ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

சத்தமின்றிப் பூக்கும் பூ




இரக்கமற்ற இறந்த காலம் தகித்துக் கொண்டிருக்கும் எண்ணங்களைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு அவன் இரவில் தனிமையை விசும்பலாக்கிக் கொண்டிருந்தது, அதில் வழியும் கண்ணீரில் இரக்கமில்லாத ஒருத்தியின் இரும்புக் கரம் பற்றி சொற்கள் சிதறிக் கொண்டிருந்தன. அந்த ஊற்று அதன் இரு வருட பயணத்திற்குப் பின் சற்றே வற்றிய ரணமாய் வழிந்துகொண்டிருந்தது. வாழ்க்கைச் சமாதானத்திற்காக ஒரு வெள்ளைத் தாளை எடுத்து எழுதிக் கொண்டிருந்தான்...

அன்புள்ள அம்மா,

இரண்டு வருட காலமாக நான் உன்னிடம் இருந்த எல்லா இணைப்புகளையும் துண்டித்துக் கொண்டிருக்கிறேன். இந்த மடல் உனக்கு அதிர்ச்சியையோ மகிழ்ச்சியையோ கொடுக்கலாம். உன்னைப் பற்றி நான் ஊர்க்காரர்கள் சிலரிடம் கேட்டுக் கொள்வதோடு சரி. என் இதயத்துக்குள் ஒளிந்திருக்கும் சோகங்களைப் பகிர்ந்து கொள்ள உன்னை விட்டால் எனக்கு வேறு யாருமே இல்லையென்றாலும், உனக்கு எனது சோகம் வயதுக் கோளாறாக தோன்றியிருக்கக் கூடும். வலி கொடியதாயினும் அந்த சோகத்திற்கு பின்பு கிடக்கும் எனது உணர்வுகளின் ஈரம் இன்னும் காய்ந்துவிடவில்லை.

இந்த பூமியின் எத்தனையோ காதல்களில் எனதும் ஒன்று. அவள் பேச்சுக்களெல்லாம் குழந்தைத்தனமானது என எண்ணிக்கொள்வேன், அவள் ஒவ்வொரு முறையும் விபரீதமாக ஏதோவொன்றைச் செய்துவிடும்போதும் அல்லது சொல்லி விடும்போதும். அவளின் அந்தத் தன்மையே என்னை அவளின் உணர்வுகளுக்கு அருகே அழைத்துச் சென்றது. ஆம், அவளைச் சீர்படுத்தத் துணிந்து என்னைப் பாழ்படுத்திக் கொண்டேன். அவள் என்னை விட்டு பிரிய ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் என் உயிரை உறிய ஆரம்பித்தாள். அவளின் போக்கு இந்த முறை குழந்தைத் தனமானதாய் தெரியவில்லை, அது திட்டமிட்டதாய் தெரிந்தது. அவளின் இதயத்தில் எனக்கான ஒரு ஊசி முனையிடமும் ஒதுக்காததை உறுதி செய்தபடி இருந்தன அவள் செயல்கள். போகட்டும்... அவள் போன வழியே பழகிய நாயைப் போல சென்று கொண்டிருந்த மனது சற்று தூரத்தில் அவள் சுவடின்றி வந்த வழியே திரும்பி வந்து கொண்டிருந்தது. நீ கூட பார்த்திராத நான், ஏன் நான் கூட பார்த்திராத என்னைப் பார்த்தேன். அது என்னிடமிருந்து விலகியே நின்றது. என்னை விட்டு விலகி நிற்கும் என்னைப் பற்றிய சோகத்தில் மது ஒன்றே உணர்வுப் பாலமாய் இருந்தது. எனக்குப் பொழுதுபோக்காய் இணையம் அமைந்தது. ஆமாம் எனது நத்தை நகரலான நரக நேரங்களின் பொழுதுகளை நான் போக்கத்தான் வேண்டியிருந்தது. தமிழில் எழுதப்பட்ட அனைத்து காதல் தோல்வி கவிதைகளும் மனப்பாடமே ஆகிவிட்டது ஒரு சமயம். நானும் எழுதினேன் அவளுடன் பகிர்ந்து கொண்ட நாட்களின் வாசத்தையும் மோசத்தையும் விரல் முனை வழியே இணையத்தில். வாசித்தவர்கள் பாராட்டினார்கள், அதில் ஓடிக் கொண்டிருக்கும் வலி அறியாமல்.

யாருமற்ற அநாதையாய் தெரியும் நிலவினருகே நட்சத்திரம் ஒன்று பிரகாசமாகத் தெரிந்தது, அதை சிந்தித்துக் கொண்டே இருந்த பொழுது முகம் தெரியாத ஒரு பெண்ணிடமிருந்து எனக்கொரு மின்மடல், எனது படைப்புகளைப் பாராட்டி... ஏனோ தெரியவில்லை அந்த மடலுக்கு எனக்கு பதிலனுப்பத் தோன்றிற்று. அனுப்பினேன்... என் கசந்து போன வாழ்க்கையை வார்த்தைகளிலே ஏற்றுவதைத் தடுக்க முடியாமல் தோற்றுக் கொண்டே சென்றன அவளுக்கெழுதிய என் மடலின் சொற்கள். அவளும் அதை தேற்றும் விதமாக பதிலளித்தாள். அந்த பதில் எனக்குப் பிடிக்கவில்லை, எனது சோகத்தில் விளைந்த கர்வம் அதைப் பார்த்து எக்காளமாய்ச் சிரிக்கச் சொன்னது எனது உலர்ந்துகிடக்கும் உதடுகளை. எங்கள் மின்னஞ்சல் பயணம் சில மாதம் தொடர்ந்தது. வளர்ந்த குழந்தை தொட்டிலை விட்டு மெத்தைக்குத் தாவுவது போல் எங்களது வளர்ந்த பேச்சு மின்மடலை விட்டு மின்னரட்டைக்குத் தாவியது.

எந்த உறவைச் சொல்லியும் வளராத பேச்சு அது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத பேச்சு அது. ஏனோ எனது எல்லா இரகசியங்களையும் அவளிடம் அம்பலப்படுத்தினேன், நீ சின்ன வயதில் என்னை அம்மணமாக நிறுத்தி அடித்தது முதற்கொண்டு. அவள் உம் கொட்ட மறந்ததேயில்லை. அவளுடைய அனுபவங்கள் சில சொல்வாள், நான் நினைத்துக் கொள்வேன் அவளது சொற்களைப் போலவே அவளும் குட்டையானவளோ என்று... ஆள் வேண்டுமெனின் குட்டையாக இருக்கலாம், ஆனால் அவள் எண்ணங்கள் குட்டையல்ல அது பாயும் நதி. அதில் ஒரு பரிசலில் பயணித்தேன், அதுவும் அவள் தந்த நம்பிக்கைப் பரிசலில்.

