ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

அவன் பெயர் டோனி...

கடந்தகால குறிப்புகள் - 2
அவன் பெயர் டோனி...

சூழ்ந்திருக்கும் மனிதர்களுக்கு மத்தியிலும் தனிமைப் படுத்தப் பட்ட ஒரு தருணமது. அந்தப் பிஞ்சு மனதிற்குள் அதற்கான காரணங்களாய் சில வேர்கள் மனம் கிழித்து வளர்ந்து நின்றது. அந்த வேர்கள் கிழித்துப்போன இடத்தினிலிருந்து சொட்டுச் சொட்டாய்க் கசிந்திடும் இரணங்களே அந்த வேர்களுக்கு நீராய் மாறியது. மெல்ல மெல்ல அந்த வேர்கள் அவன் முகங்களில் தனிமைக் கிளைகளைப் பரப்பி அதில் கனவு இலைகளை வளர்த்துக் கொண்டிருந்தது.

மெல்ல மெல்ல அவன் அந்தத் தனிமையின் ரசிகனாகிவிட்டான். அவன் முகம் மீது வளர்ந்திருக்கும் அந்த தனிமை மரம் அவனுக்கோர் கற்பக விருட்சமாய்த் தெரிந்தது, அதிலே சுந்தரக் காய்கள் முளைப்பது போலவும், வண்ண மலர்கள் பூப்பது போலவும் கனவு கண்டு கொள்வான் கண்கள் திறந்துகொண்டே. காலை ஏழு மணிக்கே பள்ளி சென்றதும் மற்ற நண்பர்கள் வரும் வரை அந்த பகற்கனவில்தான் அவனது வசந்தம். இன்னும் பேருந்துப் பயணம், வீட்டில் அவனது பெற்றோர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நேரம், அப்படி இப்படியென அவனது தனிமைப் பொழுதுகள் முழுதும் கனவுகளே அவனை வசீகரித்துக் கொண்டிருந்தது. போதைக்கு அடிமையானவனைப் போல, அவனே வீட்டிலுள்ள உரையாடல்களை மெல்ல மெல்ல தவிர்க்க ஆரம்பித்து அவனை அவனே அந்த தனிமைச் சிறையில் செல்லக் கைதியாய் அடைத்துக் கொள்வான். உடனே அந்த கனவுலக தேவதை அவன் எண்ணங்களில் வடிய ஆரம்பித்துவிடுவாள். அந்தக் கனவுலகில் அவனுக்கான தாய், தந்தை, தங்கையென சொந்த பந்தங்கள் இப்படியாய் நீண்டு கொண்டே இருந்தது.

அது ஒரு பின்பனிக்காலம். அன்று அவனை பள்ளிக் கூடத்திலிருந்து வீட்டுக்கு அழைத்துவந்த அப்பா, அவனுக்கான பரிசுப் பொருளொன்று வீட்டில் இருப்பதாய் சொன்னார். அவன் அந்தப் பரிசைப் பற்றிய கற்பனைகளில் இறக்கைகளை வளர்த்துக் கொண்டு அவனது கனவுலகம் பூராவும் பறந்து சென்று, நமது உலகத்தின் இன்னொரு விருந்தாளி என உறக்கச் சொல்லியபடியே வீட்டுக்கு வந்தான். அங்கே வேகமாய் வீட்டுக்குள் நுழைய எத்தனிக்கும் பொழுது கருகருவென ஒரு நாய்க்குட்டி வாசலருகே கட்டிப் போடப் பட்டிருந்தது. உயிரற்ற பல பரிசுப் பொருள்களைக் கற்பனையில் சிந்தித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு உயிருள்ள பரிசுப் பொருள் மிகப் பெரிய பொக்கிஷமாய்த் தெரிந்தது. அருகே செல்ல சின்ன பயம் வேறு... கடித்து விடுமோவென்று...

அது ஒரு குள்ளசாதி நாய், குட்டையாய் ஆனால் நீளமாய் வளரும். அதன் காது தரை வரை தொங்கி ஊசலாடும். கருப்பு நிற வெல்வெட்டாய் அதன் மயிர்க் கற்றைகள். தாயைப் பிரிந்த ஏக்கம் அதன் கண்களில் வெகுவாகத் தெரிந்தது. ஒரு வாசல் அடைத்தால் மறுவாசல் திறக்கும் என்ற முதுமொழியின் அர்த்தம் அந்த இருவருக்குமே உண்மையானது. ஆம், அந்தச் சிறுவனின் நிழல் உலகிலிருந்து அவனுக்கான நிஜமாய், இன்னொரு தாய்... நாய் வடிவில்... அந்த நாய்க்கோ அந்தச் சிறுவன் வடிவில் ஒரு மாற்றுத்தாய். இருவருக்குமே பூரிப்பு. மெல்ல மெல்ல அந்த நாய் வளர்ந்தது, அவனது பாசக் கரங்களின் ஆயுள் ரேகைகளோடு சேர்ந்துகொண்டு...

