக் கேட்கவில்லை செல்வின்.
"விடுடா இதெல்லாம் பெரிய விசயமா, எம்.எல்.ஏ எங்கப்பாவுக்குத் தெரிஞ்சவர்தான், அவர் பையன் எனக்குத் தெரிஞ்சவன்தான், கவலையை விடு. அந்தப் பொண்ணை சமாதானப் படுத்தி இதைப் பத்தி யாருகிட்டையும் வாயைத் திறக்க மாட்டேன்னு சொல்லச் சொல்லு".

பாலாவிற்கு வயிற்றில் பால்வார்த்தது போலிருந்தது.
"அவளை எப்படியாவது பேசி சமாளிச்சுட்றேன்டா, நீ இப்படி சொன்னதே போதும். நாளைக்கு நீயும் உங்கப்பாவும் அவ பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வச்சிடுங்கடா"

"சரிடா, நான் பாத்துக்குறேன். நீ கவலை படாதே. ஆமாம், அந்தப் பொண்ணு கரனோட ஆளா? கரன் கலக்குறானே!"

"இல்லடா, அவன் என் நண்பன். நீ நினைக்குறா மாதிரியெல்லாம் ஒன்னுமில்லை"

"அப்படின்னா சரி. அப்புறம் என் படகை அசிங்கப் படுத்திடப் போறாங்கன்னுதான் பயந்தேன்"

"அடிங்கு உன்னை. இல்லைன்னாலும் இவரு ஒன்னுமே பன்னதில்லை. டேய், என்கிட்டேவா நீ பொய் சொல்லுற?!"

"விடுடா, விடுடா. ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்"

"சரி யாருடா மத்தவங்கல்லாம்? ங்கே னு இருக்கானுக"

"அவனுக சென்னையிலிருந்து வந்துருக்கானுக, ஏதோ கடல்ல ஆராய்ச்சி செய்யணுமாம். அதுவும் ராத்திரியில தான் செய்யணுமாம். வெளக்கெண்ணெய்க இதுக்கே நான் இரண்டு மடங்கு சொன்ன விலைக்கு ஒத்துக்கிட்டானுக, படிச்சவங்கன்னாலே புத்தி இருக்காது போலடா"

"டேய் எல்லாரையும் ஒரே மாதிரி நினைக்காதடா. சரி இங்கேயே இரு கரன் என்ன பன்றான்னு பார்த்துட்டு வர்றேன்"

பாலா அங்கே போகவும் லதா பேச்சை நிப்பாட்டினாள்.

"என்னடா கரா, பேசி முடிச்சாச்சா? சரி நீ ஓரம்போ நான் கொஞ்ச நேரம் பேசிக்குறேன்"

கரனுக்கு பாலா இப்படி பேசுவது புதிதாக தெரியவில்லையெனினும் இந்த சமயத்தில் கொஞ்சம் சங்கடமாக இருந்த்து அவனுக்கு.
"ஏன், நானிருக்கும்போது பேச மாட்டியா"

"எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் கரா, நீ போயி செல்வின் கிட்ட பேசிகிட்டு இருடா"
"என்னடா லந்தா, நானிங்கதான் இருப்பேன். சொல்லு. அப்படி எனக்குத் தெரியாம என்னத்தைக் கேட்கப் போற?"

"சரி விடு. எனக்கு எல்லாம் புரியுது"
அப்படியே அங்கு செல்வின் சொன்னதை லதாவிடம் சொன்னான்.

தப்பித்தால் போதுமென்ற பயத்தில் உண்மையை காவல் துறையிடம் சொல்ல அவளுக்கு தோன்றவில்லை. மேலும் இங்குள்ள காவல்துறை அதிகாரிகளால் இவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பதும் ஊரறிந்த விசயம்.

"அவங்க சொல்றா மாதிரி கேட்டுக்குறேன். யாருகிட்டையும் எதுவும் சொல்ல மாட்டேன். எந்தப் பிரச்சினையும் வராதுல்ல பாலா"

"இது எல்லாத்தையும் நாந்தான் ஏற்பாடு செய்யுறேன். என்னை அப்போ அப்போ கவனிச்சுகிட்டு, நான் கேட்குறத வாங்கிக் கொடுத்தன்னா எந்தப் பிரச்சினையும் இல்ல. இனி எல்லாம் உன் கையிலதான் இருக்கு"

"ரொம்ப ஓவர்டா இதெல்லாம். எதுவா இருந்தாலும் செல்வினுக்கு நன்றி சொல்லணும்"
படகில் உடன் வந்த சென்னைக் காரர்கள் கடலில் வந்துபோன அந்த வித்தியாசமான உயிரைப் பற்றிப் பேசிக் கொண்டனர்.


முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 6

குறுந்தொடர் - பகுதி 6

கார்மேகம் வழிந்தோடிய பின் வெறிசோடிக் கிடக்கும் வானம் போல், கண்ணீரால் கவலை கழுவி முடித்தாள், வார்த்தை கோர்த்து எடுத்தாள்.

“லதா, விட்டா இதான் சாக்குன்னு அவன் மேலையே சாஞ்சுகிட்டு இருக்க” என்று கிண்டல் செய்தான் பாலா, உண்மையில் அவளைத் தேற்றுவதற்குத்தான் சீண்டினான்.

குளியலறையை யாரோ எட்டிப் பார்ப்பது போல தாவினாள். இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தாள். சொற்களை சொற்றொடர்களாக்கினாள்.

“நம்ம கல்லூரியில திடீருன்னு ஸ்ட்ரைக் செஞ்சாங்க நம்ம சீனியர்ஸ், காலையில 8 மணிக்கே வந்து சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க. மூன்றாவது வருசம் படிக்குற பசங்கள்ல இரண்டு கோஷ்டிக்கும் இடையில மோதல். நான் விடுதியில இருந்து வந்துகிட்டு இருந்தேன் அப்போ இரண்டு பசங்க எதிர்க்க வந்த மூன்று வண்டியையும் கவிழ்க்கனும்னு பேசிகிட்டாங்க. அதே மாதிரி அதை கவிழ்த்துட்டாங்க. எனக்கும் சிநேகாவுக்கும் கையும் ஓடல காலும் ஓடல”

எழுந்த சூரியனை மீண்டும் கடலே விழுங்குவது போல மீண்டும் கண்கள் கண்ணீரில் மூழ்கின.

“அழாம சொல்லு, கவிழ்த்தவங்க யாரு? செத்தவங்க யாரு? உன்னை எதுக்கு துரத்துறாங்க?” கரன்

“கவிழ்த்தவங்க நம்ம கல்லூரிப் பசங்க, ஆனால் செத்தது யாருன்னு எனக்குத் தெரியாது. அதை நான் பார்த்துட்டேன்னு என்னைத் துரத்துறாங்க. நானும் சிநேகாவும் கல்லூரிக்குத்தான் ஓடினோம். திரும்ப அங்கேயும் இவங்க வந்து துரத்த ஆரம்பிச்சுட்டாங்க, அதனால் இந்தப் பக்கம் ஓடினேன், சிநேகா என்ன ஆனான்னு தெரியலை” சொல்லி முடிக்கும் முன் சில தடவை எச்சில் முழுங்கி பல தடவை எழுத்துக்களை முழுங்கினாள் லதா.

“யாரு உன்னைத் துரத்துறாங்க? எந்தப் பசங்க” பாலா.

“துரத்துறப் பசங்கள்ல ஒருத்தன் நம்ம கல்லூரி முதல்வரோட பையன், இன்னொருத்தன் இந்த ஊரு எம்.எல்.ஏ பையன்” சொல்லும்பொழுதே நடுங்கிற்று அவள் சொற்களும் ஈரக்குலையும்.

பாலாவிற்கு உடனடியாக தோன்றிய எண்ணம் ‘வசமா சிக்கிட்டோம்’, இனி எப்படி இவளிடமிருந்து தன்னையும் கரனையும் காப்பாற்றிக் கொள்வதென்று. உண்மையில் யாரும் சினிமாக் கதாநாயகர்கள் இல்லைதான்!

கரன் அதிர்ந்துதான் போனான், அவனுக்கு எதுவும் புரியவில்லை

மழை மேகம் சூழும் தருணம் ஏற்படும் அமைதியை சடாறென்று இடி உடைப்பது போல் சிறிது நேரம் நிலவிய மௌனத்தை லதா உடைத்தாள்.

“என்னால நீங்க இரண்டு பேரும் சிரமப் பட வேண்டாம், நான் எப்படியாவது தப்பிச்சுப் போயிடுறேன்” லதா.

உள்ளூர ஏதோ இருண்ட குகையில் திக்கு தெரியாமல் அலையும் தருணம் ஒரு வெளிச்சம் வரும் பாதை தெரிவது போல தோன்றினாலும், அவனுடைய தன்மானமும், இத்தனை நேரம் அவள் அவனை மீது சாய்ந்திருந்த போது தனது மார்பில் பதிந்த சூடும், அவனை இப்படிக் கூறச்செய்த்து.