எனக்குள் அவள் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. என்னை விட அறிவாளியான அவளிடம் தோற்று மண்டியிட்டது என் நட்பு, அவள் பாதங்களைச் சரணடைந்த போது அது காதலாக பரிணமித்திருந்தது. அவளிடம் மனம் விட்டுக் கேட்டேன், என்னை இவ்வளவு தூரம் கரை சேர்த்த நீ வாழ்க்கை முழுதும் துணை வருவாயா என்று. அவள் ஒரு சிரிப்பானை மின்னரட்டையில் பதித்தாள். அதற்கான அர்த்தம் எனக்கு எட்டவில்லை. ஆனால் மறுபடி ஒரு முறை தோல்வியைச் சந்தித்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமையைக் கொண்டிருந்தேன், அதுவும் அவளளித்த பரிசு. நாங்கள் சந்திக்கும் தேதி முடிவானது.

சவரம் செய்தேன், இரண்டு வருடங்கள் கழித்து சற்று அலங்காரத்தைக் கண்டது எனது முகம். அவளைப் பார்த்தேன். எனக்கு முன்னரே வந்து அமர்ந்திருந்தாள் நான் சொன்ன அதே பூங்காவில், அதே இருக்கையில்.... அங்கே சென்றதும் என்னிடம் ஒரு துண்டுக் கடிதம் கொடுத்தாள். "என்ன மின்னரட்டைப் பழக்கம் போகவில்லையோ" என சிரித்துக் கொண்டே கேட்டேன், அப்படியே அவள் என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். வாங்கி வாசித்தேன். தான் ஊமையென்றும், நான் ஒரு ஊமையை மணக்கவே ஆசைப்படுகிறேன் என்றும், அவளுக்கு என்னை விட ஒரு வயது மூப்பு என்றும் எழுதியிருந்தது. நான் பேச ஆரம்பித்தேன் கண்கள் வழியாக கண்ணீரின் துணை கொண்டு, வாய் பேச முடியாது ஊமையானேன். அவளைச் சம்மதிக்க வைத்து விட்டேன். உன்னைப் போல ஒரு தாயாக அவளிருப்பாள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. என்னை நீ இன்னும் நேசித்துக் கொண்டுதான் இருப்பாய். இந்த மடல் உனது கையில் கிடைத்த பிறகு அவளோடு நான் அங்கே இருப்பேன்.

அன்புடன்,
உன் பிள்ளை.

வீடு

- சிறுகதை


இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

விதிப்படி ஒரு ப்ளாகரில் இருந்து ஒரு கதைதான் அனுப்பவேண்டியுள்ளதால், இந்தக் கதையை என் கவிதை ப்ளாகரில் இட்டுள்ளேன்.

சுட்டி இதோ http://oliyavan-kavithaikal.blogspot.com/2009/06/blog-post_28.html

காற்றோடு பேசும் இளங்குருத்து

-சிறுகதை

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது. சுட்டி http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html


அன்றைய கடமையை முடிக்கப் போகும் சூரியன் இரவின் மடி தேடி வேகமாக ஓடத் தொடங்கியது வழியெங்கும் மேகங்கள் மீது வண்ணங்கள் தூவிக் கொண்டே, அதை அண்ணாந்து ரசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள் அம்மு. ஐந்தாம் வகுப்பு முடிக்கப் போகும் அவள் பூமியில் நடைபயில வந்த சொப்பன தேவதை. பள்ளியிலே சுமாராக மதிப்பெண் வாங்கும் குழந்தைதான். மின்னஞ்சல் இணையமென இரண்டு வயதிலிருந்தே பல விசயங்களைத் தெரிந்து வைத்திருக்கும் 21ம் நூற்றாண்டின் சராசரி நகரத்துக் குழந்தை. வழியெங்கும் பூவை உதிர்த்துவிட்டு அவளின் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தது அவளின் குடியிருப்பின் சாலை.

தாத்தா பாட்டியிடம் தினம் தினம் நடந்ததை அவள் சொல்லிவிடுவது வழக்கம். இன்று அவளுக்கு கூறுவதற்கு ஒரு முக்கியமான விசயமிருந்தது. அவளிடம் எப்பொழுதுமே குறும்பு செய்யும் சுந்தர், இன்று அவளைப் பிடித்து கிழே தள்ளிவிட அவளுக்கு முட்டியில் சிராய்ப்பு. வந்த கோபத்தில் உதட்டைப் சுழித்துக்கொண்டே சுந்தரைக் கீழே தள்ளிவிட்டு கையிலிருந்த பையால் அடி அடியென்று அடித்துவிட்டாள். சுந்தர் அழுதுகொண்டே ஆசிரியரிடம் சொல்ல, ஆசிரியர் இருவரையும் சமாதானப் படுத்திவிட்டு, அம்முவின் காயத்தில் மருந்திட்டுக் கட்டி அனுப்பினார்கள். அவளுக்கோ அது ஒரு வலியாகவே சிறிதும் படவில்லை, ஒரு துளி கண்ணீரும் வரவில்லை, இருப்பினும் இன்று தாத்தா பாட்டியிடம் சுந்தரை அடித்ததைப் பற்றிக் கூறப்போகும் சிந்தனையிலேயே பெருமையாக சென்று கொண்டிருந்தாள். இது போன்று அவள் இதற்கு முன்னரும் நடந்துகொண்டிருந்தாள், அப்பொழுதெல்லாம் வீட்டிற்கு சென்று நடந்ததைக் கூறியதும் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என அனைவரும் சேர்ந்து ஒன்றாகச் சிரித்துவிட்டு அவளைப் பாராட்டிய வண்ணமே இருப்பார்கள்.

ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் அவளுடைய அம்மா லதா கொடுக்கும் பறக்கும் முத்தம் அவளுக்கு சாயங்கால விருந்து. அவள் வந்து சற்று நேரத்திலேயே வந்துவிடும் அப்பா அவளது நெத்தியில் முத்தமிடுவது அவளுக்கு மிகப் பிடித்த ஒன்று. அவள் வருகைக்காகவே எத்தனை வேலையிருந்தாலும் அம்முவை எதிர்பார்த்தபடி வாசல் கதவிற்கு எதிரிலுள்ள சோஃபாவில் அமர்ந்திருப்பாள் லதா. அம்மாவின் அன்பு முத்தத்தினை எதிர்பார்த்தபடியே வீட்டுக் கதவை திறந்தாள் அம்மு. வழக்கமான அதே புன்னகை தளும்பிய முகத்தோடு பறக்கும் முத்தமொன்று கொடுத்து விட்டு "ம்... என் ராசாத்தி பைய இறக்கி வச்சுட்டு ரெண்டு நிமிஷம் உட்கார்ந்திருக்குமாம், அம்முகுட்டிக்கு அம்மா காப்பி எடுத்துட்டு வருவேணாம். அது வரைக்கும் தாத்தா பாட்டி கூட பேசிக்கிட்டு இருங்க" சமையலறைக்குள் நுழைந்தாள் லதா.

