ஒளியவனின் சிறுகதைகள்

அனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

மின்மடலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

மனிதமென்னும் மந்திரம் - சிறுகதை

அப்துல்லா எளிதில் யாருடனும் பழகிவிடும் ஒருவன். வேலை காரணமாக ஒரு சேவல் பண்ணையில் தங்கியிருந்தான். அவன் அறைக்கு அன்று புதிதாய் ஒருவர் இணையவுள்ளார் என்பதை பண்ணைக் காவலர் கூறியிருந்தார்.

"என்ன பாண்டியண்ணே புதுசா இன்னைக்கு யாரோ வர்றாருன்னீங்க, இன்னும் வரலையா?"

"வந்துடுற நேரம்தாம்பா, 8.00 கு இன்னைக்கு வர்றேன்னாரு, 8.30 ஆயிடுச்சு, வந்துடுவாரு."

"சரிண்ணே, புதுசா ஒரு சாவி போட்டுருங்க, இன்னைக்கு வர்றவருக்குத் தேவைப்படும். நான் வேலைக்குப் போயிட்டு வர்றேன்."

வீட்டைக் காலிபண்ணும்போது சாவியையும் சேர்த்தே கொண்டு போயிடுறானுக, ஒவ்வொரு தடவையும் புது சாவி போட வேண்டி கெடக்கென்று புலம்பிக் கொண்டே சாவியை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார்.

கட்டிட வேலை கண்காளிப்பாளன்ங்குறதால அடிக்கடி ஒவ்வொரு ஊருக்குப் போக வேண்டியிருக்கும். இந்த தடவை மதுரைக்கு வந்திருந்தான். பல நேரம் வேலைக்குப் போயிட்டு அடுத்த நாள் காலையில கூட வருவான். வழக்கமா போற திருமங்கலம் ரோட்டுல பேருந்துல இருந்து இறங்கி கட்டிடம் கட்டுற இடத்துக்குப் போயிகிட்டு இருந்தான். வழியில கொஞ்சம் கூட்டமா இருக்குறதப் பார்த்து அங்கே போனான்.

"என்னாச்சுங்க, எதுக்கு இவ்வளவு கூட்டம்?"

"யாரோ வலிப்பு வந்து கிடக்குறாங்க, சாவி கொடுத்தும் நிக்கல" கூட்டத்துல இருந்த ஒருத்தர் கொஞ்சம் அலட்சியமாகவே பதில் சொன்னார்.

"தள்ளி வாங்க, அவருக்கு ஏதாவது ஆயிடப் போகுது, பக்கத்துல மருத்துவமனை எங்க இருக்கு?"

"பக்கத்து தெருவுல கூட ஒண்ணு இருக்குப்பா"

சடாலென கீழே விழுந்திருந்தவரைத் தூக்கிக் கொண்டே கொஞ்ச தூரத்துலேயே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அளவுக்கு அதிகமாகவே கொஞ்சம் மருத்துவமனையை பரபரப்பாக்கிவிட்டான் அப்துல்லா.

"யாருப்பா இங்க இவரை சேத்தது, அவருக்கு சரியாயிடுச்சு, கூட்டிகிட்டுப் போகலாம். அப்படியே நர்ஸைப் பாத்து காசு எவ்வளவுன்னு கேட்டுக்குங்க" டாக்டர் எந்தவித சலனமுமின்றி தனது வேலையை முடித்துவிட்டுக் கூறினார்.

வெளியே இருந்து ஓடிவந்த அப்துல்லா, மூச்சு இளைத்துக் கொண்டே கையிலிருந்த பையை கீழே வைத்தான்.
"நாந்தான் டாக்டர், அவரைக் கூட்டிகிட்டு வந்தேன். எப்படி இருக்காரு, பிரச்சினை ஒண்ணுமில்லையே?!"

உள்ளே சென்று அந்த நபரைப் பார்த்தான்.
"எப்படி இருக்கீங்க. உங்க பை இதுன்னு நினைக்குறேன். எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க. உங்களுக்கு எதுவும் பிரச்சினையில்லையாம். நீங்க இனி உங்க வீட்டுக்குப் போகலாம். பணத்தைக் கட்டிட்டேன். உங்களுக்கு ஆட்டோக்கு எதுக்கும் காசு வேணுமா?"

"உங்களைப் பார்த்தா இஸ்லாம் மாதிரி தெரியுது, நானும்தான். இன்ஷா அல்லா, நல்ல நேரத்துல என்னைக் காப்பாத்துனீங்க. இல்லைன்னா அங்கேயே செத்திருப்பேன்."

"யாருக்கா இருந்தாலும் செஞ்சிருப்பேன். எல்லாமே உயிர்தானே. காப்பாத்த மட்டும்தான் அல்லா உத்தரவிட்டிருக்கான் அழிக்க இல்ல. எனக்கு நேரமாகுது நான் கிளம்பணும். நீங்க எங்க போகணும்னு சொல்றீங்களா?"

"நீங்க செஞ்ச உதவியே போதும். இனி நான் போய்க்குறேன். நீங்க செஞ்ச உதவியை அல்லாகிட்ட போற வரைக்கும் மறக்க மாட்டேன்".

பையையும் எடுத்துக் கொண்டு சேவல் பண்ணையை நோக்கி நடந்தான் காதர்.
"இன்னைக்கு வர்றேன்னு சொன்னவன் நான்ந்தான். வர்றதுக்கு கொஞ்சம் தாமதமாகிடுச்சு. என்னோட அறை எதுன்னு சொல்றீங்களா?"

பாண்டியன், அப்துல்லா அறைக்கு அழைத்துச் சென்று தங்கவைத்தார். உள்ளே இருந்த அப்துல்லாவின் படத்தைப் பார்த்துவிட்டு வியப்படைந்த காதர்
"இவருதான் இங்க தங்கியிருக்காரா? இன்னைக்கு நான் செத்துருக்க வேண்டியவன், இவர்தான் என்னைக் காப்பாத்தினாரு" என்று நடந்ததைக் கூறினான்.

"இவனா, நல்ல பையன்பா, இந்தப் பண்ணையில இந்த மாதிரி பையனை நான் பாத்ததில்ல, இங்க திருமங்கல ரோட்டோரத்துல இருக்க ஒரு கோவிலுக்குப் பக்கத்துல ஒரு கட்டிடம் கட்றாங்க, அங்கதான் வேலை பாக்குது இந்தத் தம்பி. சாய்ந்திரம் வந்திடும்."

இதோ வந்துடுறேன்னு சொல்லிட்டு பையிலிருந்து ஒரு கட்டிங் ப்ளேயரும், கத்தியும் எடுத்துகிட்டு உடனே தலை தெறிக்க ஓடினான். அப்துல்லா வேலை பார்க்குற கட்டிடத்தோட அஸ்திவாரத்துக்கு ஓடினான். மதுரையில தொடர்ந்து ஒரு மாசத்துக்கு அங்க இங்கன்னு குண்டு வைக்குறதுக்காக வந்தவந்தான் காதர். தன்னோட உயிரையே காப்பாத்துன அப்துல்லா வேலை பார்க்குற கட்டிடத்துல மூன்று குண்டுகளை வைத்திருந்தான். வேக வேகமாக ஒவ்வொரு குண்டா செயலிழக்க வச்சுகிட்டு இருந்தான். மூன்றாவது குண்டு படாரென்று பெரிய சத்தத்தோடு வெடித்தது. மேலே நின்ற அப்துல்லா முதற்கொண்டு இரண்டு பேர் கீழ விழுந்தார்கள். அடி பலமா படலைன்னாலும் அப்துல்லாவிற்கு கை பிசங்கிக் கொண்டது.

அடுத்த நாள் பாண்டியனிடம் நாளிதழ் வாங்கிப் படித்துக் கொண்டிருந்தான் அப்துல்லா பிசங்கிய கையில் கட்டோடு.
"ஏண்ணே, வீட்டுக்கு வந்தவரோட பை இருக்கு, ஆனா ஆள் வரவே இல்லையே?!"

"வந்து பைய வச்சுட்டு இதோ வர்றேன்னு ஓடிப் போனவருதாம்பா. ஆளைக் காணோம். இன்னைக்குப் பார்ப்போம், வரலைன்னா பையை தூக்கி வெளியே போட்டுடுவோம்"

செய்தித்தாளை உரக்க வாசித்தான்.
"இந்தியாவின் பல நகரங்களையடுத்து மதுரையிலும் குண்டு வெடிப்பால் மக்கள் பீதி. திருமங்கலம் செல்லும் சாலையில் ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி வெடிகுண்டால் சரிந்தது. வெடியில் சிக்கிய ஒரு வாலிபர் அடையாளம் காணமுடியாத வகையில் உடல் கருகி மரணம். அங்கே வெடிக்காத இரண்டு குண்டுகளும் கண்டு பிடிக்கப் பட்டது...."

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 16

குறுந்தொடர் - பகுதி 16

கடந்த காலத்துக்குச் சென்று எதிர்காலத்தை மாற்றும் பொருட்டு பயணிக்கத் தயாராகினர் மூவரும். இப்படி ஒரு அற்புத இயந்திரத்தை இழக்க வேண்டுமா என்ற ஆதங்கம் பாலாவின் முகத்தில் தெரிந்தது. கரனும், லதாவும் நெருக்கமாகப் பார்த்துக் கொண்டனர்.

"கரா, எனக்கு குழந்தை பாக்கியமே இல்லையாம். எனக்கு ஏதோ போல இருக்கு. கடந்த காலத்துக்குப் போனதுக்கப்புறம் நீ என்னை மறந்திடு. உனக்காவது ஒரு நல்ல வாழ்க்கை அமையட்டும்"

"என்ன தியாகம் பன்றதா நினைப்பா. உன்னால குழந்தை சுமக்க முடியலைன்னா என்ன இப்போ? நாம ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்போம். நான் முடிவே பண்ணிட்டேன், கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உன் கூடத்தான்னு"

மழை தூறி முடித்த பின் தெரியும் வானவில்லாய் ஒளிர்ந்தது அவள் முகம். தென்றலோடு மிதந்து வரும் லேசான தூறல் போலானது கரனின் அண்மை. மூவரும் ஒரு முறை சுயம்புவிடமும், சிமியிடமும் விடை பெற்றுக் கொண்டனர். அவர்கள் செல்ல வேண்டிய காலத்திற்கான ஏற்பாடுகளை சுயம்பு செய்தான். அப்படியே அங்கே எங்கே செல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு குறிப்பாக கரனிடம் ஒப்படைத்தான்.

கால இயந்திரத்தின் கதவுகள் மூடிக் கொண்டன, பயணத்திற்குத் தயாராகிவிட்டனர். சிமி யாரு? எப்படி இந்த பூமி இப்படி அழிஞ்சிருக்கும்? இன்னும் விடைதெரியாத பல கேள்விகளுக்கான ஒரே விடையான கால இயந்திரத்தை இழக்கப் போகிறோமென்ற எண்ணத்தோடு பாலாவின் முகம் சற்று இறுகிப் போய் இருந்தது.

"கரா, நான் ஒண்ணு சொல்றேன் கேப்பியா?"

"நீ என்ன சொல்லப் போற பாலா? அதைப் பொருத்துத்தான் கேக்குறதும், கேக்காததும்"

"இதோ பார், சுயம்பு சொல்ற படி கேட்டா நாம எல்லோரும் சாக வேண்டியதுதான்"

"வேற எப்படியும் செய்ய முடியாது. அது வலியில்லாத மரணம்தான். ஆனா, இந்தத் தியாகத்தைச் செஞ்சாதான் நாம நம்ம புறப்பட்டு வந்த காலத்துல வாழ முடியும்"

"இல்ல கரா, என்ன இருந்தாலும் இந்த ரகசியமெல்லாம் நம்மளோட அழிஞ்சிடும். நல்லா யோசிச்சுப் பாரு. உனக்கும் லதாவுக்கு இப்ப இருக்குற காதல் அழிஞ்சிடும். நீயும் அவளும் இப்போ எடுத்த முடிவு எல்லாம் வேற மாதிரியா நடக்கலாம். நீங்க திரும்பவும் ஒரு தடவை சுயம்புவை உருவாக்குவீங்க."

"நீ என்னதான் சொல்ல வர்ற?"

"இதோ பாருடா கரா, என்னதான் நாமளே இரண்டு இரண்டு பேரா இருந்தாலும், நான் சாகரதை நான் ஒத்துக்க மாட்டேன்."

"என்னடா சொல்ற, யாரோ மாதிரி பேசுற? எல்லாமே நம்மளக் காப்பாத்திக்கத்தாண்டா."

"நாம இந்த இயந்திரத்துக்குள்ள இருந்து இதை அழிக்காம, நாமளும் சாகக் கூடாது. இதுக்கு நீதான் ஒரு வழி சொல்லணும்"

"உண்மைதான், எனக்கும் இப்போ லதா மேல இருக்க காதலை விட்டுக் கொடுக்க மனசில்ல. அப்போ இதுக்கு நான் ஒரு வழி சொல்றேன். கேளு"

"நாம இந்த இயந்திரத்தை எடுத்துகிட்டுப் போய் சுயம்பு சொன்ன எல்லாத்தையும் செய்வோம், ஆனா கடைசியா சொன்னது மட்டும் வேண்டாம். அதுக்குப் பதிலா விபத்து நடக்குறதுக்கு சரியா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி திரும்பிப் போய், அந்தப் படகை சிமி கவிழ்க்கும் போது, செல்வினையும், மற்ற இருவரையும் நாம காப்பாத்திட்டு, பாய்மரப் படகுல இருந்து சிமி, நாம மூணு பேரு அங்க இருந்து கிளம்பும்போது இந்த இயந்திரத்தை நாம அழிச்சுடலாம். அப்படின்னா அந்த இயந்திரத்தோட சேர்ந்து அங்க இருக்குற நாம எல்லோரும் காணாம போயிடுவோம். பிறகு அந்தப் பாய்மரப் படகையெடுத்துகிட்டு நாம வந்திடலாம்."

"இது நல்ல யோசனையா இருக்கு. இதையே பண்ணலாம்"

திட்டமிட்ட படி அனைத்தையும் முடித்து விட்டு கால இயந்திரத்தையும் அழித்து விட்டனர். பாய்மரப் படகிலிருந்து ஆறு பேரும் தப்பித்துக் கரைக்குச் சென்றனர். லதா தப்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாய் செல்வின் உறுதியளித்தான்.

சென்னையிலிருந்து வந்திருந்தவர்கள், அந்தப் பிராணியைப் பற்றி தீவிரமாக ஆராயவேண்டுமென்றனர். சற்றே சிநேகாவின் நினைவோடு பாலா மூழ்கலானான். லதா கரனின் தோள்களில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டு இருந்தாள்.

கரன் தனது வயிற்றுப் பகுதியை ஒரு முறை தடவிப் பார்த்தான்! அதில் கால இயந்திரத்தின் சூத்திரம் அடங்கிய ஒரு கண்ணாடி (அந்தக் காலத்தில் dic – data in crystal என்ற முறையில் தகவல் சேமிக்கப் பட்டிருந்தது) இருந்தது. அது 2311 ம் ஆண்டிலிருந்து அவன் எடுத்து வந்திருந்தான்.

- பயணத்தோடு ஒளியவன்

இத்துடன் கதை நிறைவுற்றது.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 15

குறுந்தொடர் - பகுதி 15

கரனுக்கு சுயம்பு மீது மகனென்ற பாசம் ஏனோ வரவில்லை.
“சுயம்பு, அப்படியே நீ எங்களுக்குப் பிறந்திருந்தாலும், அதெப்படி இன்னும் உயிரோடு இருக்க?”