டோனி என்றதும் எங்கிருந்தாலும் ஓடிவந்திடும். ஓடி வந்து அவனைத் தாண்டி வழுக்கிச் சென்றபடி நின்று பின் அங்கிருந்து மீண்டும் அவனிடம் வந்துசேர்வதே அதன் பழக்கம். அவன் சுவரில் முதுகு சாய்த்து காலைச் சம்மளமிட்டு கையில் புத்தகத்தோடு படிக்க ஆரம்பிக்கையில் அது மெல்ல மெல்ல அவன் கரங்களுக்கும் தொடைகளுக்கும் நடுவே முகம் புதைத்துக் கொள்ளும். அவன் மெல்ல மெல்ல கனவுலகிலிருந்து மீண்டு நிஜ உலகிற்கு வரத்தொடங்கினான் டோனியின் ஸ்பரிசத்தினூடே... வீடு முழுக்க எங்கேயும் மண்தரைக்கான இடமேயில்லை, அது ஒரு சின்ன இடம், முழுவதும் வீடும், சுற்றுச் சுவரும், சிமெண்டால் பூசப்பட்ட முற்றமுமென இருக்கும். அந்த நாயை வீட்டுக்கு வெளியில் கொண்டு சென்று மலம் கழிக்க சொன்னால், அது கேட்காது. எவ்வளவு தூரம் அடக்க முடியுமோ அடக்கிக் கொண்டு வீட்டிற்குள் அழைத்து வந்ததும் தன் காலைக் கடனை முடித்து விடும். வழக்கம்போல அதை அள்ளுவது அவனது அப்பா, அம்மாவின் வேலை.

மெல்ல மெல்ல டோனியின் மீதான பாசம் சிறுவனின் அம்மாவிற்கு குறைய ஆரம்பித்தது. "ஏன் நாயை வளர்ப்பானேன் பீயைச் சுமப்பானேன்" என்ற சொற்கள் அடிக்கடி விழ ஆரம்பித்தது. அந்தச் சொற்கள் சிறுவனின் மனதிற்குள் சின்ன சின்ன குண்டூசியாய் குத்த ஆரம்பித்தது. அவன் டோனியிடம் கெஞ்சலானான், அம்மா சொல்வதைப் போல கேட்டு நடந்து கொள்ளென்று... டோனி கேட்டபாடில்லை. அதன் சேட்டைகள் தொடர ஆரம்பித்தது.

மெல்லமெல்ல வரத்தொடங்கிய அந்த மழைக்காலம் கொஞ்சம் கொஞ்சமாக பேய்மழையாய் பெய்யத் தொடங்கியது. மழையென்றதுமே அந்தச் சிறுவனின் வீட்டு முற்றத்தில் தண்ணீர் தேங்கிவிடும். டோனியை வீட்டிற்குள்ளே வைத்திருக்க வேண்டிய சூழல். ஆனால் அவனோ வீட்டிற்குள்ளே படுக்கையறையிலேயே சிறுநீரும், மலமும் கழிக்க ஆரம்பித்துவிடுவான். கொஞ்சமாய் மழை ஓய்ந்திருந்த காலம் வந்தது.

வழக்கம் போல சிறுவனை அவனது பள்ளியிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார் அப்பா. வீட்டில் அவன் இறங்கியதும் ஓடி வரும் டோனியைக் காணவில்லை. தேடினான் கிடைக்கவில்லை. அம்மாவிடம் கேட்டான், "டோனி எங்கம்மா?". அங்கிருந்து ஒரு பதில் எந்த வித சலனமுமின்றி வந்தது "அதை இன்னொருத்தருகிட்ட கொடுத்தாச்சுப்பா, அதை வச்சு நம்மளால சமாளிக்க முடியாது....." அந்த வீட்டின் கூரையிலிருந்து சொட்டுச் சொட்டாய் தூறிக் கொண்டிருந்தது மீத மழை, அவனுக்கு காய்ச்சல் வந்து முணங்கிக் கொண்டிருந்தான் டோனி... டோனி... டோனி... என்று. அவனது கனவு தேவதை மீண்டும் அவனை அள்ளி அணைத்துக் கொண்டு அதே தனிமைப் பிரதேசத்தில் பயணிக்கத் துவங்கினாள்...

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது நடந்த சம்பவம்.

அவள் பெயர் ராஜராஜேஸ்வரி...

கடந்தகால குறிப்புகள் - 1

அவள் பெயர் ராஜராஜேஸ்வரி...