பையை இறக்கி வைத்துவிட்டு தாத்தா பாட்டியிடம் அன்று பள்ளிக்கூடத்தில் அவள் கூடப் படிக்கும் சுந்தரை அடித்துவிட்டதை சொல்லி முடித்தாள். தனது காலில் அடிபட்டதையும் காண்பித்தாள். தாத்தாவும் பாட்டியும் அவள் காலைப் பார்த்து சலனப்படாமல் அவளிடம் சுந்தரை அடித்தது குறித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். லதாவும் அவளுக்கு அடி பட்டதை பெரிதாகப் பொருட்படுத்தாமல் அவளுடைய தைரியத்தைப் பாராட்டிய படி இருந்தாள்.

"அம்மு, அம்மாகிட்ட வந்து காப்பி வாங்கிட்டுப் போ, அம்மா அடுத்து சமையல் வேலை செய்யணும்" லதா கொஞ்சும் குரலில் அம்முவை அழைத்தாள். அம்மாவிடம் காப்பி வாங்கி வர சமையலறைக்குள் ஓடிப் போய் அம்மு சிணுங்கிக் கொண்டே "அம்மா, காப்பி தா". "இதோ இங்க இருக்கு பாரு, எடுத்துக் குடிம்மா, பக்கத்துலேயே மிச்சர் எடுத்துக்கோ" லதா. மெதுவாய் காப்பியையும் மிச்சரையும் சாப்பிட்டு முடித்துக் கொண்டிருக்கையில் அவளுடைய அப்பாவும் வந்தாயிற்று. "ஹை அப்பா, அப்பா" சத்தமிட்டுக்கொண்டே ஓடிப் போய் ராஜேஷின் அருகில் சென்று நின்று கொண்டாள். அவளுக்கான வழக்கமான முத்தத்தைப் பரிசாக கொடுத்துவிட்டு "அப்பா போயி ட்ரெஸ் மாத்திட்டு வர்றேன், அப்பா உனக்குப் பிடிச்சது ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன், இன்னைக்கு என் அம்முக்குட்டிக்குப் பிறந்தநாளேச்சே, உங்கம்மா, எங்கம்மா, எங்கப்பா எல்லோரையும் ரெடியா இருக்க சொல்லு" சொல்லிக் கொண்டே வேகமாய் மாடியிலிருக்கும் அறைக்குச் சென்றான்.

"அம்மா, அப்பா வந்துட்டாங்க நீ சீக்கிரம் வாம்மா, தாத்தா பாட்டியும் ரெடி" படபடத்துக் கொண்டிருந்தாள் அம்மு. இரண்டே நொடியில் எல்லோரும் தயாராய் இருந்தார்கள். எல்லோரும் அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாட அவளுக்காக வாங்கி வந்த கேக்கை வெட்டி முடித்தாள். அவளுக்குப் பிடித்த பெரிய கரடி பொம்மையை எல்லோரும் சேர்ந்து பரிசாகக் கொடுத்தார்கள். அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டே சிலிர்த்துப்போய் நின்றாள். "அம்முக்குட்டி ஓடிப் போயி தாத்தாக்கும் பாட்டிக்கும் தண்ணி எடுத்துட்டு வருமாம், தாத்தாவும் பாட்டியும் உனக்கு இன்னைக்கு சிங்கம் கதை சொல்லுவோமாம், சீக்கிரம் போ" செல்லமாக முதுகைத் தட்டினார் அம்முவின் தாத்தா. டுர்ர்ர்ர்ர் என வாயிலேயே வண்டி ஓட்டிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்து "அம்மா தாத்தாக்கும் பாட்டிக்கும் தண்ணி வேணுமாம்". இரண்டு குவளையில் தண்ணீரை ஒரு தட்டில் வைத்து கவிழாமல் பிடித்துக் கொண்டே சோஃபாவின் அருகில் வந்தாள்...

கடிகாரம் 9.30 மணியைக் காட்டியவாறு இருந்தது. கார் வரும் சத்தம் கேட்டது, அங்கிருந்த ஒருவரை ஒருவர் பார்த்துப் பதறியபடியே முழித்துக் கொண்டிருந்தனர். "அம்மு, யாரு வர்றது? நாங்க கிளம்பட்டுமா" ராஜேஷும் லதாவும் பதட்டமானார்கள். சரியென தலையசைத்தாள் அம்மு. மறுநொடியே இருவரும் மறைந்தனர். இருவர் காலடிச் சத்தம் அருகி வருவது போல இருந்தது. உடனே தாத்தாவும் பாட்டியும் விடைபெற்றுக் கொண்டு சோஃபாவின் பின் சென்றவாறே மறைந்தனர். சட்டென வெயிலைக் கண்ட இருளாய் அறையில் இருந்த எல்லோரும் ஒவ்வொரு மூலைக்கும் ஓடி மறைந்தனர். வாசற்கதவு திறக்கும் சத்தம் கேட்டது, திடுக்கிட்டவளாய் திரும்பிப் பார்த்தாள் அம்மு.

"என்ன அம்மு, யாருமே இல்ல, கையில வெறும் தட்டை வச்சுகிட்டு என்ன செஞ்சுட்டு இருக்க? அம்மா இதோ முப்பது நிமிஷத்துல சாப்பாடு செஞ்சுத் தர்றேன்" லதா. "தினமும் இப்படி ரெண்டு பேருக்கும் நேரமாயிடுது, அம்மு பாவம் தினமும் இப்படித் தனியா வீட்டுல இருக்க வேண்டியதாயிடுது, எங்க அப்பா, அம்மாவை இங்க கூட்டிகிட்டு வந்துடலாம்னா அதுக்கும் வேண்டாம்ங்குற..." வெறுத்துக் கூறிய படியே மாடிப்படி ஏறிப் போய்க் கொண்டிருந்தான் ராஜேஷ்.

அவன் பெயர் பழனிவேல்...

பால்ய காலத்து குறிப்புகள் - 3

ஒரு நீண்ட தனிமையின் பின்னர் தூங்கிவிடும் சில இரவுகளில் திடீரென என் கனவைக் கிழித்து வரும் ஒரு கூரிய தென்றலாய் அவன் ஞாபகம்... சற்று நேரம் விழித்திருந்து அவனைப் பற்றிய நினைவுகளை அசைபோட்டு விட்டு இப்பொழுது அவனைச் சந்திக்க முடியாத சூழ்நிலையை எண்ணி மனக்கனத்தோடு மீண்டும் தூங்கிவிடுவது வழக்கம். அவன் எங்கே இருந்தாலும் அவனுக்கான ஒரு ஆத்மார்த்தமான இடம் என் மனதில் என்றும் உண்டு. அவன் பெயர் பழனிவேல்...