“அப்பா, நீங்க ஒரு மருத்துவருக்கு மிக நெருக்கமான நண்பரா இருந்தீங்க, அப்போ, அவர் ஜீன் தெரபிங்குற மருத்துவ முறையால உங்களை சோதிக்க அனுமதிச்சீங்க. அவர் ஒவ்வொரு மனிதனையும் நீண்ட ஆயுள் வாழ வைக்கக் கூடிய மருந்தைக் கண்டுபிடிச்சார். கருப்பையில் கரு சுமக்காமலேயே குழந்தைகளை உருவாக்கவும், அதையும் ரூபாய் நோட்டு அச்சடிப்பது போல அரசே செய்யவும். மகனோ, அல்லது மகளோ தேவைப் பட்டால் விந்தணுக்களை மட்டும் இருவரும் கொடுத்தால் போதும். இப்படி ஒரு கண்டுபிடிப்பைத்தான் அவர் செய்து கொண்டிருந்தார். அதனோடு சேர்த்து ஜீன் தெரபியும் செய்தார். அம்மாவுக்கு கருப்பை பாதிக்கப் பட்டிருந்ததால குழந்தையை நீங்க அவரிடம் சொல்லி அவருடைய சோதனைக் கூடத்திலேயே உருவாக்கினீங்க. அப்படிப் பிறந்தவந்தான் நான். உங்களுக்கு மாறுபட்ட ஜீன்கள் இருந்ததால என்னோட ஆயுள் ரொம்ப அதிகமாயிடுச்சு. நீங்க உங்க 327 வது வயசுலதான் இந்த இயந்திரத்தைக் கண்டுபிடிச்சீங்க. அதை இயக்குறதுக்கு நீங்க இருந்தாதான் முடியும். திடீருன்னு காணாம போயிட்டீங்க. அந்த இயந்திரமும் அங்க இல்ல.”

“அப்போ இந்த இயந்திரம் எப்படி வந்துச்சு?”

“அவசரப் படாதீங்க, ஒரு நாள் ஒரு இயந்திரத்துல நீங்க வந்தீங்க, வந்து என்னிடம் இதைக் கண்டு பிடிச்சுக் கொடுத்தீங்க. இப்போ இந்த இயந்திரத்தை வச்சுத்தான் நீங்க உங்களைக் காப்பாத்திக்கணும்”

“நான் என்னைக் காப்பாத்திக்கணுமா? என்ன சொல்ற?”

“ஆமாம். நீங்க இந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்கும்போதே இத வச்சு எதிர்காலத்துக்குப் போலாமே தவிர பிற்காலத்துக்குப் போக முடியாதபடிதான் செஞ்சிருந்தீங்க. ஆனால் அதை வச்சு பிற்காலத்துக்கும் போக முடியுங்குறதுதான் உண்மை. ஒரு மனுஷன் பிற்காலத்துக்குப் போறதுனால எதுவேணும்னாலும் மாறலாம், அதனால எதிர்காலத்துக்குப் போறது தப்பே இல்லைன்னு நீங்க அடிக்கடி என்கிட்ட சொல்லுவீங்க.”

“இப்போ நீ பிற்காலத்துக்குத்தானே வந்து என்னை இங்க கூட்டிகிட்டு வந்த? அதெப்படி முடிஞ்சுது?”

“நீங்க கேட்குறது சரிதான். உங்க கூட வேலை பார்த்த ஒருத்தர் உங்களோட கால இயந்திரத்தைத் திருடி எடுத்துகிட்டுப் போயிட்டாரு. அவர் எதிர்காலத்துக்கு எங்க போனாருன்னு தெரியல, ஆனா, உடனே பூமி மேல எதிர்பாராத விதமா சூரியனிலிருந்து பெரிய கதிர்வீச்சும், பாறைகளும் விழுந்துச்சு. அதுல இருந்து தப்பிச்சு வந்தீங்க. பிற்காலத்துக்குப் போகக் கூடிய ஒரு இயந்திரத்தை நீங்க யாருமே கண்டு பிடிக்க முடியாத ஒரு இடத்துக்கு அனுப்பி வச்சிருந்தீங்க, அது வந்து சேர்ந்த இடம் இதுதான். அங்க ஒரு ஆள் மட்டுமே போகக் கூடிய ஒரு சின்ன இயந்திரத்தையும் கண்டு பிடிச்சிருந்தீங்க. அந்த சின்ன இயந்த்துலதான் நீங்க உயிருக்குப் போராடிக்கிட்டு இங்க வந்தீங்க. கால இயந்திரக் கண்டு பிடிப்பாலத்தான் பூமிக்கு பெரிய கதிர்வீச்சும், அதனால சில பாறைகளும் வந்து விழுந்துச்சு. அதனால கடந்த காலத்துக்குப் போய் அந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்குறத தடுக்கணும்னு சொல்லி, கடந்த காலத்துக்குப் போகக் கூடிய இந்த இயந்திரத்தை என்கிட்ட கொடுத்தீங்க. அதற்கப்புறம் இறந்துட்டீங்க.”

“அப்போ, இங்க இருந்த பழைய காலத்துக்குப் போற இயந்திரத்தை வச்சுத்தான் நீ என்னைக் கூட்டிகிட்டு வந்திருக்க. சரி, அப்படியே என்னை எதிர்காலத்துல காப்பாத்தணும்னாலும் அதை நீயே செஞ்சிருக்கலாமே. என்னை கூட்டிகிட்டு வர வேண்டிய அவசியம் என்ன?”

“உங்களால மட்டும்தான் அந்த இயந்திரத்தைக் கண்டு பிடிக்குற இடத்துக்குள்ள போக முடியும். நீங்க அந்தப் பழைய காலத்துக்குப் போய் உங்களோட இயந்திரக் கண்டுபிடிப்பைத் தடுக்கலைன்னா, எதிர்காலத்தின் விளைவு இப்படி ஆயிடும். நீங்க அந்தக் கண்டுபிடிப்பை அழிக்குறதுனால, நீங்க வந்த இந்த இயந்திரத்துக்கு எதுவும் ஆயிடாது.”

கேள்வியின் தொடக்கம் கண்ணில் மின்னியதும் உதடுகள் உதிர்த்தன சொற்களைக் பாலாவிடமிருந்து.
“செல்வினும், இன்னும் இரண்டு பேரும் இறந்துட்டாங்களே அவங்களை எப்படிக் காப்பபத்துறது?”

“நீங்க எல்லோரும் முதல்ல உங்க காலத்துக்குப் போகணும். சரியா விபத்து நடக்குறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி நீங்க போகனும்”

கரன் கேள்வியோடு முந்தினான். “அப்போ நாங்க ரெண்டு ரெண்டா இருப்போமே?!”

“ஆமாம், நீங்க ரெண்டு ரெண்டு பேரா இருப்பீங்க. அப்பந்தான் செல்வினும், மற்ற நபர்களும் உயிரோடு இருப்பாங்க. இப்போ நீங்க அங்க இருந்து 2311 ம் ஆண்டுக்குப் போய் அந்தக் கால இயந்திரத்தை அழிச்சுட்டீங்கன்னா, சிமி நீங்க இருக்க இடத்திலிருந்து மறைஞ்சுடுவான். ஏன்னா, பூமிக்கு ஆபத்து ஏற்பட்ட பிறகு நான் தனியா இருந்தனாலதான் இவனை உருவாக்கினேன். அப்போ உங்க படகை யாரும் கவிழ்க்க மாட்டாங்க. நீங்க எல்லோரும் அங்கே தப்பிச்சுடலாம்”.

“அப்படியே இருந்தாலும் நிகழ்காலத்துலேயும் 2311ம் நாங்க இருப்போமே?”

“ஆமாம், நீங்க இப்போ பயணிக்குற இந்த இயந்திரத்துக்குள்ளே இருந்து இதையும் அழிச்சுட்டீங்கன்னா, நீங்களும், இந்த இயந்திரம் எந்த எந்த காலத்துல இருக்கோ எல்லா இடத்திலும் இந்த இயந்திரம் அழிஞ்சிடும்.” பாலா சலனமாகினான்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 14

குறுந்தொடர் - பகுதி 14

சில வித்தியாசமான சத்தங்கள் எழும்பின, கால இயந்திரம் காலம் கடக்க எத்தனித்தது.

கடலில் வெகு நேரம் தேடியும் இறந்த உடல்களைத் தவிர வேறு யாரையும் கண்டு பிடிக்க முடியாது காப்பாற்ற வந்த படகு திரும்பிப் போய்க் கொண்டிருந்தது. கரை தொடும் தூரம் வரும்போது, திடீரென கடல் நீர் மட்டம் குறைந்து.

படகில் இருந்த காவலர் ஒருவர்
“கடல்த்தண்ணி உள்வாங்குதுப்போய், சுனாமி வரும்னு நினைக்குறேன். எல்லோரும் இறங்கி ஓடிடலாமா?”

அருகிலிருந்த மீனவர் ஒருவர்
“அப்பிடித்தான் நினைக்குறேனுங்க, ஆனால் இந்த இடம் கொஞ்சம் பாறையும் சேறுமா இருக்கும், இறங்கிப் போறது ரொம்ப கஷ்டம், அதுவுமில்லாம இறங்கிப் போகும் போது தண்ணி வந்துட்டாலும் கஷ்டம்”

பேசிக் கொண்டிருக்கும்போதே படகு தரை தட்டியது. திடீரென்று காவலர் கத்தினார்.
“அதோ பாருவே பெரிய அலை வருது, சுனாமின்னுதான் நினைக்கேன்”

“இல்ல எசமான், பயப்படாதீய, ஒண்ணும் ஆகாது”

வந்த அலை அப்படியே படகைத் தூக்கிக் கொண்டு கரையருகே சென்றது. கடலின் சீற்றமும் குறைந்து, கடல் உள்ளுக்கும் வெளியேவுமாக சற்று நேரத்தில் அடங்கிப் போனது. செல்வினின் தாயார் கடற்கரையில் கதறிக் கொண்டிருந்தார்.

மறுபுறம் முழுதும் ஒளியாய் இருந்த இடத்திலிருந்து மெல்லியதாய் ஒளி குறைய ஆரம்பித்தது. சுற்றிலும் முழு இருட்டு. கதவு பொறுமையாகத் திறந்தது. சிமி ஆர்வத்தோடு இறங்கினான்.
“வாங்கஎல்லோரும் வாங்க இதுதான் என் இடம்”

ஒரு கதவைத் திறந்து எல்லோரும் உள்ளே நுழைந்தனர். அறையிலிருந்து வந்த வெளிச்சம் ஜன்னல் வழியே வரும் காலை நேரத்து வெளிச்சமாய் படர்ந்தது கால இயந்திரத்தின் மேல்.

லதாவின் இதயம் அடித்துக் கொள்ளும் சத்தம் வெளியே கேட்டது!
“கரா இது என்ன இடம்?”

“என்னன்னு தெரியல, இது நிச்சயமா 4453ம் ஆண்டுதான்”

அங்குள்ள எந்தப் பொருளுமே பார்த்திராதப் பொருளாய் இருந்தது. அங்கிருந்த ஒரு அறைக்கு சிமி மூவரையும் அழைத்துச் சென்றான். மெல்லிய சத்தத்தோடு கதவு திறந்தது.

“இது என்ன இடம் சிமி? இதுதான் 4453ம் ஆண்டின் மிச்சம்னு எங்கப்பா சொல்லுவாரு”

“இதுதான் என் தந்தையினுடைய அறை, இதோ அவர் வர்றாரே!”

அடர்ந்த தாடியுடன் அதே முகம், இயந்திரத்தில் பார்த்த அதே முகம். கரனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.
“நீங்க ........தான் சுயம்புவா?”

“ஆமாம்ப்பா. நீங்க என்னை வா போன்னே கூப்பிடலாம்னு ஏற்கனவே சொன்னேனே”

“நீங்க என்னை விட வயசானவரா இருக்கீங்க, உங்களையெப்படி வா போன்னு கூப்பிடுறது?”

“எத்தனை வயசானாலும் நான் உங்க பையந்தானே! நீங்க என் அப்பாதான், இவங்க என் அம்மாதான்”

லதாவும், கரனும் திருமப்த் திரும்பப் பார்த்துக் கொண்டனர். “நீங்க என் பையனா?”

“ஆமாம் அப்பா. நீங்க மீண்டும் என்னிடம் வருவேன்னு சொன்னீங்க, அது உங்களுக்கு தெரியாது”

“என்னதான் நடந்துச்சுன்னு கொஞ்சம் விளக்குறீங்களா?“

“நிச்சயமா சொல்றேன். நீங்க இப்போ இருக்குறது 4453ம் ஆண்டில். இது நீங்க கண்டு பிடிச்ச கால இயந்திரம்தான். உங்களுக்கும், அம்மாவிற்கும் திருமணம் ஆனது 2010ல். 2311ல் சூரியனிலிருந்து பெரிய கதிர்வீச்சும், வெடித்துச் சிதறிய பாறைகளும் பூமியில் மோதின. அந்த சிக்கலில் மனிதர்களில் பல பேர் அழிந்தனர். எல்லா நாடுகளும் பொடிப் பொடியாச்சு. தொடர்ந்து இருந்து வந்த கதிவீச்சில் மிஞ்சியிருந்த பெண்களின் கருப்பை வெகுவாக பாதித்தது. தொடர்ந்து பிணங்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்த ஆபத்திலிருந்து தப்பித்ததில் நானும், சிமியும் உண்டு. அந்த சம்பவத்திற்குப் பிறகு அம்மா, பாலா மாமா, சிநேகா அத்தை எல்லோருமே இறந்துட்டீங்க. அப்போ இந்த உலகத்துல மிச்சம் எத்தனை பேர் இருந்தாங்கன்னு தெரியல.”

பாலாவின் கண்களில் கேள்விக் குறிகளும், ஆச்சரியக் குறிகளும் தெரிந்தன.
“நீ எந்த சிநேகாவைச் சொல்ற?”

“உங்களோடு படிக்கும் சிநேகாவைத்தான் சொல்கிறேன். உங்களோட மனைவி”

“இதை நான் பொய்யாக்கிட்டா? இப்போ எனக்கு விசயம் தெரியுமே. நான் இனி அவளைத் திருமணம் செஞ்சுக்கலைன்னா?”

“எது வேண்டுமானாலும் நடக்கலாம்! இப்போ எதிர்காலம் உங்க மூணு பேர் கையில”

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 13

குறுந்தொடர் - பகுதி 13

புத்தகத்தின் இறுதி வரியைப் படித்த கரனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இருந்தாலும் அவனுக்கு இந்த இடத்தை விட்டுச் சீக்கிரம் தப்பிப்பதே நல்லதென பட்டது.

"பாலா இதையெல்லாம் வாசிக்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு பைத்தியமே பிடிட்ச்சுடும் போல இருக்கு. முதல்ல இங்கே இருந்து கிளம்பிடலாம்."

"கரா திரும்பத் திரும்ப தப்பு பன்ற. இங்க இருந்து எப்படித் தப்பிப்ப? உனக்கு நீ மட்டும் தப்பிச்சாப் போதுமா? செல்வின் உயிரெல்லாம் என்ன ஆகுறது? நாம அவனைக் காப்பாற்றியே ஆகணும். இல்லைன்னா நீ தப்பிச்சாலும் லதா கண்டிப்பா அந்தக் கொலைகாரங்ககிட்ட மாட்டித்தான் ஆகணும்"

"இப்ப என்னதான் செய்யச் சொல்ற? நம்ம யாருக்கும் இதைப் பற்றி ஒண்ணுமே தெரியாது. என்ன பண்ண முடியும்னு நினைக்குற?"

"சுயம்புகிட்ட பேசுவோம். எங்களை கொலை நடந்த அன்னைக்குக் காலையில கொண்டு போய் விட்டுடச் சொல்லுவோம். அன்னைக்கு நாம எங்கேயும் போகாம, மூன்று பேரும் வீட்டிலேயே இருந்துப்போம்."