பென்ஸிலிலிருந்து பேனாவிற்கு தாவிய ரம்மியமான பொழுதுகள். நோட்டுகளுக்கான சட்டையைக் கூட நானே இட்ட இதமான கணங்கள். அப்பொழுதெல்லாம் ஒரு வகுப்பிற்கு ஒரே ஆசிரியர்தான். மூன்றாம் வகுப்பு கஸ்தூரி டீச்சர் என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். ஒரு சமயத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் விடுமுறை எடுக்கச் செய்து ஊருக்குக் கூட்டிப்போக எத்தனித்துக் கொண்டிருந்த எனது அம்மாவிடம், "பையனை என்வீட்ல வேணும்னா வச்சுக்குறேன், சமத்துப் பையன்" என்று கூறி என் உச்சந்தலையை கஸ்தூரி டீச்சர் கோதிவிட்டது இன்னும் என் கண்ணுக்குள் காட்சி மாறாமல்...

அந்த டீச்சரே மீண்டும் வருவாரா என்ற ஏக்கத்துடன் தொடங்கியது கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் எனது நான்காம் வகுப்பிற்கான பயணம். வெள்ளைச் சட்டை, காக்கி கால்சட்டையென புத்தம்புது உடையில் சீறி வரும் காற்றை எதிர்கொண்டவாறே வண்டியில் பெட்ரோல் டேங்கிற்கும் அப்பா அமரும் இருக்கைக்கும் இடையே தொடர்ந்தது அந்தப் பயணம். எனக்கு எப்பொழுதுமே அப்படி அமர்ந்து போவது பிடிக்கும், அப்பாவின் இரும்புக் கரங்களுக்கூடே, வேகமாக செல்லும் வண்டியிலே மனதிற்குள்ளேயே நான் அந்த வண்டியை ஓட்டிச் செல்வதாய் ஒரு சின்ன நினைவோடு.... இனிமை.

9 மணி பள்ளிக்கூடத்திற்கு 7.15க்கே அப்பா என்னை அழைத்துச் சென்று விட்டுவிடுவது வழக்கம். அப்பொழுதுதான் அப்பா அவரது வேலையை கவனிக்க சரியாயிருக்கும். என்னுடைய பழைய வகுப்பறையில் சிறிது நேரம் உட்கார்ந்து பார்த்துவிட்டு. இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தேன். கோடை விடுமுறையின் இடைவெளிக்குப் பிறகு மீண்டுமந்த பள்ளிக்கூட மண்வாசனை மூக்கைத் துளைத்தது. நேரம் கடக்க கடக்க எனது வகுப்புத் தோழர்களெல்லாம் வந்தார்கள். தலைமையாசிரியர் அறைக்குச் சென்று எனது வகுப்பெதுவென்று தெரிந்து கொண்டு பவனி செல்லும் ஒரு ராஜாவைப் போல வீர நடையோடு வகுப்பு நோக்கிச் சென்றேன். 9 மணி ஆனதும் உள்ளே நுழைந்தார் எங்கள் பள்ளியிலே கண்டிப்பான டீச்சர் பட்டியிலில் ஒருவராய் இருக்கும் சரோஜா டீச்சர். அவரைப் பார்த்ததுமே சின்ன நடுக்கம், இனம் புரியாத சின்ன பயம். தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, வகுப்பு நாளேட்டை வாசிக்கத் துவங்கினார்.

ஒவ்வொருவராக "உள்ளேன் டீச்சர்" சொல்லிக் கொண்டு வந்தவேளை எனக்குப் பழகாத ஒரு புதிய குரல் "யெஸ் மேடம்" என்றது. யாரது வித்தியாசமாக சொல்வது என்ற எதிர்பார்ப்புடன் திரும்பிப் பார்த்தால், எனது உயரம் மதிக்கத்தக்கவள், பளீர் நிறம், இரட்டை ஜடை, அகன்ற சிரிப்பு, சின்னப் பொட்டு, காலில் வெள்ளிக் கொலுசென எனது வகுப்புக்கு ஓர் புது வரவு.

அவளைப் பற்றிய எந்த எண்ணமுமே இல்லாமல் கழிந்தது முதல் இடைத்தேர்வு வரை. அந்த முதல் இடைத்தேர்வில், வழக்கமாக நான் வாங்கும் முதல் ராங்க் அவளெடுத்துவிட்டாள். எனக்கும் அவளுக்குமான மதிப்பெண் இடைவெளி 15 தேறும். நான் வாடிப் போய்விட்டேன். அது நாள் வரை வகுப்பின் சாக்பீஸ், டஸ்டர் எனது கண்கவனிப்பில் இருந்தது மாறிப்போய் அவளது கைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. வீட்டிற்கு ராங்க் கார்டை எடுத்துச் சென்றால் "என்னடா முதல் ராங்க் வாங்காமல் இரண்டாவது வந்திருக்க" என்ற கேள்வி, அதுவும் என் அத்தைப் பெண்கள் இருக்கும் நேரத்தில். நான் பளீரென்று பதில் சொன்னேன் "அவள் மட்டும் காலாண்டுக்கு ஒரு பாடத்துக்காவது லீவ் போடட்டும், நான் தான் முதல் ராங்க் வாங்குவேன்" என்று. அங்கிருந்த அத்தனை பேருக்கும் கலீரென்ற சிரிப்பு.