ஒவ்வொரு நாளும் காலை அம்மாவிடம் சென்று தொண்டைக்குள் தொடங்கி உதட்டிலேயே முடிந்துவிடும் கம்மிய குரலில் "இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டுக்குறேம்மா, நாளையில இருந்து ஸ்கூலுக்கு போயிடுறேன்" என்று கூறுவது எனக்கு பழக்கம். அப்பொழுது தான் என் அம்மாவுடன் பழக்கமானார் பழனியம்மா, ஆம் இன்று வரை அவர்கள் பெயர் எனக்குத் தெரிந்ததில்லை, அவர்களை அப்படி அழைத்தே பழக்கப் பட்டுவிட்டேன். என்னை பள்ளிக் கூடத்திலிருந்து சில நேரம் கூட்டி வரும் என் அம்மாவும், பழனியம்மாவும் பேசிக் கொண்டே வருவார்கள். நான் எல்.கே.ஜி, யூ.கே.ஜி படித்தபொழுது சீறுடை அணிந்தால் பள்ளிக்குத்தான் போகிறேனென எண்ணிக் கொண்டு சீருடை அணிய மாட்டேனென வண்ண உடை போட்டுக் கொண்டு பள்ளிக் கூடம் கூட்டிப் போய், பள்ளிக்கூடத்து ஆயா முன்னர் என்னை சீருடை அணிய வைப்பார்களாம், சின்ன பிரம்பைக் காட்டி பயமுறுத்திய படியே, இந்தக் கதையெல்லாம் பழனியம்மாவிற்கு மனப்பாடமே ஆயிருக்கக் கூடும்.

அப்பொழுது கிடைத்த என் பால்ய காலத்து சிநேகிதன்தான் பழனிவேல். அவனுடன் பழக ஆரம்பித்த பிறகு பள்ளிக்கூடத்திற்கு லீவு எடுப்பதாகக் கூறி வந்ததை நிப்பாட்டிக் கொண்டேன். அவனும் நானும் ஒரே வகுப்பில் படித்ததே இல்லை, இருப்பினும் ஒவ்வொரு சாயங்காலமும் என் அம்மாவுடனோ, அல்லது அப்பாவின் வண்டியிலோ நானும் அவனும் வந்திடுவோம். அப்பொழுதெல்லாம் என் அப்பாவின் முன்னர் நானும், அப்பாவின் பின்னர் அவனும் உட்கார்ந்து கொள்வோம். ஒருநாள் பழனி என் அப்பாவிடம் "பாஸ்கரப்பா, நீங்க பாட்டு பாடிட்டு வர்றீங்களா?" என்று கேட்டான். அதைக் கேட்டு என் அப்பாவிற்கு பயங்கர ஆச்சரியம், வாயைத் திறந்து பாடவில்லை, அதுவும் எனக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் சிறுவனுக்கு எப்படி தெரியவந்ததென்று... எங்களை இறக்கிவிடும் போது, உனக்கெப்படி தெரியுமென அப்பா கேட்டதற்கு அவன் கூறிய பதில் என் முதல் ஸ்டெதஸ்கோப் சோதனை அனுபவம்... "பாஸ்கரப்பா, நான் கீழ விழுந்துடக் கூடாதுன்னு உங்கள கெட்டிமா புடிச்சுப்பேனா, அப்போ முதுவுல காத வச்சு கேக்கும்போது நீங்க பாடுறது கேக்குது" என்று. என் அப்பாவிற்கும் அந்த சோதனை புதிதுதான், அவனை மெச்சிக் கொண்டார் அன்று முழுவதும்.

நான் ஆறாவது படிக்கும் காலத்தில் அடிக்கடி அப்பாவை வரவேண்டாமென்று சொல்லிவிட்டு அவனும் நானும் 1 மணி நேரம் நடந்தே பள்ளியிலிருந்து என் வீட்டிற்கு வந்திடுவோம். வருகிற வழியில் கிடக்கும் ஒருவித பெயர் தெரியாத இனிக்கும் காயை எடுத்துச் சப்பிக் கொண்டு போனது இன்னும் நாக்கில் அதன் சுவையையும், என் சுவாசத்தில் மணத்தையும் கொண்டு வருகிறது. சில நேரம் குச்சி ஐஸ், சில நேரம் தர்பூசணி என்று என் வீட்டில் தினமும் கொடுக்கும் 1 ரூபாயில் 50 பைசாவிற்கு எதையாவது வாங்கிவிடுவோம். ஒரு நாள் வெயில் காய்ந்துகொண்டிருந்தது, அவன் செருப்பு பிய்ந்துபோய் விட்டதென்று அன்று செருப்பில்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் காலைத் தூக்கி தூக்கி நடப்பதைப் பார்த்து மனசு பொறுக்காமல் "என்னோட செருப்பைப் போட்டுக்கோ, எனக்கு வெயில் ஒன்னும் பண்ணாது" எனக்கூறி அவனை சமாதானமடைய வைத்து செருப்பை மாட்டிக்கொள்ளச் செய்தேன். உண்மையில் நான் செருப்பின்றி எங்குமே சென்றதில்லை. எனக்குக் கால் வெகுவாகச் சுட்டது, இருப்பினும் அதைக் காட்டிக் கொள்ளாமல் வீடு வரைக்கும் வந்து சேர்ந்தேன், என் வீடு வந்ததும் செருப்பைக் கொடுத்து விட்டு வீட்டிற்குச் சென்று விட்டான். இரவு முழுவதும் எனக்கு கால் வலிப்பதைப் பார்த்துவிட்டு அம்மா கேட்டவுடன் பயந்துபோய் உண்மையைச் சொல்லிவிட்டேன். "அவன் கர்ணன் மாதிரிடி" என்று என் அப்பா பெருமை பேசிக் கொண்டார், உள்ளுக்குள்ளே இப்படி விவரம் தெரியாம இருக்கானே பையன் என்ற எண்ணம் இருந்தது உண்மை. "அப்பா வேணும்னா அவனுக்கொரு செருப்பு வாங்கிக் கொடுத்துடுறேன், ஆனா இனி நீ செருப்பைக் கொடுக்க வேண்டாம்" என அப்பா சொல்லிவிட்டார்.

ஆறாவதில் நான் ஆங்கில வழிக் கல்வியிலும், அவன் தமிழ் வழிக்கல்வியிலும் படித்தோம். அவனது அப்பா தண்டபானி ஒரு மெத்தக் குடிகாரர். இருக்கும் பணம் எல்லாவற்றிற்கும் மொத்தமாகக் குடித்துவிட்டு பல நேரம் பழனியையும், பழனியம்மாவையும் அடிக்கும் பழக்கமுள்ளவர். அவனுக்கு எப்பொழுதுமே அவனது அப்பாவின் மீது ஏக பயம். படிப்பில் மதிப்பெண் சரியாக எடுக்காவிட்டாலும் அடி பயங்கரமாக விழும். இதனாலேயே பள்ளியருகே இருக்கும் ஒரு கோவிலில் உள்ள ஒரு இலையை எடுத்து படிப்பு இலை என ஒவ்வொரு புத்தகத்திலும் வைத்துக் கொள்வான். நான் வழக்கமாக ஒரு மயிலிறகும் அது வளர்வதற்கு இரண்டு அரிசியும் வைத்துக் கொள்வேன். அது வளருவது போலவே எனக்கும் ஒரு எண்ணமுண்டு அப்பொழுது.