"என்னடா சொல்ற? நாம இப்போ பழைய காலத்துக்குப் போனா, அங்க எல்லோரும் இரண்டு இரண்டு பேராதானே இருப்போம்? அப்போ என்ன பண்ணுவ?"

"நீ சொல்றதும் சரிதான். ஆனா செல்வினும் மத்தவங்களும் இப்போ உயிரோட இல்லை. அவங்களைக் காப்பாற்றி பழைய காலத்துல இருந்து இதுல கூட்டிகிட்டு வந்துட்டா?"

"இல்லை, இது எல்லாம் நம்ம கற்பனைதான், உண்மை என்னன்னு நமக்குத் தெரியாது. இதனால பல பிரச்சினை வரலாம். எல்லோருக்கும் ஒரு நாள் மரணம் நிச்சயம். இறந்தவங்களை உயிரோடக் கொண்டு வருவது எல்லாம் சரிபட்டு வராது."

"அந்த புத்தகத்துல நீ மீண்டும் வருவேன்னு எழுதியிருக்க, அப்படின்னா ..........."

பேசிக் கொண்டிருக்கும்போதே, திடீரென ஒரு ஒலி கேட்டது. இயந்திரம் முழுமையாக இயங்க ஆரம்பித்து விட்டது போலிருந்தது.

சத்தம் கேட்ட்தும் எல்லோரும் சிமி இருக்கும் இடத்திற்கு விரைந்தனர். அங்கே சிமி தன் தந்தை சுயம்புவிடம் பேசிக் கொண்டிருந்தான். சுயம்பு சொல்லச் சொல்ல ஒரு தலைக்கவசம் போன்ற ஒன்றைத் தலையில் மாட்டிக் கொண்டு அவர் சொல்வதைச் செய்து கொண்டிருந்தான்.

"டேய் கரா, என்னடா நடக்குது?"

"இது சுயம்புவோட குரலாத்தான் இருக்கணும், சிமியை சரி பண்ணுறாருன்னு நினைக்குறேன்."

சற்று நேரத்தில் சரியான சிமி, கரனின் அருகே வந்தான்.
"எனக்கு இப்படித்தான் அடிக்கடி நேரும். வாங்க என் தந்தையிடம் பேசுங்க"

ஒளிக்கற்றையாலேயே திரை போல் காட்சியளிக்கும் அந்த இடத்திற்கு சென்றார்கள். கரன் அங்கே வந்த குரலுக்கு சொந்தக் காரனின் முகம் பார்த்தான். தாடிக்குள் மூடி வைக்கப் பட்ட அந்த முகத்தை உற்று நோக்கினான் கரன்.
"நீங்க தான் சுயம்புவா?"

"ஆமாம், நாந்தான் சுயம்பு. நீங்க என்னை வா போ என்றே கூப்பிடலாம்"

"எனக்கு இதைப் பற்றித் தெரிந்துகொள்ள எந்த ஆர்வமும் இல்லை, எங்களை எங்கள் ஊருக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்து விடு"

"நீங்கள் என்னை நேரில் சந்திக்க வேண்டும். அதன் பிறகு உங்களை நானே அனுப்பி வைக்கிறேன்"

"நான் வரமாட்டேன். எனக்கு இங்கே வந்ததிலிருந்தே ஏதோ மாதிரி இருக்கு. உடனடியா எங்களை அனுப்பி வைங்க"

"உங்களை அனுப்பி வைப்பதில் எந்தப் பிரச்சினையும் எனக்கில்லை, ஆனால் எனக்கு தந்த உத்தரவை நான் நிறைவேற்றியே ஆக வேண்டும். அதனால் நீங்கள் மூவரும் என்னுடன் சிறிது நாட்கள் இருந்துவிட்டு பின்னர் போகலாம்"

அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த பாலா குறுக்கிட்டான்.
"இங்கு என்ன நடக்குதுன்னே புரியல. என்னோட நண்பன் செல்வின் உங்களோட சிமியால இறந்துட்டான், கூடவே இங்கு வந்த இருவரும். முதலில் அவர்களைக் காப்பாற்றி விட்டு எங்கு வேண்டுமானாலும் வருகிறோம்"

"எனது சிமியால் ஏற்பட்ட இழப்பிற்கு நான் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும், அவர்களைக் காப்பாற்றுவதில் எனக்கும் உடன்பாடுதான், ஆனால் அது என்னால் இயலாத காரியம். நீங்கள் இங்கே வந்தால் எல்லாம் கை கூடும்"

மழை பெய்து ஓய்ந்த மௌனத்தை ஒத்திருந்த்து அந்த இடம். எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். லதாவிற்கு சொல்ல எதுவுமில்லை. கரன் பாலாவின் கேள்வி நியாமென நினைத்தான், ஆனால் ஏனோ சுயம்பு பேச்சைக் கேட்க அவன் விரும்பவில்லை. பாலாவிற்கோ செல்வினைக் காப்பாற்றுவதும், மேலும் இந்த அதிசயத்தை உணரவேண்டுமென்பதே பெரியதாகப் பட்டது. கரன் பேசலானான்.
"சுயம்பு, எங்களோட உயிருக்கு நீங்க உத்திரவாதம் தருவதா இருந்தா, நாங்க உங்க இடத்துக்கு வர்றோம்."

"மெல்லிய புன்னகை செய்தான் சுயம்பு!"

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 12

குறுந்தொடர் - பகுதி 12

கால இயந்திரத்தில் இருக்கிறோம் என்று தெரிந்த பின்னர் மூவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றியது. இது வரை கால இயந்திரம் சம்பந்தப் பட்டப் படங்கள் மனதுக்குள் எல்லோருக்கும் ஓடியது உண்மை.

லதாவிற்கு எது எப்படியோ ஆனால் இதை விட்டு வெளியேறி விடுவோம் என்றுத் தோன்றியது, கரனுக்கோ இது எப்படி சாத்தியமானது என்று தோன்றியது, பாலாவிற்கோ வேறு எண்ணம்.

“கரா இப்போ என்ன செய்யப் போறோம்?”

“இதை இங்கே இருந்து அதன் வீட்டுக்கே அனுப்பிவிட்டால், நாம் இங்கிருந்து தப்பித்து விடலாம்”

“எப்படிப் போவ? நம்மள தேடி வந்தவங்களும் நாம கிடைக்கலைன்னு திரும்பிப் போயிருப்பாங்க, இதை எப்படி அனுப்பி வைத்து விட்டு இங்கே இருந்து தப்பிப்ப?”

“வேற என்னதான் செய்ய முடியும்?”

“எனக்கொரு யோசனை இருக்கு, சொல்றேன் கேப்பீங்களா?”

எப்பொழுதுமே விளையாட்டுத்தனாமாய் இருக்கும் பாலாவிடம் லதாவிற்கு நம்பிக்கையில்லாமலேயே இருந்தது.
“நாம வீட்டுக்குப் போனால் போதும் பாலா, வேறெதுவும் குழப்பாம இருந்தா அதுவே போதும்”

“பயப்படாத லதா, இந்த இயந்திரத்தை வச்சு நாம நம்ம வாழ்க்கையின் எல்லாப் பிரச்சினையையும் தீர்த்து விட முடியும், நீ அந்தக் கொலையை பார்க்காமல் இருக்க வைக்க முடியும், ஏன் அந்தக் கொலையையே தடுக்க முடியும், செல்வினைக் காப்பாறியிருக்க முடியும், இன்னும் என்ன வேணும்னா. இது நமக்கு கிடைச்ச புதையல். இதை விட்டுக் கொடுக்கக் கூடாது”

இவன் இறுதியில் என்ன சொல்ல வருகிறான் என்பது கரனுக்கு நன்றாகவே புரிந்தது.
“இதோ பார் பாலா, நீ எல்லா விசயத்தைப் போல இதுலையும் விளையாடாத, இதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது, எங்கேயாவது போய் மாட்டிகிட்டா பெரிய பிரச்சினையாயிடும்”

“இந்த விளையாட்டல்லாம் சரி பட்டு வராது பாலா”

“நல்லா சிந்திச்சுப் பாரு. உன்கிட்டப் பேசி இந்த சிமியை அவர் ஊருக்கு அனுப்பி வைக்க சொன்ன சுயம்பு, சிமிகிட்ட பேசி அங்கே வரசொல்லி இருக்கலாமே”

“அதுதான் எனக்கும் புரியல. நான் நினைக்குறேன், சிமியைத் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு இங்கே இணைப்பு துண்டிக்கப் பட்டிருக்கலாம். நாம அதை சரி செய்தா போதும்னு நினைக்குறேன்”

“கரா, நீ இதையும் புரிஞ்சுக்கணும், நமக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது”

“இல்லை இதைப் பற்றியும் சுயம்பு சொன்னாரு, இங்கே இருக்குற ஒரு சிவப்பு பெட்டியில இருக்க ஒரு வித ஸ்விட்ச் C என்ற கணினி மொழியிலதான் எழுதியிருக்காங்க. அதுல என்ன பிரச்சினை இருக்கும்னு அவர் சொன்னாரு, அதை சரி செஞ்சுட்டா போதும்”

“அய்யய்யோ எனக்கு அதெல்லாம் வராது கரா. படிப்புன்னா நீ பாத்துக்கோ, பொண்ணுங்கன்னா நான் பார்த்துக்குறேன்”

“இங்கேயே இருங்க நான் அதைத் தேடுறேன். நீங்களும் தேடுங்க, அது ஒரு சிவப்புப் பெட்டி”

“சரிடா கரா, நானும் லதாவும் இடது பக்கம் தேடுறோம், நீ வலது பக்கம் போ”

“ஏன்? நானும் லதாவும் போகக்கூடாதா?”

“போடா போடா, நீயே எவ்வளவு நேரம்தான் கடலை போடுவ? நானும் கொஞ்ச நேரம் கடலை போடறேனே. இது உன் ஆளுதான், கடிச்சு முழுங்கிட மாட்டேன். போடா போடா வேலையைப் பாரு.”

லதா சிரித்து விட்டாள். கரனும் அதைத் தேடச் சென்று விட்டான். ஒரு வழியாக கீழ் அறையில் இருந்த அந்தப் பெட்டியைக் கண்டு பிடித்துவிட்ட கரன், அதை சரி செய்ய ஆரம்பித்தான். இதையெதையும் கண்டுகொள்ளாமல் சிமி தனக்குத் தெரிந்ததை செய்து கொண்டிருந்தான்.

லதாவும் பாலாவும் தேடிச் சென்ற இடத்தில் ஒரு படத்தில் லதாவும் கரனும் ஒன்றாய்க் கட்டிப் பிடித்து நிற்பது போல இருந்தது. ஆச்சரியம் கண்களைக் கட்டிக் கொள்ள, அருகே கரன் கையெழுத்தில் ஒரு புத்தகமும் இருந்தது. இருவரும் அதை எடுத்துக் கொண்டு கரனைத் தேடிச் சென்றனர்.

“கரா, இங்க பாரு நீங்க இரண்டு பேரும் நிக்குறா மாதிரி ஒரு படம் இருக்கு.”

ஒரு நிமிடம் இரு என்று கூறி விட்டு தனது வேலையை முடித்து விட்டு, இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் இந்த பிரச்சினை சரியாயிடும் என சொல்லிக் கொண்டான்.

புத்தகத்தின் இறுதிப் பக்கத்தைப் புரட்டினால் அதில் ஒன்று எழுதியிருந்தது!

“நான் மீண்டும் வருவேன்!”

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 11

குறுந்தொடர் - பகுதி 11

"நீ யார்? எங்க இருந்து வந்த?"

"நான் ஒரு மனிதன்னு எங்க அப்பா சொல்லுவாரு. நான் ஒரு குழாயில இருந்து பிறந்தவன். ஆனால் எங்க ஊர்ல உங்களை மாதிரி யாருமில்லை, நாங்க மொத்தம் 2 பேருதான் இருக்கோம்"

"உனக்குத் தமிழ் தெரியுதே! எந்த ஊர் உங்க ஊர்?"

"எனக்கு இன்னும் 11 மொழிகள் தெரியும். இந்த இடம்தான் எங்க ஊர். ஒரு இயந்திரத்துல ஏறினேன், ஆனால் திடீருன்னு தண்ணீர் வந்துடுச்சு"

"இது உன் ஊரா? திடீருன்னு தண்ணீர் வந்துடுச்சா? சரி சுயம்பு உனக்கெப்படி தெரியும்?"

"சுயம்புதான் என்னை உருவாக்கினார், அவர்தான் என் அப்பா! நீங்கள்லாம் யாரு? ஏன் இவ்வளவு தண்ணி வந்துச்சு? ஆனால் எனக்கு உங்களைத் தெரியும், உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்"

பாலா குறுக்கிட்டான்.
"சிமி, நீ வந்த இயந்திரம் எங்க இருக்கு? எங்களுக்கு காட்டு"

"இருங்க, இங்கேயே வரும்"
சொல்லி முடித்துவிட்டு கையிலிருந்த ஒரு பொத்தானை அழுத்தினான் சிமி. கடல் கொஞ்சம் கொஞ்சமாக கொப்பளிக்க ஆரம்பித்தது. அந்த அதிர்வில் லதா விழித்துக் கொண்டாள். அலறினாள்...
"கரா, இதுதான், இதுதான் என்னை கொல்லப் பார்த்தது."

"லதா அமைதியா இரு, இது நம்மள கொல்ல வரல. பயப்படாத"

சிமி திடுக்கிட்டான், கொஞ்சம் கோபமாக பார்த்தான். சட்டென முகம் மாறியது
"இவங்க, இவங்களையும் நான் பார்த்திருக்கேன்"

"என்ன சொல்ற சிமி, இவளையும் பார்த்திருக்கியா? எங்க பார்த்த"

அதற்குள் மேலே எழுந்து வந்த ஒரு சாய்வு பட்டு படகு கவிழ்ந்தது. அதில் இருந்த அனைவரையும் சிமி, கடலிலிருந்து வெளியே வந்த அந்த இயந்திரத்திற்கு கூட்டிச் சென்றது.

உள்ளே எங்கெங்கும் வெள்ளை ஒளியால் நிரப்பப் பட்டிருந்தது. அது சட்டென தனது கதவுளைப் பூட்டிக் கொண்டு ஆழத்திற்கு விரைந்து சென்றது.

பாலா ஒருவித படபடப்புடன் சிமியிடம் பேசினான்.
"நாங்க வந்த படகை இடித்தது நீதானா? உன்னால எத்தனை பேரு செத்தாங்கன்னு உனக்குத் தெரியுமா?"

சற்றே கோபமடைந்தான் சிமி.
"என்னிடத்தில் நீங்க என்ன பன்றீங்க, என்னைக் கொல்லதானே வந்தீங்க? அதனாலதான் நானே முந்திகிட்டேன்."

பாலாவைக் கண்ணைக் காட்டி சமாதானப் படுத்தினான் கரன்.
"சிமி, எங்களையேன் கொல்லவில்லை?"

"அதான் சொன்னே உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு!"

"உன்னை இங்கேயிருந்து உன் ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்"

"இதுதானே என் ஊர், நான் அப்பாவைத்தான் தேடிட்டு இருக்கேன்"

"இது இல்லை உன் ஊர், நீ வேறு இடத்திலிருந்து இங்கே வந்துட்ட"

"இல்லை, நான் இதுக்குள்ள ஏறி உட்கார்ந்து தூங்கிட்டேன். முழிச்சுப் பார்த்தால் இங்கே நிறைய தண்ணீர்"

சிமியுடன் பேசிக் கொண்டிருந்த கரனைத் தடுத்தான் பாலா.
"என்ன சொல்ற? இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும் கரா?"