“அப்படி இல்ல, நீ தப்பிக்குறதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு பார்ப்போம்” என்றான் கரன்.

பாலாவும் கரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏன் இவன் வீணா அவகிட்ட இப்படி சொல்லணும் என்ற எண்ணம் பாலாவை சூழ்ந்து நின்றது. மறுபுறம் கரனை விட்டுவிட்டு தன்னால் செல்லமுடியாது என்றும் தோன்றியது.

தூரத்திலிருந்து ஒருவர் கையசைப்பதைப் போன்று பாலாவிற்குத் தோன்றியது. அது அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒருவர்தான் என்று அவனுக்குப் புரிந்தது. அது வேறு யாருமில்லை, அவன் தந்தையின் நெருங்கிய நண்பரின் மகன்தான். கடலுக்குள் செல்ல முற்பட்ட அந்தப் படகில் இருப்பவன் பாலாவிற்கும் பழக்கமான செல்வின்தான்.

“நாங்களும் வரமுடியுமா” என்றான் பாலா

இப்பொழுது அந்த படகு இவர்கள் நிற்கும் கரைக்கு கொஞ்ச தூரத்தில் நின்றது. செல்வின் படகின் முன்முனைக்கு வந்தான்.

“நாங்க திரும்பி வர்றதுக்கு ஒரு நாள் ஆயிடும், அதுவரைக்கும் எங்க கூட இருப்பீங்களா” என்றான்.

லதாவிற்கு அது சரியெனப் படவில்லை. அவளுக்கு கடலென்றால் கொஞ்சம் பயமுண்டு.

“கரா, வேண்டாம் கடலுக்குப் போக வேண்டாம், எனக்குப் பயமா இருக்கு” என்றாள்.

லதாவை சமாதனப் படுத்தினான் கரன். “ஒரே நாள்தான், நானும் பாலாவும் நிறைய தடவை இந்த மாதிரி போயிருக்கோம். எந்தப் பிரச்சினையும் இல்ல. மற்றதெல்லாம் நாம அங்க போய் யோசிக்கலாம்” என்றான் கரன்.

அப்பொழுது உள்ளே செல்ல எத்தனித்தது ஒரு பாய்மரப் படகு. அதில் மூவரும் ஏறிக்கொண்டு ஓங்கியடித்த அலைகளில் மேலெழும்பி கீழிறங்கியென ஒருவழியாக படகைச் சென்று அடைந்தவுடன் லதா ஓவென்று வாந்தி எடுத்தாள். தலையைப் பிடித்து விட்டான் கரன்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 5

குறுந்தொடர் - பகுதி 5

வழக்கம்போல இல்லாதிருந்தது இந்த விடியல் கரனுக்கு. அவளிடம் என்ன சொல்ல? அவள் என்ன சொல்லுவாள்? அவளிடம் வேண்டாமென்று சொல்லி, அவள் புரிந்து கொள்வாளா? நாம் ஏன் காதலிக்கக் கூடாது? அப்பா, அம்மா இன்னும் பல பல சிந்தனைகள் அவன் மீது விழுந்து வழிந்து கொண்டிருந்தது குளியலறை தண்ணீர்த் தூறலோடு சேர்ந்து.

வழக்கமாக அரட்டை அடித்துக் கொண்டு போகும் கரனும், பாலாவும் மௌனமாகவே கல்லூரிக்கு கிளம்பினார்கள். வண்டியை நிதானத்தோடே ஓட்டினான். சட்டென்று வெகு வேகமாக மூன்று வண்டிகள் அவர்களைக் கடந்து சென்றது. அதில் இரண்டு வண்டியில் மூன்று மூன்று பேராக அமர்ந்திருந்தனர்.

“என்னடா இந்த வேகத்துல போரானுக, விட்டா போய்ச் சேர்ந்துருவானுக போலிருக்கு” என்றான் பாலா.

சற்று தூரம் கடந்து வந்த ஒரு வளைவருகில் கரனின் வாகனம் திரும்பியது. அங்கே முன்னே வேகமாக சென்ற மூன்றில் இரண்டு வாகனம் விழுந்து கிடந்தது. ஒரே ஒரு வாகனம் குருதி சொட்ட சொட்ட ஒருவனை நடுவில் வைத்துக் கொண்டு வேகமாக எதிரே பறந்தது.

“அய்யய்யோ, அடி பட்டிருச்சுடா இவனுகளுக்கு. இறங்கு என்ன ஆச்சுன்னு பார்ப்போம்” என்றான் கரன் மெதுவாக வண்டியை நிறுத்தி.