பரீட்சை எல்லாம் முடிந்து நாங்கள் கோலி பம்பரம் பட்டமென விளையாட்டை ஆரம்பித்த தருணம் அது. பழனி என் தெருவைத் தாண்டி மண்ணெண்ணெய் வாங்கி வர சென்று கொண்டிருந்தான். "விளையாட வரலியாடா" என்றேன். "தோ, பாஸ்கரு, கிருஷ்ணாயில் வாங்கி வீட்ல குடுத்துட்டு உங்கூட வெளாட வர்றேன்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தான். சற்று நேரத்திற்கெல்லாம் எனது தெருவில் எல்லோரும் முணுமுணுத்துக் கொண்டே ஓடினார்கள், என் அம்மாவும் சேர்ந்து. என்னவாக இருக்குமென நானும் பின்னாடியே சென்றேன், அது பழனி வீட்டு முன்னர் போய் நின்றது. கூட்டத்தில் ஒருவர் என் அம்மாவிடம் கூறினார் "பாவம்மா அந்தப்புள்ள... கிருஷ்ணாயில் வாங்கக் கொடுத்த காச வழியில தொலைச்சுடுச்சு, அதுக்கு பழனியம்மா இரு இரு அப்பா வரட்டும் உனக்கு வச்சுக்குறேன்னு சொல்லிட்டு அது ரேஷணுக்கு போயாரதுக்குள்ள இந்தப் புள்ள தூக்கு மாட்டி செத்துப் போச்சும்மா" என்றார். அதிர்ச்சியில் என் அம்மாவும், அழுகையில் நானும்....

"தற்கொலை செஞ்சுக்குறது கோழத்தனன்டா பாஸ்கரு" என்று ஒரு முறை அவன் கூறியது ஞாபகம் வரவே அவனது பூத உடலை பார்க்க மாட்டேனென கோபித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடிவிட்டேன். இப்பொழுதும் யாராவது சின்னக் குழந்தை காசைத் தொலைச்சுட்டேன்னு அழுதா அது எவ்வளவு பணமா இருந்தாலும் உடனே நான் அதைக் கொடுத்துவிடுவேன், கொடுக்கும் பொழுதெல்லாம் பழனி என் கண்முன் வந்து மறைவான். ஒவ்வொரு முறையும் நான் கனவில் விழித்துக் கொள்ளும் பொழுதெல்லாம் தோன்றும், அவனைக் கடைசியா ஒரு முறை பார்த்திருக்கலாமோவென்று...


அவன் பெயர் டோனி...

கடந்தகால குறிப்புகள் - 2
அவன் பெயர் டோனி...

சூழ்ந்திருக்கும் மனிதர்களுக்கு மத்தியிலும் தனிமைப் படுத்தப் பட்ட ஒரு தருணமது. அந்தப் பிஞ்சு மனதிற்குள் அதற்கான காரணங்களாய் சில வேர்கள் மனம் கிழித்து வளர்ந்து நின்றது. அந்த வேர்கள் கிழித்துப்போன இடத்தினிலிருந்து சொட்டுச் சொட்டாய்க் கசிந்திடும் இரணங்களே அந்த வேர்களுக்கு நீராய் மாறியது. மெல்ல மெல்ல அந்த வேர்கள் அவன் முகங்களில் தனிமைக் கிளைகளைப் பரப்பி அதில் கனவு இலைகளை வளர்த்துக் கொண்டிருந்தது.

மெல்ல மெல்ல அவன் அந்தத் தனிமையின் ரசிகனாகிவிட்டான். அவன் முகம் மீது வளர்ந்திருக்கும் அந்த தனிமை மரம் அவனுக்கோர் கற்பக விருட்சமாய்த் தெரிந்தது, அதிலே சுந்தரக் காய்கள் முளைப்பது போலவும், வண்ண மலர்கள் பூப்பது போலவும் கனவு கண்டு கொள்வான் கண்கள் திறந்துகொண்டே. காலை ஏழு மணிக்கே பள்ளி சென்றதும் மற்ற நண்பர்கள் வரும் வரை அந்த பகற்கனவில்தான் அவனது வசந்தம். இன்னும் பேருந்துப் பயணம், வீட்டில் அவனது பெற்றோர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நேரம், அப்படி இப்படியென அவனது தனிமைப் பொழுதுகள் முழுதும் கனவுகளே அவனை வசீகரித்துக் கொண்டிருந்தது. போதைக்கு அடிமையானவனைப் போல, அவனே வீட்டிலுள்ள உரையாடல்களை மெல்ல மெல்ல தவிர்க்க ஆரம்பித்து அவனை அவனே அந்த தனிமைச் சிறையில் செல்லக் கைதியாய் அடைத்துக் கொள்வான். உடனே அந்த கனவுலக தேவதை அவன் எண்ணங்களில் வடிய ஆரம்பித்துவிடுவாள். அந்தக் கனவுலகில் அவனுக்கான தாய், தந்தை, தங்கையென சொந்த பந்தங்கள் இப்படியாய் நீண்டு கொண்டே இருந்தது.

அது ஒரு பின்பனிக்காலம். அன்று அவனை பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டுக்கு அழைத்துவந்த அப்பா, அவனுக்கான பரிசுப் பொருளொன்று வீட்டில் இருப்பதாய் சொன்னார். அவன் அந்தப் பரிசைப் பற்றிய கற்பனைகளில் இறக்கைகளை வளர்த்துக் கொண்டு அவனது கனவுலகம் பூராவும் பறந்து சென்று, நமது உலகத்தின் இன்னொரு விருந்தாளி என உறக்கச் சொல்லியபடியே வீட்டுக்கு வந்தான். அங்கே வேகமாய் வீட்டுக்குள் நுழைய எத்தனிக்கும் பொழுது கருகருவென ஒரு நாய்க்குட்டி வாசலருகே கட்டிப் போடப் பட்டிருந்தது. உயிரற்ற பல பரிசுப் பொருள்களைக் கற்பனையில் சிந்தித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு உயிருள்ள பரிசுப் பொருள் மிகப் பெரிய பொக்கிஷமாய்த் தெரிந்தது. அருகே செல்ல சின்ன பயம் வேறு... கடித்து விடுமோவென்று...

அது ஒரு குள்ளசாதி நாய், குட்டையாய் ஆனால் நீளமாய் வளரும். அதன் காது தரை வரை தொங்கி ஊசலாடும். கருப்பு நிற வெல்வெட்டாய் அதன் மயிர்க் கற்றைகள். தாயைப் பிரிந்த ஏக்கம் அதன் கண்களில் வெகுவாகத் தெரிந்தது. ஒரு வாசல் அடைத்தால் மறுவாசல் திறக்கும் என்ற முதுமொழியின் அர்த்தம் அந்த இருவருக்குமே உண்மையானது. ஆம், அந்தச் சிறுவனின் நிழல் உலகிலிருந்து அவனுக்கான நிஜமாய், இன்னொரு தாய்... நாய் வடிவில்... அந்த நாய்க்கோ அந்தச் சிறுவன் வடிவில் ஒரு மாற்றுத்தாய். இருவருக்குமே பூரிப்பு. மெல்ல மெல்ல அந்த நாய் வளர்ந்தது, அவனது பாசக் கரங்களின் ஆயுள் ரேகைகளோடு சேர்ந்துகொண்டு...