"அன்னைக்கு நீ தூங்கிட்டதுக்கு அப்புறம் சுயம்பு என்னிடம் பேசினார். அவர் சொன்னது இதுதான். கடலில் கண்ட உயிரனத்தைத் திருப்பி அனுப்ப வேண்டுமாம்"

பாலா எப்பொழுதுமே கரன் பேச நினைப்பதை அவன் கண்கள் வழியாகவே வாசித்துவிடுவான். அவன் சொன்னதில் உண்மையில்லை என்பதை அறிந்த பாலா, கரனைத் தனியாக கூப்பிட்டுப் பேசினான்.

"டேய், உண்மைய சொல்லு, அவரு என்ன சொன்னாரு?"

"பாலா, நாம இங்க இருந்து சீக்கிரமா போகணும்னா, நான் சொல்றதைக் கேளு. சிமியை இங்க இருந்து அனுப்பி வச்சிடலாம். சிமிக்கு தற்காலிகமா கொஞ்ச நினைவுகள் அழிஞ்சு போச்சாம். உண்மைய சொன்னா சிமியை சுயம்பு அனுப்பினதே என்னையும், உன்னையும், லதாவையும் அங்கே கூட்டிகிட்டுப் போகத்தான்"

"என்னடா சொல்ற? எங்க கூட்டிகிட்டுப் போகணும்?"

"டேய், பாலா. நான் சுயம்பு சொல்லும்போதெல்லாம் நம்பலை. ஆனா இங்க வந்த உடந்தான் தெரியுது, அவர் சொன்னது உண்மைன்னு. நாம இப்போ நிக்குறது ஒரு கால இயந்திரத்துல! இந்த இயந்திரம் 4453 ம் ஆண்டில் இருந்து வந்திருக்கிறது!"

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 10

குறுந்தொடர் - பகுதி 10

கரன் வேகமாகத் உள்ளே இறங்கினான், பாலாவும் கரனும் அந்தப் பாய்மரப் படகை விடுவித்தனர்.

"கரா லதா எங்கே?"

"பாலா, அங்கே தெரியுது அந்தத் தக்கை!"
சற்று தூரத்தில் அந்தத் தக்கை மிதப்பது தெரிந்தது.

வெகு வேகமாக அந்த இடத்தை அடைந்தான் கரன், பாலாவும் அந்த இடத்திற்குச் சென்றான். ஆனால் அங்கே லதா இல்லை, வெறும் தக்கை மட்டுமே மிதந்து கொண்டிருந்தது.

கரனும், பாலாவும் உள்ளே மூழ்கித் தேடினர், லதாவைக் காணவில்லை.

"கரா, அங்கே தெரியுறது லதாதான்னு நினைக்கிறேன், வாடா"
பாலாவும் கரனும் விரைந்தனர்.

"லதா, லதா என்னைப் பாரு, என்னைப் பாரு" கரன் கதறிக் கொண்டிருந்தான்.

பாய்மரப் படகில் ஏற்றிவைத்தான் பாலா. அசைவின்றிக் கிடந்தாள் லதா.

"கரா, அவ தண்ணியக் குடிச்சுட்டான்னு நினைக்குறேன், அவ வயித்த அழுத்து"

கரன் அவள் வயிற்றை அழுத்தினான், சிறிது சிறிதாக அவள் தண்ணீரைத் துப்பினாள். உள்ளங்கையை சூடுபறக்கத் தடவினான்.
"லதா, லதா என்னைப் பாரு, லதா, லதா"

மெல்ல மெல்ல கண்விழித்தாள் லதா, சுற்றி என்ன நடக்கிறதென்பதே புரியாதவளாய் திகைத்தாள். அவளுக்குத் தெரிவது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். கரன் தாரை தாரையாய் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். காலை யாரோ தேய்த்து விடுவது போலிருந்தது. அது பாலாதான் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

"லதா உனக்கெதுவும் ஆகல, என்னைப் பாரு, என்னைப் பாரு"

முழுதாய் கண் திறந்தவள், கரனை கட்டிப் பிடித்து அழுதாள்.
"அ........து அ........து, எனக்குப் பயமா இருக்குக் கரா, எனக்கு பயமா இருக்கு"

"லதா என்னைப் பாரு, என்னது அது? எதுக்கு கீழ விழுந்த? என்ன ஆச்சு?"

"அது, அது வந்து, அது என்னதுன்னு தெரியலை, என்னை கீழே தள்ளிவிட்டுடுச்சு. அது வந்துடும்னு நினைக்குறேன், எனக்குப் பயமா இருக்கு"

"எதுவும் ஆகாது, தைரியமா இரு லதா, நானும் கரனும் இருக்கோம்ல, உனக்கெதுவும் ஆகாது"

படகிருந்த தடமென்று எதுவுமே இன்றி வெகு அமைதியாக இருந்தது கடல். இருட்டி விட இன்னும் கொஞ்ச நேரமே பாக்கி இருந்தது.
"கரையிலிருந்து காப்பாற்ற ஆட்கள் வந்தாலும் எப்படியும் 2 மணி நேரம் ஆகும், அதுவரைக்கும் பொறுத்திரு லதா" பாலா.

"எனக்கென்னமோ, படகை ஓட்டைப் போட்டதே அதுதான்னு தோணுது, இல்லைன்னா இந்தக் கடல்ல படகு ஏன் கவிழணும்? அது திரும்பவும் எப்போ வேணும்னாலும் வரும் பாலா"

"அதெல்லாம் வராது பயப்படாத லதா"

"பாலா, பாலா பின்னாடி..."
வேகமாக தண்ணீரைக் கீறியபடி வந்தது ஏதோ ஒன்று, பாயமரப் படகை வேகமாக தள்ளிய படி, நீண்ட தூரத்திற்குப் போனது.

"கரா தண்ணியில குதிச்சுடாத, தைரியமா இரு"

"பாலா நீ விழுந்துடாத கெட்டியமா புடிச்சுக்கோ"

லதா மயங்கி விழுந்தாள். கரன் அவளைப் பிடித்துக் கொண்டான்.

சட்டென அந்த உருவம் தள்ளுவதை நிறுத்தி விட்டு, படகு மேலே தவ்வியது! அது மனிதன்தான், கொஞ்சம் பெரிய உருவம்.

"பாலா அசையாமல் இரு, அப்படியே இரு"

கரன் இப்படிச் சொன்னதும் அந்த உருவம் கரனை நோக்கித் திரும்பியது. கரனை உற்றுப் பார்த்தது.

"உனக்கு என்ன வேண்டும்? எங்களை எதுவும் பன்னிடாத, சுயம்பு உன்னைப் பற்றிச் சொல்லி இருக்காரு. உனக்கு என்ன வேண்டும்?"

கரனை இன்னும் அருகே வந்து உற்றுப் பார்த்தது. பாலா அதை அடிப்பதற்கு வேகமாக எழுந்தான்.

"பாலா வேண்டாம், இரு இரு, நான் பேசுறேன்"
சட்டென திரும்பிய உருவத்தை திசை திருப்பினான் கரன்.
"உன்னை உங்க ஊருக்கு நான் திருப்பி அனுப்புறேன், சொல்லு எங்க வச்சிருக்க? என்னை அங்க கூட்டிகிட்டுப் போ!"

"என் பெயர் சிமி" என்றது அந்த உருவம்!

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 9

குறுந்தொடர் - பகுதி 9

லதாவும் கரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவள் கண்கள் கரனின் கண்களை விட்டு அகலாமல் நிலை குத்தி நின்றது. கரன் மெல்ல புன்னகை உதிர்த்தான்.

“கரா என்னோட மிச்ச வாழ்க்கை இனி உன்னோடுதான்”

கரனின் மனதில் கோடிப் பூக்கள் பூத்துக் குலுங்கியது.

படகும் சற்றே பெரிய அலையில் சிக்கியது போல குலுங்கியது. படகை ஏதோ வெகு வேகமாகத் தாக்கிவிட்டு மறைந்தது. அது அந்த கடலில் பார்த்த மனிதன் போன்ற உருவம்தான். கரனும், லதாவும் கீழே விழுந்தனர்.

படகு ஓரத்தில் நின்று கொண்டிருந்த செல்வினும், சென்னையிலிருந்து வந்த இருவரும் கடலில் விழுந்தனர். செல்வின் தலையில் அடிபட்டு குருதி வழிந்தோடியது. பாலா சட்டென கடலில் பாய்ந்தான்.

படகின் கீழே தண்ணீர் நிறைய ஆரம்பித்தது!

“லதா இங்கேயே இரு, கெட்டியாப் பிடிச்சுக்கோ, திரும்பி வந்துடுவேன்”

“கரா எனக்குப் பயமா இருக்குடா”

கரனும் கடலில் பாய்ந்தான். பாலா செல்வினை பின்னால் தொங்கிக் கொண்டிருந்த பாய்மரப் படகில் ஏற்றினான்.

கரன் எவ்வளவு தேடியும் மற்ற இருவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

“செல்வின், செல்வின். என்னைப் பாருடா. உனக்கு ஒண்ணுமில்லை, என்னைப் பாருடா” பாலா.
செல்வின் தலையில் படகின் கீழ்புறத்தில் சற்றே நீட்டிக் கொண்டிருந்த இரும்புத் துண்டு பலமாக அடித்ததில் இறந்திருந்தான்.

கரன் பின்புறம் போய் செல்வினின் நாடியைப் பார்த்தான். உயிரில்லை என்பதைத் தெரிந்து கொண்டான். பாலாவை அதிர்ச்சியோடு பார்த்தான்.

“செல்வின் செத்துட்டான்டா, மிச்ச இரண்டு பேரையும் தேடிட்டேன், கிடைக்கலை. நான் எதற்கும் இன்னொரு தடவை பார்த்துட்டு வர்றேன்”

பாலா நடப்பது எதுவும் புரியாதவனாய் துளிக் கண்ணீரோடு திகைத்துப் போய் பாய்மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான். மீண்டும் கடலில் மற்ற இருவரையும் தேட ஆரம்பித்தான். யாரையும் கண்டு பிடிக்க முடியாமல் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“கரா, இங்க படகுல ரொம்ப வேகமா தண்ணீர் வருது. எனக்குப் பயமா இருக்குடா” பதறினாள் லதா.
இருவரும் மேலே ஏறினார்கள். படகில் மூவரைத் தவிற வேறு யாருமில்லை. எப்பொழுதுமே படகு ஓட்டத் தெரிந்தவர்கள் இரண்டு பேரோடவாவதுதான் படகை எடுக்க வேண்டும் என்று செல்வினின் தந்தை சொல்லுவார். ஆனால் செல்வின் எப்பொழுதுமே அவன் தந்தைப் பேச்சைக் கேட்பதில்லை.

“பாலா இப்போ என்ன பன்றதுடா? கரையிலிருந்து ரொம்ப தூரம் வந்துட்டோம். என்ன பன்றதுடா”

“கரா அவசரப் படாதே, நிச்சயம் தப்பிச்சுடலாம். படகு மூழ்குறதுக்குள்ள இங்கே இருந்து கரையில இருக்க யார்கிட்டையாவது பேசிட்டா போதும். பின்னாடி பாய்மரப் படகு இருக்கு. கவலைப் படாத தப்பிச்சுடலாம்.”

கரனும் லதாவும் ஒருவரை பார்த்துக் கொண்டனர்.
“லதா பயப்படாத, எப்படியும் தப்பிச்சுடலாம்”

பாலா அடிக்கடி செல்வினுடன் கடலுக்கு வந்திருப்பதால், அவனுக்கு படகிலிருந்து எப்படி கரைக்கு சமிக்ஞை அனுப்புவதென்பது தெரியும். அவசர அவசரமாக தாங்கள் இருக்கும் திசையையும், கிளம்பிய இடத்தையும் சொன்னான்.

படகு சுக்கான் அறை வரை தண்ணீர் வரத் தொடங்கியது. லதாவிற்கு நீச்சல் தெரியாது. இருந்த ஒரு மிதக்கும் தக்கையை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு தண்ணீருக்குள் குதிக்கச் செய்தார்கள்.

கரன் லதாவை இழுத்துக் கொண்டு பின்னால் இருந்த பாய்மரப் படகுக்குப் போனான். பாலா சுக்கான் அறையை விட்டு வெளியே வந்து பாய்மரப் படகு நோக்கி குதித்தான்.

“பாலா அந்த முடிச்சைக் கழட்டுடா. இல்லைனா இதையும் உள்ளே இழுத்திடும்”

“நீ அங்கேயே இரு, நான் கழட்டிடுறேன்.”
பாலாவின் கைகள் நடுக்கத்துடன் கயிறை கோர்த்து வைத்திருந்த அந்த இரும்பு வளையத்திலிருந்து வெளியேற்றப் பார்த்தான். அது கழற்ற வரவில்லை. சிக்கிக் கொண்டது போலிருந்தது.

படகு மேல் முனை வரை முழுக ஆரம்பித்த்து.
“கரா இங்க வாடா இதை இழுத்துப் பிடி”

“இதோ வந்துட்டேன்டா, லதா எதுவா இருந்தாலும் இந்த தக்கையை விட்டுடாத, கெட்டியா பிடிட்ச்சுகோ.”
கரன் தண்ணீருக்குள் தாவினான். படகு மெல்ல மெல்ல இழுத்துக் கொண்டே போனது. கயிறை அதிலிருந்து எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் பாலா. கரன் அங்கே போய் அதை விடுவிப்பதற்குள், படகு வேகமாக அமிழ்ந்தது.
லதா பாய்மரப் படகிலிருந்து கவிழ்ந்தாள்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 8

குறுந்தொடர் - பகுதி 8

பெற்றோர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் லதாவை நல்ல படியாகவே பாட்டி வீட்டில் விட்டு வளர்த்தார்கள். கல்லூரிப் படிப்பிற்காகத்தான் முதல் முறை பாட்டி வீட்டிலிருந்து வெளியூருக்குக் கிளம்பினாள் லதா. படகும், அங்கே வீசும் மீன் வாடையும் அவளுக்கு ஒத்து வராததாகவே இருந்தது. எப்படி ஒரு நாள் தங்கப் போகிறேன் என்ற கேள்வி அவளைக் குடைந்தெடுத்தது. இத்தனை ஆண்களுக்கு மத்தியில் ஒற்றைப் பெண்ணாய் இருப்பது மேலும் அவளுக்கு ஒரு தவிப்பை ஏற்படுத்தியது. யாரிடமும் மனம் விட்டுப் பேச முடியாத சூழ்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக குமுறிக் கொண்டிருந்தாள்.

"கரா, நாம எப்போ திரும்பிப் போவோம்"

"தெரியலையே. டேய் பாலா எப்போடா கரைக்குப் போவோம்?"

"நாளைக்கு அதிகாலை 4 மணிக்கு செல்வின் வீட்டுக்குப் போயிடலாம். அவங்க அப்பாவைக் கூட்டிகிட்டு எம்.எல்.ஏ வீட்டுக்குப் போயிட்டு, இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிட்டு வந்துடலாம். இங்க படகுலையே எல்லா வசதியும் இருக்கு. கீழ போனா குளிக்குறதுக்கே வசதி இருக்கு"

லதாவிற்கு சற்றே நிம்மதி பிறந்தது. இருந்தாலும் ஒரு பாதுகாப்பில்லாத உணர்வும், கரனைத் தவிர வேறு யாருடனும் எதையும் பேச முடியாத சூழலும் அவளை ஏதோ செய்தது.

கரனுக்கு அவளது சூழலை உணர முடிந்தது. அவளைக் காதலிக்கப் போவதில்லை என்று அவளிடம் சொல்ல வேண்டுமென்றுதான் காலையில் புறப்பட்டான், ஆனால் இப்பொழுது அவனுள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக அலையோடு அலையாக அலை பாய்ந்திருந்தது.