சொன்ன படியே அவள் காலாண்டிற்கு அறிவியல் தேர்விற்கு வரவில்லை. வேறென்ன... நான் தான் முதல் மதிப்பெண். இருப்பினும் அவளுக்குமெனக்குமான மதிப்பெண் வித்தியாசம் வெறும் 25குள்ளாகத்தான். அவள் அறிவியலில் தேர்ச்சியடைந்திருந்தாலே என்னை விட நிச்சயம் முன்னால் சென்றிருப்பாளென என் உள்ளம் துடித்துக் கொண்டது. குரூப் ஸ்டடீஸ் என்ற முறையை அறிமுகப் படுத்தினார் சரோஜா டீச்சர். அதில் முதல் 8 மதிப்பெண் எடுத்தவர்கள் குரூப் லீடராகவும், மீதமுள்ளோர் அவர்களின் அங்கத்தினராகவும் இருக்க வேண்டும், தலா 5 பேர் கொண்ட குழு. மாலை வகுப்பின் கடைசி மணி நேரத்தில் அன்று கொடுத்த கேள்வி பதில்களை மனப்பாடம் செய்யச் சொல்லி சரியாக மாணவர்களை ஒப்பிக்க வைக்க வேண்டியது எங்களது பொறுப்பு. பின்னர் குரூப் லீடரெல்லாம் சேர்ந்து சரோஜா டீச்சரிடம் ஒப்பிக்க வேண்டும்.

அப்பொழுது அவளே வந்து எனது முதுகின் பின்னமர்ந்துகொண்டு பேசலானாள். அவளை ராஜ ராஜேஸ்வரி என்று முழுப் பெயர் சொல்லித்தான் அழைப்பேன். எனக்கு மிகவும் நெருங்கிய தோழியாகிவிட்டாள். நாங்கள் இருவரும் சேர்ந்து படிப்பதும், அவ்வப் பொழுது சாப்பிடுவதும், குரூப்பை கவனிக்க மறந்து சிரித்து பேசிக் கொள்வதும் வாடிக்கையாகிப் போனது. ஆனாலும் அதன் பிறகு அந்த முதல் மதிப்பெண்ணை நான் தவறவிடவில்லை, அவள் எல்லா தேர்விற்கும் வந்தும். ஆனால் அந்த சாக்பீஸையும் டஸ்டரையும் அவள் என்னிடம் கொடுத்த பொழுது நீயே வைத்துக் கொள் என்று பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தேன். நான் வருடா வருடம் வரைதல் போட்டியில் முதலிடம் பிடித்துவிடுவேன், அவளும் அதைப் பாராட்டுவாள். 5ம் வகுப்பிற்கும் அதே சரோஜா டீச்சரே வந்தார். என் வகுப்புக்காரி ஒருத்தி ஓடி வரும்போது திண்ணையில் வழுக்கி முழங்கைக்கு கீழே உடைந்து போனது. அதைப் பார்த்த பதட்டத்தில் என் கைகளை அவள் இறுகப் பிடித்துக் கொண்டாள். இருவரும் அப்படியே உறைந்து நின்றோம் சற்று நேரம்.

5ம் வகுப்பு இறுதித் தேர்வும் முடிந்த பிறகு சொந்த ஊருக்குப் போகும் கனவோடே சட்டென பள்ளிக்கூடத்தை விட்டு கிளம்பிவிட்டேன். 5ம் வகுப்பு வரைதான் அந்த பள்ளிக் கூடத்தில் உண்டு. அதன் பிறகு ஆண்களுக்குத் தனிப் பள்ளி, பெண்களுக்குத் தனிப் பள்ளியென பிரிந்துவிடும். இரண்டும் அக்கம்பக்கம் கூட இல்லை, கொஞ்ச தூரம் போகணும். தேர்வின் முடிவுகளைப் பார்த்துவிட்டு சான்றிதழ்கள் வாங்க வந்த அன்றுதான் என் மரமண்டைக்கு எட்டியது இனி ராஜ ராஜேஸ்வரியைப் பார்க்க முடியாதுன்னு. அவள் இன்னும் எனது எண்ணங்களை விட்டகலாத என்னுடைய முதல் தோழியாகவே இருக்கிறாள்.

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்