டோனி என்றதும் எங்கிருந்தாலும் ஓடிவந்திடும். ஓடி வந்து அவனைத் தாண்டி வழுக்கிச் சென்றபடி நின்று பின் அங்கிருந்து மீண்டும் அவனிடம் வந்துசேர்வதே அதன் பழக்கம். அவன் சுவரில் முதுகு சாய்த்து காலைச் சம்மளமிட்டு கையில் புத்தகத்தோடு படிக்க ஆரம்பிக்கையில் அது மெல்ல மெல்ல அவன் கரங்களுக்கும் தொடைகளுக்கும் நடுவே முகம் புதைத்துக் கொள்ளும். அவன் மெல்ல மெல்ல கனவுலகிலிருந்து மீண்டு நிஜ உலகிற்கு வரத்தொடங்கினான் டோனியின் ஸ்பரிசத்தினூடே... வீடு முழுக்க எங்கேயும் மண்தரைக்கான இடமேயில்லை, அது ஒரு சின்ன இடம், முழுவதும் வீடும், சுற்றுச் சுவரும், சிமெண்டால் பூசப்பட்ட முற்றமுமென இருக்கும். அந்த நாயை வீட்டுக்கு வெளியில் கொண்டு சென்று மலம் கழிக்க சொன்னால், அது கேட்காது. எவ்வளவு தூரம் அடக்க முடியுமோ அடக்கிக் கொண்டு வீட்டிற்குள் அழைத்து வந்ததும் தன் காலைக் கடனை முடித்து விடும். வழக்கம்போல அதை அள்ளுவது அவனது அப்பா, அம்மாவின் வேலை.

மெல்ல மெல்ல டோனியின் மீதான பாசம் சிறுவனின் அம்மாவிற்கு குறைய ஆரம்பித்தது. "ஏன் நாயை வளர்ப்பானேன் பீயைச் சுமப்பானேன்" என்ற சொற்கள் அடிக்கடி விழ ஆரம்பித்தது. அந்தச் சொற்கள் சிறுவனின் மனதிற்குள் சின்ன சின்ன குண்டூசியாய் குத்த ஆரம்பித்தது. அவன் டோனியிடம் கெஞ்சலானான், அம்மா சொல்வதைப் போல கேட்டு நடந்து கொள்ளென்று... டோனி கேட்டபாடில்லை. அதன் சேட்டைகள் தொடர ஆரம்பித்தது.

மெல்லமெல்ல வரத்தொடங்கிய அந்த மழைக்காலம் கொஞ்சம் கொஞ்சமாக பேய்மழையாய் பெய்யத் தொடங்கியது. மழையென்றதுமே அந்தச் சிறுவனின் வீட்டு முற்றத்தில் தண்ணீர் தேங்கிவிடும். டோனியை வீட்டிற்குள்ளே வைத்திருக்க வேண்டிய சூழல். ஆனால் அவனோ வீட்டிற்குள்ளே படுக்கையறையிலேயே சிறுநீரும், மலமும் கழிக்க ஆரம்பித்துவிடுவான். கொஞ்சமாய் மழை ஓய்ந்திருந்த காலம் வந்தது.

வழக்கம் போல சிறுவனை அவனது பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார் அப்பா. வீட்டில் அவன் இறங்கியதும் ஓடி வரும் டோனியைக் காணவில்லை. தேடினான் கிடைக்கவில்லை. அம்மாவிடம் கேட்டான், "டோனி எங்கம்மா?". அங்கிருந்து ஒரு பதில் எந்த வித சலனமுமின்றி வந்தது "அதை இன்னொருத்தருகிட்ட கொடுத்தாச்சுப்பா, அதை வச்சு நம்மளால சமாளிக்க முடியாது....." அந்த வீட்டின் கூரையிலிருந்து சொட்டுச் சொட்டாய் தூறிக் கொண்டிருந்தது மீத மழை, அவனுக்கு காய்ச்சல் வந்து முணங்கிக் கொண்டிருந்தான் டோனி... டோனி... டோனி... என்று. அவனது கனவு தேவதை மீண்டும் அவனை அள்ளி அணைத்துக் கொண்டு அதே தனிமைப் பிரதேசத்தில் பயணிக்கத் துவங்கினாள்...

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது நடந்த சம்பவம்.

அவள் பெயர் ராஜராஜேஸ்வரி...

கடந்தகால குறிப்புகள் - 1

அவள் பெயர் ராஜராஜேஸ்வரி...

பென்ஸிலிலிருந்து பேனாவிற்கு தாவிய ரம்மியமான பொழுதுகள். நோட்டுகளுக்கான சட்டையைக் கூட நானே இட்ட இதமான கணங்கள். அப்பொழுதெல்லாம் ஒரு வகுப்பிற்கு ஒரே ஆசிரியர்தான். மூன்றாம் வகுப்பு கஸ்தூரி டீச்சர் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். ஒரு சமயத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் விடுமுறை எடுக்கச் செய்து ஊருக்குக் கூட்டிப்போக எத்தனித்துக் கொண்டிருந்த எனது அம்மாவிடம், "பையனை என்வீட்ல வேணும்னா வச்சுக்குறேன், சமத்துப் பையன்" என்று கூறி என் உச்சந்தலையை கஸ்தூரி டீச்சர் கோதிவிட்டது இன்னும் என் கண்ணுக்குள் காட்சி மாறாமல்...

அந்த டீச்சரே மீண்டும் வருவாரா என்ற ஏக்கத்துடன் தொடங்கியது கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் எனது நான்காம் வகுப்பிற்கான பயணம். வெள்ளைச் சட்டை, காக்கி கால்சட்டையென புத்தம்புது உடையில் சீறி வரும் காற்றை எதிர்கொண்டவாறே வண்டியில் பெட்ரோல் டேங்கிற்கும் அப்பா அமரும் இருக்கைக்கும் இடையே தொடர்ந்தது அந்தப் பயணம். எனக்கு எப்பொழுதுமே அப்படி அமர்ந்து போவது பிடிக்கும், அப்பாவின் இரும்புக் கரங்களுக்கூடே, வேகமாக செல்லும் வண்டியிலே மனதிற்குள்ளேயே நான் அந்த வண்டியை ஓட்டிச் செல்வதாய் ஒரு சின்ன நினைவோடு.... இனிமை.