கொஞ்ச நேரம் உலவிய மௌனத்தை உடைத்தான் பாலா.
"ஆமாம், சிநேகா எப்படி இருக்கா?"

பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இப்பொழுது லதா. இருந்தாலும் இந்தச் சூழலில் இப்படி அநாவசியமாக பேசுவது அவளுக்கு பொறுமையிழக்கச் செய்தது. பாலாவை ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு
"இருக்கா, நல்ல வேளை அவளை யாரும் சரியாப் பார்க்கலைன்னு நினைக்குறேன், என்னை மட்டும்தான் துரத்தினாங்க"

"நல்ல பொண்ணுங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது"

"டேய், பாலா சும்மா இருடா, விளையாடுறதுக்கு இதுவா நேரம்? அவளே நொந்து போய் இருக்கா, அவகிட்ட போயி கிண்டல் பன்னுற"

"என்னடா, அவகிட்ட பேசினா இங்க இருந்து பதில் வருது? ம்......ம்....... நடக்கட்டும். சரி லதா, அப்படியே நானும் சிநேகாவும் பேசுறதுக்கு ஏற்பாடு செஞ்சுக் கொடு, சும்மா கடலை போடத்தான்"

"உனக்கு எப்பவுமே விளையாட்டுதானா பாலா? நேத்து என்னடான்னா அப்படி செஞ்சுட்ட"

"என்ன செஞ்சுட்டேன் லதா? சிநேகா எதாவது சொன்னாளா?"

"ம்........... அவ ஒன்னும் சொல்லல, ஆனா உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும்"

"இது என்ன புதுசா இருக்கு, என்ன விசயம்? அதுக்கு முன்னாடி சிநேகா எதைத் தெரிஞ்சுக்குறதுக்கு கரன்கிட்ட பேசினா?"

"அது... அது..... வந்து......" லேசா வெட்கப் படத் துவங்கிய இதழில் பேச்சே வரவில்லை.

எந்த ஆணுக்கும் தன்னை ஒரு பெண் அவளாகவே காதலிக்கத் துவங்குவது வித்தியாசமான அனுபவம்தானே. கரனுக்குள்ளே ஏதோ செய்தது. வெளியே அவன் அவளைக் காதலிக்க மாட்டேனென்று சொல்லி வந்தாலும், உள்ளூற இப்பொழுது அவள் சொல்லப் போகும் பதிலை ஆவலோடு எதிர்பார்த்திருந்தான்.

"சும்மாதான் பேசினா...... வேற ஒன்னுமில்லை. தேவைன்னா அவகிட்ட கேட்டுக்கோ"
சொல்லி விட்டு குணிந்து கொண்டாள்.

"இதெல்லாம் சரியா வரலியே, என்னைப் பற்றி உனக்குத் தெரியும்னு நினைக்குறேன். என்கிட்ட பொய் சொல்ல நினைச்சா, நான் கண்டு புடிச்சுடுவேன்"

"டேய்! விடுடா, வா நாம அந்தப் பக்கம் போகலாம், அவ கொஞ்ச நேரம் தனியா இருக்கட்டும்"
இந்தச் சூழ்நிலையில் பாலாவை அங்கேயிருந்து நகர்த்திக் கொண்டு செல்வதில்தான் கரன் ஆர்வமானான்.

கொஞ்ச நேரம் அந்த இடத்திலிருந்து சற்று தள்ளியிருந்தார்கள் பாலாவும் கரனும். மீண்டும் லதா இருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கே லதா இல்லை. படகில் வலைகள் குமிக்கப்பட்டிருக்கும் இடத்தில் நின்று கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அமர்ந்திருந்த இடத்தில் கரியால் ஏதோ கிறுக்கப்பட்டிருந்தது. அதை குணிந்து வாசித்தான் பாலா.
"கரன், நான் உன்னை ஒன்றரை வருசமா காதலிக்குறேன். இதுதான் உண்மை. ஆனால் எனக்கு எப்படிச் சொல்லன்னு தெரியலை"

கரனும், பாலாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பாலா சம்மதச் சமிக்ஞையோடு சிரித்தான். கரன் முகம் ஒளியானது!

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 7

குறுந்தொடர் - பகுதி 7

அலையின் போக்குக்கெல்லாம் ஆடியபடியே நகர்ந்து சென்றது படகு. படகில் செல்வினுடன் சேர்த்து ஐவர் இருந்தனர்.

செல்வின் பாலா அருகில் வந்தான்.
"வாடா பாலா, எப்படி இருக்க?"

திடீரென்று மூவரை ஓரிரவு படகில் தங்க அழைத்தது அவனுக்குப் பெரிதாகப் படவில்லை. வழக்கமாக அவன் அப்பாவுடன் செல்லும் போது கண்ணில் படும் நண்பனையும் சேர்த்து அழைத்துச் செல்வதே அவனுக்கு வழக்கம்.

செல்வினின் கேள்விக்கு விடை சொல்லாமல் மௌனமாய் இருந்தான் பாலா. சற்றுத் திரும்பி கரனைப் பார்த்தான். கரன் இன்னும் லதாவின் அருகிலேயே மிக நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தான். பாலா சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு, செல்வினைக் கூப்பிட்டுக் கொண்டு படகின் அடுத்த புறம் சென்றான்.

பாலா நடந்ததையெல்லாம் செல்வினிடம் சொன்னான்.
"என்ன செய்யனு தெரியல, இவளை வேற இங்கே கூட்டிகிட்டு வந்தாச்சு, இனி என்ன ஆகும்னு தெரியலை".

பெரிய ஆச்சரியத்தோடோ அல்லது அதிர்ச்சியோடோ இதைக் கேட்கவில்லை செல்வின்.
"விடுடா இதெல்லாம் பெரிய விசயமா, எம்.எல்.ஏ எங்கப்பாவுக்குத் தெரிஞ்சவர்தான், அவர் பையன் எனக்குத் தெரிஞ்சவன்தான், கவலையை விடு. அந்தப் பொண்ணை சமாதானப் படுத்தி இதைப் பத்தி யாருகிட்டையும் வாயைத் திறக்க மாட்டேன்னு சொல்லச் சொல்லு".

பாலாவிற்கு வயிற்றில் பால்வார்த்தது போலிருந்தது.
"அவளை எப்படியாவது பேசி சமாளிச்சுட்றேன்டா, நீ இப்படி சொன்னதே போதும். நாளைக்கு நீயும் உங்கப்பாவும் அவ பிரச்சினைக்கு ஒரு முற்றுப் புள்ளி வச்சிடுங்கடா"

"சரிடா, நான் பாத்துக்குறேன். நீ கவலை படாதே. ஆமாம், அந்தப் பொண்ணு கரனோட ஆளா? கரன் கலக்குறானே!"

"இல்லடா, அவன் என் நண்பன். நீ நினைக்குறா மாதிரியெல்லாம் ஒன்னுமில்லை"

"அப்படின்னா சரி. அப்புறம் என் படகை அசிங்கப் படுத்திடப் போறாங்கன்னுதான் பயந்தேன்"

"அடிங்கு உன்னை. இல்லைன்னாலும் இவரு ஒன்னுமே பன்னதில்லை. டேய், என்கிட்டேவா நீ பொய் சொல்லுற?!"

"விடுடா, விடுடா. ஒரு பேச்சுக்குத்தான் சொன்னேன்"

"சரி யாருடா மத்தவங்கல்லாம்? ங்கே னு இருக்கானுக"

"அவனுக சென்னையிலிருந்து வந்துருக்கானுக, ஏதோ கடல்ல ஆராய்ச்சி செய்யணுமாம். அதுவும் ராத்திரியில தான் செய்யணுமாம். வெளக்கெண்ணெய்க இதுக்கே நான் இரண்டு மடங்கு சொன்ன விலைக்கு ஒத்துக்கிட்டானுக, படிச்சவங்கன்னாலே புத்தி இருக்காது போலடா"

"டேய் எல்லாரையும் ஒரே மாதிரி நினைக்காதடா. சரி இங்கேயே இரு கரன் என்ன பன்றான்னு பார்த்துட்டு வர்றேன்"

பாலா அங்கே போகவும் லதா பேச்சை நிப்பாட்டினாள்.

"என்னடா கரா, பேசி முடிச்சாச்சா? சரி நீ ஓரம்போ நான் கொஞ்ச நேரம் பேசிக்குறேன்"

கரனுக்கு பாலா இப்படி பேசுவது புதிதாக தெரியவில்லையெனினும் இந்த சமயத்தில் கொஞ்சம் சங்கடமாக இருந்த்து அவனுக்கு.
"ஏன், நானிருக்கும்போது பேச மாட்டியா"

"எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் கரா, நீ போயி செல்வின் கிட்ட பேசிகிட்டு இருடா"
"என்னடா லந்தா, நானிங்கதான் இருப்பேன். சொல்லு. அப்படி எனக்குத் தெரியாம என்னத்தைக் கேட்கப் போற?"

"சரி விடு. எனக்கு எல்லாம் புரியுது"
அப்படியே அங்கு செல்வின் சொன்னதை லதாவிடம் சொன்னான்.

தப்பித்தால் போதுமென்ற பயத்தில் உண்மையை காவல் துறையிடம் சொல்ல அவளுக்கு தோன்றவில்லை. மேலும் இங்குள்ள காவல்துறை அதிகாரிகளால் இவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்பதும் ஊரறிந்த விசயம்.

"அவங்க சொல்றா மாதிரி கேட்டுக்குறேன். யாருகிட்டையும் எதுவும் சொல்ல மாட்டேன். எந்தப் பிரச்சினையும் வராதுல்ல பாலா"

"இது எல்லாத்தையும் நாந்தான் ஏற்பாடு செய்யுறேன். என்னை அப்போ அப்போ கவனிச்சுகிட்டு, நான் கேட்குறத வாங்கிக் கொடுத்தன்னா எந்தப் பிரச்சினையும் இல்ல. இனி எல்லாம் உன் கையிலதான் இருக்கு"

"ரொம்ப ஓவர்டா இதெல்லாம். எதுவா இருந்தாலும் செல்வினுக்கு நன்றி சொல்லணும்"
படகில் உடன் வந்த சென்னைக் காரர்கள் கடலில் வந்துபோன அந்த வித்தியாசமான உயிரைப் பற்றிப் பேசிக் கொண்டனர்.


முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 6

குறுந்தொடர் - பகுதி 6

கார்மேகம் வழிந்தோடிய பின் வெறிசோடிக் கிடக்கும் வானம் போல், கண்ணீரால் கவலை கழுவி முடித்தாள், வார்த்தை கோர்த்து எடுத்தாள்.

“லதா, விட்டா இதான் சாக்குன்னு அவன் மேலையே சாஞ்சுகிட்டு இருக்க” என்று கிண்டல் செய்தான் பாலா, உண்மையில் அவளைத் தேற்றுவதற்குத்தான் சீண்டினான்.

குளியலறையை யாரோ எட்டிப் பார்ப்பது போல தாவினாள். இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தாள். சொற்களை சொற்றொடர்களாக்கினாள்.

“நம்ம கல்லூரியில திடீருன்னு ஸ்ட்ரைக் செஞ்சாங்க நம்ம சீனியர்ஸ், காலையில 8 மணிக்கே வந்து சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க. மூன்றாவது வருசம் படிக்குற பசங்கள்ல இரண்டு கோஷ்டிக்கும் இடையில மோதல். நான் விடுதியில இருந்து வந்துகிட்டு இருந்தேன் அப்போ இரண்டு பசங்க எதிர்க்க வந்த மூன்று வண்டியையும் கவிழ்க்கனும்னு பேசிகிட்டாங்க. அதே மாதிரி அதை கவிழ்த்துட்டாங்க. எனக்கும் சிநேகாவுக்கும் கையும் ஓடல காலும் ஓடல”

எழுந்த சூரியனை மீண்டும் கடலே விழுங்குவது போல மீண்டும் கண்கள் கண்ணீரில் மூழ்கின.

“அழாம சொல்லு, கவிழ்த்தவங்க யாரு? செத்தவங்க யாரு? உன்னை எதுக்கு துரத்துறாங்க?” கரன்

“கவிழ்த்தவங்க நம்ம கல்லூரிப் பசங்க, ஆனால் செத்தது யாருன்னு எனக்குத் தெரியாது. அதை நான் பார்த்துட்டேன்னு என்னைத் துரத்துறாங்க. நானும் சிநேகாவும் கல்லூரிக்குத்தான் ஓடினோம். திரும்ப அங்கேயும் இவங்க வந்து துரத்த ஆரம்பிச்சுட்டாங்க, அதனால் இந்தப் பக்கம் ஓடினேன், சிநேகா என்ன ஆனான்னு தெரியலை” சொல்லி முடிக்கும் முன் சில தடவை எச்சில் முழுங்கி பல தடவை எழுத்துக்களை முழுங்கினாள் லதா.

“யாரு உன்னைத் துரத்துறாங்க? எந்தப் பசங்க” பாலா.

“துரத்துறப் பசங்கள்ல ஒருத்தன் நம்ம கல்லூரி முதல்வரோட பையன், இன்னொருத்தன் இந்த ஊரு எம்.எல்.ஏ பையன்” சொல்லும்பொழுதே நடுங்கிற்று அவள் சொற்களும் ஈரக்குலையும்.

பாலாவிற்கு உடனடியாக தோன்றிய எண்ணம் ‘வசமா சிக்கிட்டோம்’, இனி எப்படி இவளிடமிருந்து தன்னையும் கரனையும் காப்பாற்றிக் கொள்வதென்று. உண்மையில் யாரும் சினிமாக் கதாநாயகர்கள் இல்லைதான்!

கரன் அதிர்ந்துதான் போனான், அவனுக்கு எதுவும் புரியவில்லை

மழை மேகம் சூழும் தருணம் ஏற்படும் அமைதியை சடாறென்று இடி உடைப்பது போல் சிறிது நேரம் நிலவிய மௌனத்தை லதா உடைத்தாள்.

“என்னால நீங்க இரண்டு பேரும் சிரமப் பட வேண்டாம், நான் எப்படியாவது தப்பிச்சுப் போயிடுறேன்” லதா.

உள்ளூர ஏதோ இருண்ட குகையில் திக்கு தெரியாமல் அலையும் தருணம் ஒரு வெளிச்சம் வரும் பாதை தெரிவது போல தோன்றினாலும், அவனுடைய தன்மானமும், இத்தனை நேரம் அவள் அவனை மீது சாய்ந்திருந்த போது தனது மார்பில் பதிந்த சூடும், அவனை இப்படிக் கூறச்செய்த்து.

“அப்படி இல்ல, நீ தப்பிக்குறதுக்கு ஏதாவது வழி இருக்கான்னு பார்ப்போம்” என்றான் கரன்.

பாலாவும் கரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏன் இவன் வீணா அவகிட்ட இப்படி சொல்லணும் என்ற எண்ணம் பாலாவை சூழ்ந்து நின்றது. மறுபுறம் கரனை விட்டுவிட்டு தன்னால் செல்லமுடியாது என்றும் தோன்றியது.

தூரத்திலிருந்து ஒருவர் கையசைப்பதைப் போன்று பாலாவிற்குத் தோன்றியது. அது அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒருவர்தான் என்று அவனுக்குப் புரிந்தது. அது வேறு யாருமில்லை, அவன் தந்தையின் நெருங்கிய நண்பரின் மகன்தான். கடலுக்குள் செல்ல முற்பட்ட அந்தப் படகில் இருப்பவன் பாலாவிற்கும் பழக்கமான செல்வின்தான்.

“நாங்களும் வரமுடியுமா” என்றான் பாலா

இப்பொழுது அந்த படகு இவர்கள் நிற்கும் கரைக்கு கொஞ்ச தூரத்தில் நின்றது. செல்வின் படகின் முன்முனைக்கு வந்தான்.