“படுபாவிகளா, சாவதுக்குத்தான் இம்புட்டு வேகமா போனானுகளா” என்று சொல்லிக் கொண்டே அங்கே இருந்த உடல்களில் உயிர் ஒட்டியிருக்குதாவென்று பார்க்கச் சென்றனர்.

மூன்று பேர் இரண்டு சடலங்களை மடியில் போட்டுக் கொண்டு அழுதுகொண்டே இருந்தனர். அதுல ஒருத்தன் அவனுகள சும்மா விடக்கூடாதுடா, நம்ம பசங்களுக்குப் போன் பண்ணுடா என்று அலறினான்.

சற்று தூரத்தில் ஒரு வாகனத்தில் இரண்டு பேர் வேகமாக கல்லூரியைத் தாண்டி சென்று கொண்டிருந்தனர்.

“டேய், இது வேற ஏதோ பிரச்சினை மாதிரி இருக்குடா, வாடா போயிடலாம்” என்றான் பாலா பதறியபடியே.

“ஆமாம்டா, என்ன பன்றதுன்னே புரியல, வா போய்டலாம்” கரன்.

கல்லூரி அருகே பெரிய கலவரம் நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம். எதிரே வந்த பாலாவின் நண்பன் “மச்சான், இந்த வண்டிய எங்க வீட்டுல விட்டுடா, நான் நம்ம பசங்க வேன்ல போலீஸ் ஸ்டேஷன் போறேன்டா” என்றான் பதட்டமாக.

வேறெதுவும் பேச முடியாத அவசர நிலை பாலாவிற்குப் புரிந்தது. வண்டியை வாங்கிக் கொண்டான். சற்று தொலைவில் லதா வேகமாக ஓடிவந்தாள், கரனைப் பார்த்ததும் அழுகை பீரிட்டு வந்தது அவளுக்கு. இன்னும் வேகமாக ஓடிவந்தாள்.

“கரா வண்டியை எடு, என்னை காப்பாத்து, எங்கேயாவது போ” என்றாள் பதட்டமாக. கரனுக்கு கையும் ஒடவில்லை, காலும் ஓடவில்லை.

“கரா சொல்றத கேளு அங்க இரண்டு பேரு என்னைத் துரத்துறாங்க, சீக்கிரம் போடா, என்னைக் காப்பாத்து” என்று கதறினாள். தூரத்தில் இரண்டு பேர் ஒரு சின்ன வண்டியில் வந்து கொண்டிருந்தனர்.

“டேய் வாடா போயிடலாம். நீ கரன் வண்டியில ஏறு” பாலா.

இரண்டு வண்டியும் சீறத் தொடங்கின. “டேய் பக்கத்து ஊருக்குப் போயிடலாம் குறுக்குப் பாதை வழியா, இல்லைனா அவனுங்க ஆளு யாராவது எதிர்க்க வரப் போறாங்க” என்றான் கரன். இதயம் பல மடங்கு துடிக்கத் தொடங்கியது கரனுக்கும் பாலாவிற்கும்.

மூவரும் சற்று நேரத்தில் மறைந்தனர். பின்னால் துரத்தி வந்தவர்களால் அவர்களைத் தொடர முடியாமல் திரும்பி விட்டனர்.

கொஞ்ச தூரம் போனதும் பாலா கரனை வண்டியை கடல்புறமாக ஓட்டச் சொன்னான்.

அங்கே சென்று வண்டியை நிறுத்தினான் கரன்.

படபடப்போடு இறங்கினர் மூவரும். ஒருவரையொருவர் மூச்சிளைக்க பார்த்துக் கொண்டனர்.

“என்ன ஆச்சு, அங்க என்னதான் நடக்குது?” கரன்

“எனக்கு பயமா இருக்கு கரா, என்னென்னமோ நடக்குது” என்று அழத் தொடங்கினாள், கொஞ்சமாக கரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு.

எதுவுமே புரியாதவனாய் கரன் பார்த்துக் கொண்டிருக்க, பாலா இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சரி அழாத, முதல்ல விசயத்தை சொல்லு, என்னதான் நடக்குதுன்னு கேக்குறன்ல” என்றான் கொஞ்சம் சத்தமாக கரன்.

கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது லதாவிற்கு. பாலா பார்வையிலேயே கரனை சமாதானப் படுத்தினான். கரன் மெல்லிதாய் அவள் கை மேல் கை வைத்தான், லேசாகத் தட்டிக் கொடுத்தான். லதா படாரென்று கரன் மார்போடு சேர்ந்து கொண்டு அழுதாள்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்