9 மணி பள்ளிக்கூடத்திற்கு 7.15க்கே அப்பா என்னை அழைத்துச் சென்று விட்டுவிடுவது வழக்கம். அப்பொழுதுதான் அப்பா அவரது வேலையை கவனிக்க சரியாயிருக்கும். என்னுடைய பழைய வகுப்பறையில் சிறிது நேரம் உட்கார்ந்து பார்த்துவிட்டு. இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தேன். கோடை விடுமுறையின் இடைவெளிக்குப் பிறகு மீண்டுமந்த பள்ளிக்கூட மண்வாசனை மூக்கைத் துளைத்தது. நேரம் கடக்க கடக்க எனது வகுப்புத் தோழர்களெல்லாம் வந்தார்கள். தலைமையாசிரியர் அறைக்குச் சென்று எனது வகுப்பெதுவென்று தெரிந்து கொண்டு பவனி செல்லும் ஒரு ராஜாவைப் போல வீர நடையோடு வகுப்பு நோக்கிச் சென்றேன். 9 மணி ஆனதும் உள்ளே நுழைந்தார் எங்கள் பள்ளியிலே கண்டிப்பான டீச்சர் பட்டியிலில் ஒருவராய் இருக்கும் சரோஜா டீச்சர். அவரைப் பார்த்ததுமே சின்ன நடுக்கம், இனம் புரியாத சின்ன பயம். தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, வகுப்பு நாளேட்டை வாசிக்கத் துவங்கினார்.

ஒவ்வொருவராக "உள்ளேன் டீச்சர்" சொல்லிக் கொண்டு வந்தவேளை எனக்குப் பழகாத ஒரு புதிய குரல் "யெஸ் மேடம்" என்றது. யாரது வித்தியாசமாக சொல்வது என்ற எதிர்பார்ப்புடன் திரும்பிப் பார்த்தால், எனது உயரம் மதிக்கத்தக்கவள், பளீர் நிறம், இரட்டை ஜடை, அகன்ற சிரிப்பு, சின்னப் பொட்டு, காலில் வெள்ளிக் கொலுசென எனது வகுப்புக்கு ஓர் புது வரவு.

அவளைப் பற்றிய எந்த எண்ணமுமே இல்லாமல் கழிந்தது முதல் இடைத்தேர்வு வரை. அந்த முதல் இடைத்தேர்வில், வழக்கமாக நான் வாங்கும் முதல் ராங்க் அவளெடுத்துவிட்டாள். எனக்கும் அவளுக்குமான மதிப்பெண் இடைவெளி 15 தேறும். நான் வாடிப் போய்விட்டேன். அது நாள் வரை வகுப்பின் சாக்பீஸ், டஸ்டர் எனது கண்கவனிப்பில் இருந்தது மாறிப்போய் அவளது கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. வீட்டிற்கு ராங்க் கார்டை எடுத்துச் சென்றால் "என்னடா முதல் ராங்க் வாங்காமல் இரண்டாவது வந்திருக்க" என்ற கேள்வி, அதுவும் என் அத்தைப் பெண்கள் இருக்கும் நேரத்தில். நான் பளீரென்று பதில் சொன்னேன் "அவள் மட்டும் காலாண்டுக்கு ஒரு பாடத்துக்காவது லீவ் போடட்டும், நான் தான் முதல் ராங்க் வாங்குவேன்" என்று. அங்கிருந்த அத்தனை பேருக்கும் கலீரென்ற சிரிப்பு.

சொன்ன படியே அவள் காலாண்டிற்கு அறிவியல் தேர்விற்கு வரவில்லை. வேறென்ன... நான் தான் முதல் மதிப்பெண். இருப்பினும் அவளுக்குமெனக்குமான மதிப்பெண் வித்தியாசம் வெறும் 25குள்ளாகத்தான். அவள் அறிவியலில் தேர்ச்சியடைந்திருந்தாலே என்னை விட நிச்சயம் முன்னால் சென்றிருப்பாளென என் உள்ளம் துடித்துக் கொண்டது. குரூப் ஸ்டடீஸ் என்ற முறையை அறிமுகப் படுத்தினார் சரோஜா டீச்சர். அதில் முதல் 8 மதிப்பெண் எடுத்தவர்கள் குரூப் லீடராகவும், மீதமுள்ளோர் அவர்களின் அங்கத்தினராகவும் இருக்க வேண்டும், தலா 5 பேர் கொண்ட குழு. மாலை வகுப்பின் கடைசி மணி நேரத்தில் அன்று கொடுத்த கேள்வி பதில்களை மனப்பாடம் செய்யச் சொல்லி சரியாக மாணவர்களை ஒப்பிக்க வைக்க வேண்டியது எங்களது பொறுப்பு. பின்னர் குரூப் லீடரெல்லாம் சேர்ந்து சரோஜா டீச்சரிடம் ஒப்பிக்க வேண்டும்.

அப்பொழுது அவளே வந்து எனது முதுகின் பின்னமர்ந்துகொண்டு பேசலானாள். அவளை ராஜ ராஜேஸ்வரி என்று முழுப் பெயர் சொல்லித்தான் அழைப்பேன். எனக்கு மிகவும் நெருங்கிய தோழியாகிவிட்டாள். நாங்கள் இருவரும் சேர்ந்து படிப்பதும், அவ்வப் பொழுது சாப்பிடுவதும், குரூப்பை கவனிக்க மறந்து சிரித்து பேசிக் கொள்வதும் வாடிக்கையாகிப் போனது. ஆனாலும் அதன் பிறகு அந்த முதல் மதிப்பெண்ணை நான் தவறவிடவில்லை, அவள் எல்லா தேர்விற்கும் வந்தும். ஆனால் அந்த சாக்பீஸையும் டஸ்டரையும் அவள் என்னிடம் கொடுத்த பொழுது நீயே வைத்துக் கொள் என்று பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தேன். நான் வருடா வருடம் வரைதல் போட்டியில் முதலிடம் பிடித்துவிடுவேன், அவளும் அதைப் பாராட்டுவாள். 5ம் வகுப்பிற்கும் அதே சரோஜா டீச்சரே வந்தார். என் வகுப்புக்காரி ஒருத்தி ஓடி வரும்போது திண்ணையில் வழுக்கி முழங்கைக்கு கீழே உடைந்து போனது. அதைப் பார்த்த பதட்டத்தில் என் கைகளை அவள் இறுகப் பிடித்துக் கொண்டாள். இருவரும் அப்படியே உறைந்து நின்றோம் சற்று நேரம்.

5ம் வகுப்பு இறுதித் தேர்வும் முடிந்த பிறகு சொந்த ஊருக்குப் போகும் கனவோடே சட்டென பள்ளிக்கூடத்தை விட்டு கிளம்பிவிட்டேன். 5ம் வகுப்பு வரைதான் அந்த பள்ளிக் கூடத்தில் உண்டு. அதன் பிறகு ஆண்களுக்குத் தனிப் பள்ளி, பெண்களுக்குத் தனிப் பள்ளியென பிரிந்துவிடும். இரண்டும் அக்கம்பக்கம் கூட இல்லை, கொஞ்ச தூரம் போகணும். தேர்வின் முடிவுகளைப் பார்த்துவிட்டு சான்றிதழ்கள் வாங்க வந்த அன்றுதான் என் மரமண்டைக்கு எட்டியது இனி ராஜ ராஜேஸ்வரியைப் பார்க்க முடியாதுன்னு. அவள் இன்னும் எனது எண்ணங்களை விட்டகலாத என்னுடைய முதல் தோழியாகவே இருக்கிறாள்.