“நாங்க திரும்பி வர்றதுக்கு ஒரு நாள் ஆயிடும், அதுவரைக்கும் எங்க கூட இருப்பீங்களா” என்றான்.

லதாவிற்கு அது சரியெனப் படவில்லை. அவளுக்கு கடலென்றால் கொஞ்சம் பயமுண்டு.

“கரா, வேண்டாம் கடலுக்குப் போக வேண்டாம், எனக்குப் பயமா இருக்கு” என்றாள்.

லதாவை சமாதனப் படுத்தினான் கரன். “ஒரே நாள்தான், நானும் பாலாவும் நிறைய தடவை இந்த மாதிரி போயிருக்கோம். எந்தப் பிரச்சினையும் இல்ல. மற்றதெல்லாம் நாம அங்க போய் யோசிக்கலாம்” என்றான் கரன்.

அப்பொழுது உள்ளே செல்ல எத்தனித்தது ஒரு பாய்மரப் படகு. அதில் மூவரும் ஏறிக்கொண்டு ஓங்கியடித்த அலைகளில் மேலெழும்பி கீழிறங்கியென ஒருவழியாக படகைச் சென்று அடைந்தவுடன் லதா ஓவென்று வாந்தி எடுத்தாள். தலையைப் பிடித்து விட்டான் கரன்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 5

குறுந்தொடர் - பகுதி 5

வழக்கம்போல இல்லாதிருந்தது இந்த விடியல் கரனுக்கு. அவளிடம் என்ன சொல்ல? அவள் என்ன சொல்லுவாள்? அவளிடம் வேண்டாமென்று சொல்லி, அவள் புரிந்து கொள்வாளா? நாம் ஏன் காதலிக்கக் கூடாது? அப்பா, அம்மா இன்னும் பல பல சிந்தனைகள் அவன் மீது விழுந்து வழிந்து கொண்டிருந்தது குளியலறை தண்ணீர்த் தூறலோடு சேர்ந்து.

வழக்கமாக அரட்டை அடித்துக் கொண்டு போகும் கரனும், பாலாவும் மௌனமாகவே கல்லூரிக்கு கிளம்பினார்கள். வண்டியை நிதானத்தோடே ஓட்டினான். சட்டென்று வெகு வேகமாக மூன்று வண்டிகள் அவர்களைக் கடந்து சென்றது. அதில் இரண்டு வண்டியில் மூன்று மூன்று பேராக அமர்ந்திருந்தனர்.

“என்னடா இந்த வேகத்துல போரானுக, விட்டா போய்ச் சேர்ந்துருவானுக போலிருக்கு” என்றான் பாலா.

சற்று தூரம் கடந்து வந்த ஒரு வளைவருகில் கரனின் வாகனம் திரும்பியது. அங்கே முன்னே வேகமாக சென்ற மூன்றில் இரண்டு வாகனம் விழுந்து கிடந்தது. ஒரே ஒரு வாகனம் குருதி சொட்ட சொட்ட ஒருவனை நடுவில் வைத்துக் கொண்டு வேகமாக எதிரே பறந்தது.

“அய்யய்யோ, அடி பட்டிருச்சுடா இவனுகளுக்கு. இறங்கு என்ன ஆச்சுன்னு பார்ப்போம்” என்றான் கரன் மெதுவாக வண்டியை நிறுத்தி.

“படுபாவிகளா, சாவதுக்குத்தான் இம்புட்டு வேகமா போனானுகளா” என்று சொல்லிக் கொண்டே அங்கே இருந்த உடல்களில் உயிர் ஒட்டியிருக்குதாவென்று பார்க்கச் சென்றனர்.

மூன்று பேர் இரண்டு சடலங்களை மடியில் போட்டுக் கொண்டு அழுதுகொண்டே இருந்தனர். அதுல ஒருத்தன் அவனுகள சும்மா விடக்கூடாதுடா, நம்ம பசங்களுக்குப் போன் பண்ணுடா என்று அலறினான்.

சற்று தூரத்தில் ஒரு வாகனத்தில் இரண்டு பேர் வேகமாக கல்லூரியைத் தாண்டி சென்று கொண்டிருந்தனர்.

“டேய், இது வேற ஏதோ பிரச்சினை மாதிரி இருக்குடா, வாடா போயிடலாம்” என்றான் பாலா பதறியபடியே.

“ஆமாம்டா, என்ன பன்றதுன்னே புரியல, வா போய்டலாம்” கரன்.

கல்லூரி அருகே பெரிய கலவரம் நடந்து கொண்டிருந்தது. பெரிய கூட்டம். எதிரே வந்த பாலாவின் நண்பன் “மச்சான், இந்த வண்டிய எங்க வீட்டுல விட்டுடா, நான் நம்ம பசங்க வேன்ல போலீஸ் ஸ்டேஷன் போறேன்டா” என்றான் பதட்டமாக.

வேறெதுவும் பேச முடியாத அவசர நிலை பாலாவிற்குப் புரிந்தது. வண்டியை வாங்கிக் கொண்டான். சற்று தொலைவில் லதா வேகமாக ஓடிவந்தாள், கரனைப் பார்த்ததும் அழுகை பீரிட்டு வந்தது அவளுக்கு. இன்னும் வேகமாக ஓடிவந்தாள்.

“கரா வண்டியை எடு, என்னை காப்பாத்து, எங்கேயாவது போ” என்றாள் பதட்டமாக. கரனுக்கு கையும் ஒடவில்லை, காலும் ஓடவில்லை.

“கரா சொல்றத கேளு அங்க இரண்டு பேரு என்னைத் துரத்துறாங்க, சீக்கிரம் போடா, என்னைக் காப்பாத்து” என்று கதறினாள். தூரத்தில் இரண்டு பேர் ஒரு சின்ன வண்டியில் வந்து கொண்டிருந்தனர்.

“டேய் வாடா போயிடலாம். நீ கரன் வண்டியில ஏறு” பாலா.

இரண்டு வண்டியும் சீறத் தொடங்கின. “டேய் பக்கத்து ஊருக்குப் போயிடலாம் குறுக்குப் பாதை வழியா, இல்லைனா அவனுங்க ஆளு யாராவது எதிர்க்க வரப் போறாங்க” என்றான் கரன். இதயம் பல மடங்கு துடிக்கத் தொடங்கியது கரனுக்கும் பாலாவிற்கும்.

மூவரும் சற்று நேரத்தில் மறைந்தனர். பின்னால் துரத்தி வந்தவர்களால் அவர்களைத் தொடர முடியாமல் திரும்பி விட்டனர்.

கொஞ்ச தூரம் போனதும் பாலா கரனை வண்டியை கடல்புறமாக ஓட்டச் சொன்னான்.

அங்கே சென்று வண்டியை நிறுத்தினான் கரன்.

படபடப்போடு இறங்கினர் மூவரும். ஒருவரையொருவர் மூச்சிளைக்க பார்த்துக் கொண்டனர்.

“என்ன ஆச்சு, அங்க என்னதான் நடக்குது?” கரன்

“எனக்கு பயமா இருக்கு கரா, என்னென்னமோ நடக்குது” என்று அழத் தொடங்கினாள், கொஞ்சமாக கரனின் கைகளைப் பிடித்துக் கொண்டு.

எதுவுமே புரியாதவனாய் கரன் பார்த்துக் கொண்டிருக்க, பாலா இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சரி அழாத, முதல்ல விசயத்தை சொல்லு, என்னதான் நடக்குதுன்னு கேக்குறன்ல” என்றான் கொஞ்சம் சத்தமாக கரன்.

கை கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தது லதாவிற்கு. பாலா பார்வையிலேயே கரனை சமாதானப் படுத்தினான். கரன் மெல்லிதாய் அவள் கை மேல் கை வைத்தான், லேசாகத் தட்டிக் கொடுத்தான். லதா படாரென்று கரன் மார்போடு சேர்ந்து கொண்டு அழுதாள்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 4

குறுந்தொடர் - பகுதி 4

“இவ்வளவு நேரம் சிநேகாதான் பேசினா. என்னைப் பற்றி நீ என்ன நினைக்குறன்னு தெரிஞ்சுக்கதான் அவ பேசினா. நீ இப்படிப் பேசுவேன்னு நான் எதிர்பார்க்கலை.” என்றாள்.

பதட்டத்துடன் வேகமாக தட்டச்சினான் கரன். “ஒரு சின்ன தப்பு நடந்துடுச்சு, இவ்வளவு நேரம் இங்கே பேசினது நானில்லை, பாலா. உன்னைக் கிண்டல் செய்யுறதா நினைச்சு அப்படிப் பேசிட்டான்.” என்றான்.

சற்றுத் தாமதமாகவே பதில் வந்தது. “அப்போ அது நீ இல்லையா? சிநேகாவதான் பிடிச்சுருக்குன்னு சொன்னதும் பயந்துட்டேன்” என்றாள்.

எதற்கான பீடிகை இதுன்னு கரனுக்கும் பாலாவுக்கும் புரிந்தது. பாலா குறுக்கிட்டான்.

“நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அப்படி பேசினேன், சிநேகாவை தவறாக எடுத்துக்க வேணாம்னு சொல்லு. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்” என்று இணைப்பைத் துண்டித்தான்.

அதற்கு அவள் அனுப்பிய பதிலுக்கு பதிலும் அனுப்பாமல் நிறுத்தி விட்டான். திடீரென்று தெருவில் பரபரப்பு.

சன்னலின் வழியே எட்டிப் பார்த்த பாலா கீழ் வீட்டில் தங்கி இருக்கும் முத்துவைப் பார்த்து கேட்டான் “என்ன விசயம் திடீருன்னு எல்லோரும் கூட்டமா நிக்குறீங்க?”

“கடல்ல இன்னைக்கும் ஒருத்தர் அந்த மனிதன் மாதிரி இருக்க மீனைப் பார்த்திருக்காரு, ஆனால் அது உடனே மறைஞ்சுடுச்சாம்” என்றார்.

பாலா சலித்துக் கொண்டே, “இவனுக உண்மையைத்தான் பேசுறானுகளா?” என்று கேட்டுக் கொண்டே கரனிடம் சென்றான். கரனுக்கு மீண்டும் சுயம்பு ஒரு விசயம் அனுப்பி இருந்தான்.

அதில், அந்தக் கடலுக்கு கரன் செல்ல வேண்டுமென்றும், கடலில் இருப்பது மீனல்ல தனக்குத் தெரிந்த உயிர்தான் என்றும் எழுதியிருந்தது.

இதனை வாசித்த கரன் அதிர்ச்சியில் மூழ்கியிருக்க, பாலா “டேய், யாருடா இது? என்னென்னவோ பேசுறான்? என்ன செய்யலாம்” என்று மௌனமுடைத்தான்.

என்னதான் சொல்றான்னு கேட்கலாம்டா என்றான் கரன். பாலாவும் சம்மதித்தான்.

“நீங்கள் யார்? எதற்கு உங்களுக்கு உதவ வேண்டும், இதனால் என்ன பயன்?” என்றான் கரன் சுயம்புவிடம்

பதில் உடனே வந்தது. “நான் யாரென்பதை உங்களுக்கு விளக்கும் நேரம் வரவில்லை. ஆனால் நீங்கள் உதவியைச் செய்தால் மனித இனம் தழைக்கும்” என்றான் சுயம்பு.

மேலும் ஒரு புதிரான விசயத்தைச் சொன்னான் சுயம்பு. “நீங்களும், உங்கள் மனைவி லதாவையும் சேர்ந்துதான் அந்த உதவியைச் செய்ய வேண்டும்” என்று இருந்தது.

மனைவி லதா என்பதைப் படித்தவுடன் அதிர்ச்சியுற்ற இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.

கரன் பேச ஆரம்பித்தான் “நீங்க தட்டச்சுறதுக்குப் பதிலா என்னுடன் பேசுங்க, இல்லை நேரில் வாங்க” என்றான்.

அதற்கு சுயம்பு “நான் உங்களைப் பார்க்க வர முடியாது, ஆனால் நிச்சயம் நாம் சந்திப்போம், எனக்கு இந்த ஒரு உதவி மட்டும் பன்னுங்க” என்றான்.

“உங்களுக்கெப்படி இங்கு நடப்பதெல்லாம் தெரிகிறது, லதாவைப் பற்றி எப்படி பேசுகிறீர்கள்? அவள் என் மனைவி இல்லை” என்றான் கரன்.

“அங்கு நடப்பது எல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் லதா உங்கள் மனைவி என்று எனக்குத் தெரியும், இப்ப இல்லைன்னாலும் இனிமேல் அவங்கதான் உங்க மனைவி” என்றான் சுயம்பு.

என்ன செய்யவென்று திகைத்துப் போனவர்கள் திடீரென்று கணினியைப் பார்க்க அதில் சுயம்பு இணைப்பிலிருந்து விடுபட்டுவிட்டது தெரிந்தது,

கரனுக்கு உள்ளூர ஒரு பயம் தொக்கி நின்றாலும், என்ன செய்வதென்ற குழப்பம் மேலோங்கி இருந்தது. பாலா எதையும் கூற முடியாதவனாய் இருப்பினும் சுயம்பு சொல்வதைக் கேட்க வேண்டமென்ற முன்கூட்டிய முடிவோடு இருந்தான்.

“லதாவை என் மனைவிங்குறான், அதுக்காகவாவது அவன் சொல்றதை செஞ்சு, எப்படி லதாவை என் மனைவின்னு சொன்னான்னு கேட்கனுமே” என்றான் கரன்.

“உனக்கு அவ மேல ஆசை வந்துடுச்சு அதான் இப்படிப் பேசுற, இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம், நாம அவன் சொல்றதை செய்ய வேண்டாம்.” என்றான் பாலா. ஆனால் அதைக் கேட்கும் எண்ணத்தில் கரன் இல்லை.

அப்படி என்னதான் புதிர் போடுகிறானென்று பார்க்க ஆவலானான்.

“பாலா, நான் லதாவுடன் பேசப் போகிறேன் நாளைக்கு. எங்க வீட்டுல இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டாங்கன்னு சொல்லிடுறேன்” என்றான் முடிவாக.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 3

குறுந்தொடர் - பகுதி 3

"டேய் பாலா, இங்க வா. நான் காலையில சொன்னேன்ல சுயம்புனு ஒருத்தர் பேசுறாருனு, அவர் என்னென்னமோ சொல்றாருடா" என்று நடந்ததை விளக்கினான் கரன்.

"நம்ம பசங்கதான் யாராவது இருக்கும்டா, விளையாடுறானுக" உள்ளே சற்று யாராக இருக்குமென யோசித்துக் கொண்டே இருந்தாலும் அலட்சியமாகவே சொல்லி முடித்தான்.

கரன் விடவில்லை மீண்டும் சுயம்புவிடம் பேச்சுக் கொடுத்தான். "நீங்க யாருன்னு எனக்கு சொல்லுங்க. மேற்கொண்டு என்னிடம் உங்களைப் பற்றிய விவரத்தைச் சொல்லவில்லைன்னா இதோட பேச்சை நிப்பாட்டிக்குங்க" என்று பதட்டத்தோடு தட்டச்சினான்.

"உங்களைப் பற்றியும் உங்களுக்குத் தெரியலை, உங்களைச் சுற்றி என்ன நடக்குதுன்னும் உங்களுக்குத் தெரியலை. உங்களுக்கு நான் மிகவும் நெருக்கமானவன். ஆனால் இப்பொழுது எதையும் சொல்லும் நிலைமையில் நானில்லை. எனக்கு உங்களிடமிருந்து ஒரு உதவி வேண்டும்." என்று விடுகதையோடு முடித்தான் பேச்சை.

"இல்லை, நீங்கள் என்னிடம் இப்படிப் புதிராகப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் நினைக்கும் ஆள் நானில்லையென எண்ணுகிறேன்" என்றான்.

சற்று நேரம் பதிலில்லை. 2 நிமிடத்திற்கு மேல் கணினித் திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பதில் வந்து சேர்ந்தது.

"இந்த சூழ்நிலையில் உங்களுக்கு நான் எவ்வளவு எடுத்துக் கூறினாலும் புரியாது. ஆனால் இந்த உதவியை நீங்கள் எனக்கு செய்தீர்களானால், பிறகு தானாகவே உங்களுக்கு ஒரு நாள் புரிய வரும்" என்றான் சுயம்பு.

தன்னைப் பற்றி ஏதேதோ கூறும் சுயம்புவை நம்ப முடியாதவனாக இணைப்பைத் துண்டித்தான் கரன்.

அமைதியாக சிந்தித்துக் கொண்டிருந்தவனை ஆசுவாசப் படுத்துவதற்காக பாலா கணினியில் ஒரு பாடலைப் போடுவதற்கு வந்தான். அந்த நேரம் பார்த்து லதா மின்னரட்டைக்கு கரனுக்கு விண்ணப்பம் அனுப்பி இருந்தாள். சற்று விளையாடிப் பார்க்க எண்ணிய பாலா, அவளிடம் பேச எண்ணினான்.

"வணக்கம் கரன், எப்படி இருக்க" என்றாள்.

"இப்பந்தானே கல்லூரியில இருந்து வந்தோம், அதுக்குள்ள எதுவும் ஆகலை, நல்லாதான் இருக்கேன்" என்றான் பாலா கரன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு.

"என்ன கிண்டலா? நான் பார்க்கதான் அமைதியான பொண்ணு, இங்க எங்க தோழிங்ககிட்ட கேட்டாதான் என்னைப் பற்றி உனக்குத் தெரியும்" என்றாள்.

"இப்படியெல்லாம் சொல்லாதே, நான் பயந்துடப் போறேன். உண்மையிலேயே இவ்வளவு அமைதியா இருக்க நீயே இப்படி வாய் பேசுவன்னா, உன்னோட தோழி சிநேகால்லாம் வாய்கிழிய பேசுவாளோ" என்றான்.

"நீ கூடதான் அமைதியா இருக்க, இப்போ என்னடான்ன இந்த அளவுக்குப் பேசுற? சிநேகாவைப் பற்றியெல்லாம் ஏன் இப்போ பேசுற?" என்றாள்.

"நான் எப்பவுமே இப்படித்தான். ஆனால் கல்லூரியில மட்டும்தான் அப்படி இருப்பேன், அதுவும் பெண்கள் இருந்தா. உண்மைதான் ஒரு பொண்ணைப் பற்றி இன்னொரு பொண்ணுகிட்டப் பேசினா கோபம்தான் வரும். உண்மையச் சொன்னா, எனக்கு உன்னை விட சிநேகாவைத்தான் பிடிச்சிருக்கு" என்றான் அவளைக் கிண்டிப் பார்க்க.

கொஞ்ச நேரம் பதிலில்லை. அமைதியாக இருந்தது. ஒருவேளை ஏதாவது தவறா பேசிவிட்டோமோ என்று பாலா எண்ணினான். "என்ன பதிலில்லை" என்று மேலும் கேட்டான்.

இதைப் பார்த்துவிட்ட கரன், சற்றே கோபப்பட்டு "ஏன்டா என் பேரைச் சொல்லிப் பேசுற, அவ எதாவது தப்பா நினைச்சுடப் போறா. தள்ளிப் போடா" என்று அவனை விலக்கிவிட்டு கணினி முன் அமர்ந்தான் கரன்.

"டேய் என்னையா திட்டுற. என்னைவிட அவதானே உனக்கு முக்கியம்? பொண்ணு வந்த உடனே என்னை ஓரந்தள்ளுறியா?" தான் செய்தது தவறு என்றாலும், அதை காண்பித்துக் கொள்ளாமல் சின்னக் கோபத்தோடு கேட்டான் பாலா.

"அப்படி இல்லடா, நமக்குள்ள எதுவும்னா சரி, நீ எப்படி என் பேரைச் சொல்லி அந்தப் பொண்ணுகிட்ட பேசலாம். இப்போ அந்தப் பொண்ணு என்னைத் தப்பா நினைச்சுருக்கும்ல" என்றான் அவனைச் சமாதானப் படுத்தும் நோக்கத்தோடு இளகிய குரலில்.

"இருக்கட்டும் கரா, என்ன இருந்தாலும் அவ பொண்ணு, நீ எதிர்பார்க்கிறது என்கிட்ட இல்ல" என்றான் கிண்டலாக. ஆனால் உள்ளூர ஒரு சின்னக் காயம், அந்தப் பெண்ணிற்காக தன்னைத் திட்டிவிட்டானே என்று.

"டேய், என்னடா இது. இதுக்கு ஏன் இப்படியெல்லாம் பேசுற. அவளுக்கும் நமக்கும் இடையில எந்த சம்பந்தமும் இல்ல. அவகிட்டையே சொல்லிடுறேன், இதெல்லாம் சரிபட்டு வராதுன்னு" என்று வேகமாகத் திரும்பினான் கணினியை நோக்கி.

அதற்குள் அங்கே ஒரு விசயம் தட்டச்சப் பட்டிருந்தது. அதை வாசித்தவன் சங்கடப் பட்டு விழித்தான். அதை வாசித்த பாலாவும் நெருக்கடியாக உணர்ந்தான்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
[அடுத்தப் பகுதி வந்ததும் இந்தச் சுட்டி வேலை செய்யும்]

கடலும் 4453 ஆம் ஆண்டும் - 2

குறுந்தொடர் - பகுதி 2

“இவளுகளுக்கு வேற வேலக்கழுதையே இல்ல, எப்ப பார்த்தாலும் கெக்கபெக்கேன்னு சிரிச்சே பசங்கள சோலிய முடிக்குறது, அங்கே என்னடான்னா கடல்ல எதையோ பார்த்ததைப் பற்றி இவ்வளவு தீவிரமா பேசுறாங்க” என்று சலிப்புத் தட்டிப் பேசினான் பக்கத்திலிருந்த சுகுமார்.

“டேய் கரா உன்னைப் பத்தித்தான் பேசி சிரிக்குறாங்கன்னு நினைக்குறேன், நான் சொல்ல சொல்ல நீ கேட்க மாட்டேங்குற. லதா மேல எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு” என்று பீடிகை போட்டுப் பேசினான் பாலா.

“சும்மா இருடா, லதா பக்கத்துப் பேட்சுப் பொண்ணு அவ்வளவுதான், இதுவரைக்கும் நான் அவகிட்ட சரியாப் பேசினது கூட இல்ல. அந்தப் பொண்ணு நல்லப் பொண்ணுடா, சுத்தி உக்காந்துருக்கதுதான் வெவகாரமானதுக” என்றான் கரன்.

“நடத்து கரா நடத்து. நான் சொல்றத நம்பாம அந்தப் புள்ளைக்கா பரிஞ்சுப் பேசுற” என்று எகத்தாளமா சிரித்துக் கொண்டான் பாலா.

அங்கே சற்று நேரம் அடங்கியிருந்த சிரிப்பொலி மீண்டும் எழுந்தது. தூண்டில் புழு போல வெட்கத்தில் நெளிந்து கொண்டிருந்தாள் லதா.

“ஏய் உன் ஆளு உன்னைப் பார்க்கவே மாட்டேங்குறான், பக்கத்துல உக்கார்ந்துருக்க பாலாதான் பார்க்குறான், இது என்ன முக்கோணக் காதலாடி?” என்று வழக்கமான பெண்கள் குசும்போடு கேட்டாள் லதாவின் தோழி சிநேகா. கூட்டமே மறுபடி ஒரு முறை கிளுக்கென சிரித்தது.

“அய்யோ கடவுளே, கொஞ்ச நேரமாவது சும்மா இருங்கடி” என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள் லதா. உள்ளுக்குள்ளே இவர்கள் இப்படிப் பேசுவது அவளுக்கு சுகமாய் இருந்தது.

வகுப்பில் நடக்கும் ஆராவாரத்தின் ஒலி கேட்டு துறைத் தலைவர் அவரது அறையை விட்டு வெளியே வருவதைப் பார்த்ததும் வாத்தியார் சார்லஸ் பதபதைத்தார். “ஏய் பொண்ணுங்களா கொஞ்ச நேரம் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா? ம். ஸ்டூடண்ட்ஸ் எல்லோரும் அமைதியா இருங்க” என்று கூறுவிட்டு பாடம் எடுக்க முன்னாடி சென்றார் சார்லஸ்.

உணவு இடைவேளையில் எப்பொழுதுமே பாலா, கரன், சுகுமார், சாம் எல்லோரும் ஒரே உணவு விடுதியில்தான் சாப்பிடுவார்கள். அன்று சாம் ஒரு ஆச்சரியப் பார்வையோடே உலா வந்தான்.

“என்ன சாம், காலையில இருந்து உன்னைச் சுற்றி ஒரேக் கூட்டம். கலக்குற, அப்படி என்னத்த உங்கப்பா கடல்ல பார்த்தாரு, எங்ககிட்டையும் சொல்லேன்” என்றான் வழக்கமானக் குசும்போடு பாலா.

சற்று அலட்சியட்சத்தோடும், பெருமிதத்தோடும் பார்த்தான் சாம். “டேய் சொன்னா நம்ப மாட்டீங்க” என்று ஆரம்பித்த சாமை மடக்கிப் பேசினான் சுகுமார்.

“நீ சொன்னதை இதுவரைக்கும் நம்புனா மாதிரி பேசுற? வழக்கம்போல நம்ப மாட்டோம். நடந்ததை மட்டும் சொல்லு, கப்ஸா விடாம” என்றவுடன் அனைவரும் சாமைப் பார்த்து கிண்டலாகச் சிரித்தார்கள்.

“டேய், இந்த நையாண்டிதானே வேண்டாங்குறது. சொல்றத கேளுங்கடா, எங்க அப்பா நேத்து கடல்ல இருந்து திரும்பி வரும்போது வலையில ஒன்னு சிக்கியிருந்துருக்கு. இழுக்க வரலியேன்னு உள்ள போயி பார்க்கலாம்னு மூனு பேரு உள்ள குதிச்சுருக்காங்க. அதுல ஒரு மனுசன் மாதிரியே உடம்பு எல்லாம் இருக்க ஒன்னு தண்ணிக்குள்ள இருந்துருக்கு. இவங்களைப் பார்த்ததும் வேகமா போயிருக்கு. அது கடல் கன்னி மாதிரி ஏதாவதா இருக்கும்னு எங்கப்பா சொன்னாருடா” என்றான் ஆர்வமாக.

“உங்க அப்பா சரக்குப் போட்டா, நம்ம டீக்கடையில இருக்க மாஸ்டரைப் பார்த்து சிவாஜி மாதிரி இருக்கேம்பாரு, நேத்தும் என்ன, சரக்குதானா? கடலாம், கடல் கன்னியாம்” என்றான் பாலா.

“டேய் சும்மா இருடா பாலா. நீ கோச்சுக்காதடா சாம், இவன் எப்பவுமே இப்படித்தான் உண்மையை பட்டுபட்டுனு பேசிடுவான்” என்று கேலியாகப் பேசினான் கரன்.

உங்க கூடல்லாம் சகவாசம் வச்சுகிட்டதுதாண்டா தப்புன்னு புலம்பினான் சாம்.

மாலை 5 மணிக்கு வகுப்பு முடிந்து எல்லோரும் கிளம்பினார்கள். பாலாவும் கரனும் கொஞ்சம் பொறுமையாக இடத்திலேயே அமர்ந்திருந்தனர். லதாவும், அவளது தோழி சிநேகாவும் இறுதியாக கிளம்பினார்கள். கரனைக் கடக்கும்போது சிநேகா செய்த கிண்டலில், “ஏய் சும்மா இருடி, எப்ப சொல்லனும்னு எனக்குத் தெரியும். வாடிப் போகலாம்” என்று வெட்கத்தில் சிவந்து கொண்டே லதா கரனையும், பாலாவையும் கடந்து சென்றாள்.

“டேய், இது அதுதாண்டா. கலக்குடா கரா. பொண்ணைப் பத்திப் பேசினாலே எரிஞ்சு விழற உனக்குப் போயி பொண்ணு மாட்டுது பாரு. எனக்கும் எதையாவது ஏற்பாடு செஞ்சுக் கொடேன்” என்று வழக்கமானக் கிண்டலோடு கரனைக் கேலி செய்தான் பாலா.

“அப்பவே போயிருக்கலாம், நீ சொன்னேன்னு உட்கார்ந்தேன் பாரு என்னை அடிச்சுக்கனும்” என்று பதில் சொல்லிகொண்டே இருவரும் வீட்டுக்குக் கிளம்பினர். வீட்டிற்குச் சென்று கணினியைப் பார்த்தான் கரன்.

“உங்க கிட்ட நேரடியாப் பேசனும், கடல்ல நடந்த விசயம் இன்னைக்கு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதைப் பற்றித்தான் பேசனும்” என்று கூறி நின்றது சுயம்புவின் மின்னரட்டை. கரன் திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தான்.

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
[அடுத்தப் பகுதி வந்ததும் இந்தச் சுட்டி வேலை செய்யும்]

கடலும் 4453 ஆம் ஆண்டும்

குறுந்தொடர் - பகுதி 1

"காலையில 8 மணி ஆயிடுச்சு, சீக்கிரம் எந்திருச்சு கிளம்புடா, நீ கிளம்பிட்டு என்னையும் எழுப்பி விடு" என்று படுக்கையில் புரண்டபடியே முணங்கினான் பாலா.

"ஏன்டா காலையிலேயே உயிரை வாங்குற, என்னை எழுப்புறதுக்கு நீ போய் கிளம்பிட்டு பிறகு என்னை எழுப்பியிருக்கலாம்ல" என்றபடியே திரும்பிக் குப்புறப் படுத்துக் கொண்டு பேசினான் கரன்.

"அதான் இப்போ எந்திருச்சுட்டல்ல, போய் கிளம்புடா" என்று கூறிவிட்டு திரும்பவும் தனது தூக்கத்தைத் தொடர்ந்தான் பாலா.

இவன் எப்பவுமே இப்படித்தான் சோம்பேறி என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாலும், இவன் இல்லாத வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியவில்லை என்ற எண்ணத்தோடு துண்டோடு குளியலறைக்குக் கிளம்பிவிட்டான்.

பாலாவும், கரனும் மிகவும் நெருங்கிய நண்பர்கள், கல்லூரியில் சேர்ந்த முதல்நாளில் இருந்தே இரண்டு வருடமாக இருவரும் இணை பிரியாத பறவைகள். பல விசயத்திற்கும் ஒத்துப் போகாத எண்ணம் இருந்தாலும் இருவரையும் சேர்த்து வைத்திருப்பது என்னவோ விட்டுக் கொடுத்தலும், அன்பும்தான். மிகவும் சிறிய அளவிலான அந்த அறையில் ஒரே மெத்தைதான். மெத்தைக்கு அருகே இருந்த சிறிய சன்னலின் வழியே காலைப் பொழுதின் மஞ்சள் வெயில் உள்ளே வந்தது. எப்பொழுதுமே சண்டையிடுவது போல காட்சியளிக்கும் இருவரின் நட்பே எந்தச் சண்டைக்குப் பிறகும் இதுவரை பேசாமல் இருந்ததில்லை.