தோப்பு

மழைத் துளி மேலே பட்டதாய் உணர்ந்தான். மயக்கம் தெளிந்து மெல்ல கண்விழித்தான். சுற்றிலும் யாரும் இல்லை... யார் தண்ணீர் ஊற்றியது என்று குழம்பிக் கொண்டே, தனது முகத்தை துடைத்தான் மாயன். அது தண்ணீரல்ல, காகையின் எச்சம் எண்பதை உணர்ந்தான். மெல்ல மெல்ல கை ஊன்றி எழுந்தான்.

பசிக்கொடுமை தாங்காது வயிறு புறமுதுகிட்டு ஓடியது, புறமுதுகையே தொட்டுவிட்டது. செங்கல் சூளையில் நிற்பது போன்ற வெப்பம் அவன் உடலெங்கும் பிய்த்தது. சற்றே நினைவுகூர்ந்தான், எதற்கு மயங்கினோம்? மேலே சூரியனை ஏறிட்டுப் பார்த்ததும் மயங்கிவிட்டோம் என்பதை உணர்ந்தான்.

அவன் நாக்கு மேல்வாயில் ஒட்டிக் கொண்டது. அப்படியே தொடர்ந்து நடந்தான். அவனது சரும வெடிப்பு தரையில் தண்ணீரின்றி வந்த வெடிப்புகள் போலவே இருந்தன. தண்ணீர் தண்ணீர் என்று முணங்கிக் கொண்டே நடந்தான். இரண்டு மணி நேரம் நடந்தான். வரும் வழியில் ஓய்வெடுக்க ஒரு மரத்தில் கூட இலைகளே இன்றி இருந்தது. ஒரு சில மரமும் கருகிய நிலையில் நின்று கொண்டிருந்தது. அதற்கு மேல் அடியெடுத்து வைக்க முடியாது விழுந்தான் மாயன். அவனை அங்கிருந்த மூன்று பேர் தூக்கிக் கொண்டு போய் அருகிலிருந்த வீட்டுத் திண்ணையில் கிடத்தினார்கள்.

"ஏய் இங்க வா புள்ள, இந்தா ஒரு ஆளு உசுரு போறாப்புல இருக்கு, கொஞ்சம் அத எடுத்துட்டுவா" என்றான் கூட்டத்திலிருந்த ஒருவன். "நீ பாட்டுக்கு போற வர்றவனையெல்லாம் இழுத்துட்டு வந்துகிட்டு இருக்க, குடுக்குறதுக்கு நான் எங்க போறது. ஊரே தண்ணி இல்லாம செத்துகிட்டு கெடக்கு..." என்று கூறிக் கோப்பை நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தாள். அருகில் வந்ததும் அலறிக் கத்தினாள்... "அப்பா, அப்பா" என்று அலறினாள்.

"ஏய் இந்தா புள்ள, இது ஒ அப்பனா? நல்லா பாத்து சொல்லுடி" என்றான் அவள் கணவன் ராசு. "என்னத்த சொல்லுவேன், இப்படி வந்து கெடக்காகளே, நான் என்னத்த சொல்லுவேன். இருக்குறத குடிச்சுட்டு அவுகளாவது நிம்மதியா இருக்கட்டும்னுதானே வீட்ட விட்டு ஓடியாந்தேன், இப்படி ஒடிஞ்சு போயி கெடக்காகளே, நான் என்ன பண்ணுவேன்" என்று புலம்பிக் கொண்டே இருந்தாள். அவள் கையிலிருந்த கோப்பையை வாங்கி அவர் வாயில் தண்ணீர் ஊற்றினான் ராசு. மாயனுக்கு மெல்ல மெல்ல மயக்கம் தெளிஞ்சுது.

இலைகளைனூடே பாயும் கதிர் போல வரண்டு போன இமைகளினூடே பொறுமையாய் பார்த்தான் மாயன். அவனுக்கு எங்கிருக்கிறோம் என்ற பிரக்ஞை இல்லாமலிருந்தது. உற்றுப் பார்த்தான், அது அவள் மகள் இந்திரா போல தெரிந்தது. "இந்திரா இந்திரா" என்று முணங்கினான். அவள் மாயனை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு அழுதாள், "அம்மா எங்கப்பா, அம்மா எங்க" என்றாள்.

புற்றுக்குள் மறைந்திருக்கும் பாம்பு வெளி வருவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு வந்தது மாயனுக்கு. "உன் அம்மா பட்டினியா இருக்கா, ஏதாச்சும் கெடைக்குமானுதான் நான் இம்புட்டு தூரம் நடந்தாந்தேன். நான் வூட்டுக்குப் போகணும் வூட்டுக்குப் போகணும்" என்று சொல்லிக் கொண்டே மேலெழுந்தான்.

"இருப்பா, எலிக்கறி இருக்கு சாப்பிட்டுட்டு, அம்மாக்கு ஒரு எலிக்கறி கொண்டு போப்பா. இந்த பிளாஸ்டிக் பையில் ஒரு டம்ளர் தண்ணி இருக்கு, இதையும் கொண்டு போப்பா" என்று குரல் கரகரத்துக் கூறினாள் இந்திரா. மாயன் அதையெல்லாம் பொருட்படுத்தாம "அஞ்சல, அஞ்சல" என்று அவர் மனைவியின் பெயரை உரக்கக் கூவினார்....

"என்னாங்க என்னாங்க, என்னாச்சு இவருக்கு.... தண்ணி கிண்ணி குடிக்குறீயளா? ஏ இந்தா முழியுங்க.." அஞ்சலை.

தான் இவ்வளவு நேரம் கனவு கண்டதை உணர்ந்த மாயன் மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டு சன்னல் வழியே பின்னால் இருந்த தோப்பை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அஞ்சலை அவனருகே வந்து "தண்ணிய குடிச்சுட்டு தூங்குங்க, நாளைக்கு வெடிய காலையில தோப்ப அந்த கூல்டிங்க்ஸ் காரனுக்கு முடிச்சுக் கொடுக்கப் போகணும்ல" என்றாள்.

தண்ணீர் ஒரு செம்பு நிறைய குடித்துவிட்டு, கட்டிலில் சாய்ந்து கொண்டே மெதுவாய் அஞ்சலையிடம் சொன்னான், "நாம, நம்ம தோப்பை விக்க வேணாம், அது இருக்கட்டும்..." என்று கூறிக் கொண்டே கண் மூடினான்.

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்