தன்னை மட்டும் எழுப்பிவிட்டு இவன் மட்டும் ஏன் இன்னும் தூங்கவேண்டுமென்று மூலையில் இருந்த கணினியில் சத்தமாகப் பாட்டை ஓடவிட்டுவிட்டு குளியலறைக்குச் சென்றான் கரன்.

எழுந்து அதை நிறுத்திவிட்டுத் தூங்குவதற்கு சோம்பேறித் தனப் பட்டுக் கொண்டு அப்படியே கண்மூடிப் படுத்துக் கொண்டான், சின்ன ஊடலோடு. பாலாவுக்கு எப்பொழுதுமே கரன் இதுபோல செய்யும் சேட்டைகள் பிடித்திருந்தாலும், அதை வெளிகாட்டிக் கொள்வதில்லை.

குளியலறை விட்டு வெளியே வந்த கரன், பாலாவைக் கிளம்பச் சொன்னான். ம்ஹீம் என்று உதட்டை ஒரு ஓரமாக வைத்துக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டு மெதுவாக எழுந்து போனான் பாலா.

"போடா டேய், போடா. போய் கிளம்புற வேலையைப் பாரு. எங்களை மட்டும் எழுப்பி விட்டல்ல" என்று சிரித்துக் கொண்டே பேசிவிட்டுத் தலைவாரிக் கொண்டிருந்தான் கரன்.
தன்னுடைய கணினியில் மின்னரட்டைப் பகுதிக்குச் சென்றான். புதிதாய் அவனுக்கு ஒரு விண்ணப்பம் வந்திருந்தது. அந்தப் பெயரில் இதுவரை அவன் யாரையும் சந்தித்ததில்லை. சரி தன்னைப் பற்றி அறிந்தவர்கள் யாராவது இருக்கக் கூடுமென விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டான்.

"காலை வணக்க்ம்" என்று அவன் ஏற்றுக் கொண்டதும் வந்தது.

நீங்க யாரு, இது வரை உங்களை நான் பார்த்ததில்லை என்று நினைக்கிறேன் என்றான்.

"என் பெயர் சுயம்பு, என்னை உங்களுக்கு இன்னமும் தெரியாது, ஆனால் உங்களை எனக்குத் தெரியும். உங்களைச் சந்திக்கும் இந்த நாளுக்காக நான் வெகுநாட்களாக காத்திருக்கிறேன்" என்றது.

சற்றே ஆச்சரியமடைந்த கரன், யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, "ஆச்சரியமா இருக்கு, என்னைப் பார்க்க பல நாட்களாக் காத்திருக்கீங்களா?" என்றான்.

கிளம்பி விட்டு வெளியே வந்த பாலா "யாரு கூடடா சேட் பன்ற? ஏதாவது பொண்ணாடா? அப்படியே நீ பேசி என்னத்தைக் கிழிக்க போற, என்னிடமாவது கொடு" என்றான். கரனுக்கு அவ்வளவாக பெண்களுடன் பழக்கமில்லை. பாலா வாய்ப்பேச்சில் பேசினாலும், செயலில் பெண்களிடம் ஒன்றுமில்லை.

"சரி, எனக்கு கல்லூரிக்கு நேரமாகிவிட்டது, நாம் பிறகு சந்திக்கலாம்" என்று விடைபெற்றுக் கொண்டான் கரன் சுயம்புவிடமிருந்து. பாலாவிடம் நடந்ததைச் சொன்னான்.

9 மணிக்கு ஆரம்பிக்கும் கல்லூரிக்குச் சரியாக 8.45 க்கு இருவரும் கிளம்பினர்.

"இன்னைக்கும் காலையில சாப்பாடு கிடையாதா?" என்று சலித்துக் கொண்டான் பாலா.

வகுப்புக்குச் சென்றதும், முதல் பாடவேளை வாத்தியார் உட்பட சில மாணவர்களும் சேர்ந்து ஆவலோடு சாம் என்ற பையனிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தனர். பக்கத்திலிருந்தவனிடம் கரன் அங்கு என்ன நடக்கிறதென்றான்.

"ஏதோ அவங்க அப்பா கடல்ல பார்த்தாராம் ,அதைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறான்" என்று அலட்சியத்தோடு சொன்னான். என்னவா இருக்கும், சரி அப்புறமா கேட்டுக்கலாமென்று கரனும், பாலாவும் அமர்ந்தனர்.

சற்றுத் தள்ளி பெண்கள் கூட்டத்தில் ஏற்பட்ட திடீர் சலசலப்பில் லதா மட்டும் வெட்கித் தலை குணிந்தாள்.

அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து>>

இனம் புரியாத வலிகள்

"ஏண்டி பாமா, இன்னைக்கு நான் கண்டிப்பா வந்துதான் ஆகணுமா? நீயே கூட்டிகிட்டுப் போய்ட்டு வரவேண்டியதானே?" என்று குளிக்கக் கிளம்பியவன் நின்று சமையலறையை நோக்கி ஒரு முறை சத்தமிட்டான்.

"அப்பா, அம்மா இரண்டு பேரும் கண்டிப்பா வரணுமாம். அப்புறம் அங்கே ஏதாவது கேள்வி கேட்டாங்கன்னா உங்க சம்பளம், வேலை பற்றியெல்லாம், நீங்கதான் பதில் சொல்லணும்" என்று வாணலியில் தாளித்துக் கொண்டே கச்சிதமாய்ப் பேசி முடித்தாள்.

இப்படி ஒரு பனிரெண்டாம் வகுப்பை என் தலையில் கட்டி வச்சாங்களேன்னு புலம்பிகிட்டே குளிக்கக் கிளம்பினான்.

இருவருக்கும் திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிறது. பெற்றோரின் விருப்பத்திற்காகவும், கொஞ்சம் கட்டாயத்திற்காகவும் பாமாவைக் கட்டிக் கொண்டான். பாமாவும் அழகுக்கு சளைத்தவள் அல்ல, படிப்பு மட்டும்தான் குறைவு, ஆனால் சமையல், கவனிப்பு எல்லாவற்றிலும் கெட்டிக் காரி. இருவரும் மணம் முடித்துவிட்டுச் சென்னை கிளம்பியபோது ஊரே வந்து வாழ்த்தி வழியனுப்பியது. ஆனால் இப்படி படிப்பும் தன்னை விட நாகரீகமும் குறைந்த மனைவியை எப்படித் தனது நண்பர்களிடம் அறிமுகப் படுத்துவது என்று வெட்கிக் கொண்டு தனது திருமணத்திற்கும், திருமணத்திற்குப் பிறகும் நண்பர்கள் யாரையும் அழைத்ததில்லை. வெளியே சில இடத்துக்குச் எப்பொழுதாவது இவளைக் கூட்டிச் சென்றாலும் அதிகம் பேசிக் கொள்ளாமல் சீக்கிரம் போன வேலையை முடித்துவிட்டுத் திரும்பிவிடுவான். வீட்டு அருகிலேயே பாலர் படிப்பு முடித்த வசந்தை இன்று ஒன்றாம் வகுப்பில் சேர்த்து விடக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.

குளித்து முடித்து வெளியே வந்தவன், தலையைத் துவட்டிக் கொண்டே பாமா, பாமா என்று அழைத்தான், பதிலே இல்லை. "எங்க போய்த் தொலஞ்சா? ஒரு சட்டை கூட எடுத்து வைக்காம?" என்று முணங்கிக் கொண்டே இருந்தான்.

"டேய்ச் செல்லம், இன்னைக்கு நீ பள்ளிக் கூடம் போகப் போற, உன்னை என்னென்ன கேள்வி கேட்பாங்கன்னு சொல்லிக் கொடுத்துருக்கேன்ல அம்மா, அதெல்லாம் சரியாச் சொல்லிடனும். சரியா? இப்போ நான் கேள்வி கேட்குறேன், பதில் சொல்லு பார்ப்போம்"

உன் பேர் என்ன?

"எனது பெயர் வசந்த், ஆங்கிலத்தில் மை நேம் ஈஸ் வசந்த்"

உங்க அப்பா அம்மா பேரு என்ன?

"அப்பாவின் பெயர் குமார், அம்மாவின் பெயர் பாமா, ஆங்கிலத்தில் மை ஃபாதர்'ஸ் நேம் ஈஸ் குமார், மை மதர்'ஸ் நேம் ஈஸ் பாமா"

வீட்டு தொலை பேசி எண்?

"2234 6768"

சரி நேரம் ஆயிடுச்சு, மத்ததெல்லாம் ஞாபகம் இருக்குல்ல, அம்மா இங்க நிக்குறேன், நீ உன் ஷூவைப் அந்த மாமா கிட்ட கொடுத்து பளபளப்பாக்கிட்டு வா.

சரிம்மா என்றவன் ஓடிச் சென்று செருப்புத் தொழிலாளர் சாமியுடன் கொஞ்ச நேரம் கலகலப்பாக பேசிவிட்டு வேலையையும் முடித்துக் கிளம்பினான்.

"என் செல்லப் பையா, உனக்கு ஸ்கூல்ல எடம் கெடைக்கும்பா, ராசா, போயிட்டு வாபா, இன்னைக்கு உனக்கு இலவசம்பா பாலீஷ் போட்டது" என்று சாமி பாசமோடு சொன்னார்.

"இந்தாப்பா வசந்த், இதான் நீ இன்னைக்கு போட்டுப் போகப் போற துணி, இது உன் அப்பாவோடது, வாங்கிக்கோ. உனக்கு மெய்யாலுமே சீட்டு கெடிக்கும்பா, அசத்து கண்ணா" என்று பாசத்தோடு வாழ்த்து கூறினார் இஸ்திரிக் காரர் அன்பு.

வேலையெல்லாம் முடித்துவிட்டு பாமாவும், வசந்தும் வீட்டு மாடிக்குச் சென்றனர். இதையெல்லாம் மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் குமார்.

"ஏண்டி உன் புத்தி எங்க போகும்? போயும் போயும் அந்த இஸ்திரிக் கடைக்காரன், செருப்புத் தைக்கிறவன் கிட்டல்லாம் ஏண்டி பேசுற, அதுவும் வசந்தை வேறப் பேசவிடுற. அவங்க கிட்டல்லாம் தூர நின்னே பழகணும். புரியாதா? எத்தனை தடவை சொன்னாலும் உனக்குப் புரியாது, தெண்டக் கருமம்" என்று வழக்கம் போல திட்டிவிட்டு தன்னுடைய சட்டைத் துணியை வாங்கிக் கொண்டு உடை மாற்றப் போனான் குமார்.

மூவரும் பள்ளிக்கூடத்திற்குப் போனார்கள். தலைமை ஆசிரியர் ஒவ்வொரு மாணாக்கராய் அழைத்து பேசிப் பார்த்து பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொண்டார். வசந்த்துடைய நேரம் வரவும் மூவரும் உள்ளே சென்றனர். சில பல கேள்விகள் பெற்றோரிடம் கேட்டு முடித்தார் தலைமை ஆசிரியர். மேலும் வசந்திற்கு பாமா சொல்லிக் கொடுத்த கேள்விகளையும் கேட்டார், அதற்கு கச்சிதமாகப் பதில் சொன்னான் வசந்த்.

"பையனோட அம்மா கம்மியா படிச்சுருக்காங்களே, குழந்தைக்கு வீட்டுப் பாடம் எப்படிச் சொல்லிக் கொடுப்பாங்கன்னு யோசித்தேன். ஆனால் அழகா சொல்லிக் கொடுத்துருக்காங்க. பாராட்டுக்கள். மேலும் உங்க பையனை இங்கே சேர்ப்பதற்குக் காரணமே அவனுடைய ஒழுங்குதான். அழகா இஸ்திரி செஞ்ச சட்டை, கால்ச்சட்டை, முகம் தெரியுற அளவுக்கு பளபளப்பா ஷூ. நீங்களும் நல்ல ஒழுங்கான ஆடையோடு வந்திருப்பதே, நல்ல குடும்பம் என்பதை எனக்குப் புரிய வைக்கிறது. இதுக்காகவே உங்கப் பையனைச் சேர்த்துக்கிறேன்" என்று தெளிவாகப் பேசி முடித்தார் தலைமை ஆசிரியர்.

"இந்த சட்டை, ஷூ, நீ சொல்லிக் கொடுத்த கேள்வி பதில் இதனாலதான் இடம் கிடைச்சுருக்கு, அப்புறம் ஏம்மா அப்பா உன்னையும், சாமி, அன்பு மாமாவையும் திட்டிகிட்டே இருக்காரு" என்று வெகுளித் தனமா கேட்டு முடித்தான் வசந்த்.

வெட்கித் தலை குனிந்தான் குமார்.

எல்லாம் கடவுள் செயல்

"இங்கே சந்தானம் வீடுன்னா எதுப்பா?" என்று சிதம்பரத்தின் அக்ரகாரத் தெருவின் முதல் வீட்டில் முதுகைச் சொரிந்து கொண்டிருந்த முதியவரிடம் கேட்டார் கூரியர் காரர்.

"எது சகுனம் சந்தானம் வீடா, இந்தத் தெருமுனையில் இருக்கிற அந்த நீல நிற வீடுதான்" என்று ஒரு ஏளனப் பார்வையோடு சலிப்போடு பதில் சொன்னார் முதியவர்.

தெரு முழுக்க சின்னச் சின்னக் கோலங்கள் இருந்த வீடுகளிடையே சற்று வித்தியாசமாக மார்கழி மாதக் கோலம்போல் பெரியதாய் இடப் பட்டிருந்த அந்த நீல நிற வீட்டு வாசலை அடைந்தார். "சந்தானம் இருக்காரா?"

வீட்டின் உள்புறம் அமர்ந்திருந்த 70 வயது பாட்டி எழுந்து வந்து "யாருடா நீ அம்பி, என் புள்ளைய பேர் சொல்லிக் கூபிடறவன். இந்தத் தெருவிலேயே என்னைத் தவிர என் புள்ளையாண்டான யாரும் பேர் சொல்லிக் கூப்பிடறதில்லைடா." என்று நீட்டி முழக்கிக் கொண்டிருந்த பாட்டியை சற்றே ஓரம் தள்ளிவிட்டு அழகிய வளையல்களில் ஒளிந்து கொண்டிருக்கும் பளிங்குக் கரங்களை நீட்டினாள் செல்லம்மா.

"கூரியர் தானே, என்னிடம் கொடுங்கள், அவர் என் தோப்பனார்தான்".

இந்தப் பேரழகியைக் கட்டிக்கப் போறவன் எந்தப் புண்ணியவானோன்னு மனசுக்குள்ளேயே நினைத்துக் கொண்டு. "இந்தாம்மா, உங்க அப்பா கிட்ட கொடுத்துடு. இதுல ஒரு கையெழுத்துப் போடு" என்றார். போகின்ற தருவாயில் அந்த தேவதை இருக்கும் வீட்டை ஒரு முறை ஆச்சரியத்தோடு பார்த்துவிட்டு நடையைக் கட்டினார்.

"பாழாப் போறவன் கண்ணுல கொள்ளியைத்தான் வைக்கணும். எப்படி வெறிச்சுப் பார்த்துட்டுப் போறான் பாரு. அவன் நின்ன இடத்தைக் ஜலம் ஊத்தி அலம்பிதான் விடணும். இதுக்குத்தான் வயசுக்கு வந்தப் பொண்ணை சீக்கிரம் தாரவாத்துக் கொடுத்துடுன்னா கேக்குறானா சந்தானம்" என்று புலம்பிக் கொண்டே திண்ணையில் உட்கார்ந்தாள் பாட்டி.

கூரியரில் வந்திருந்த புகைப் படத்தையும், தகவலையும் பார்த்துவிட்டு, தன் மனைவியைக் கூப்பிட்டார் சந்தானம். "ஏண்டி மைதிலி, நம்ம பொண்ணுக்கு வரன் தேடி வந்திருக்குடி. பையன் 3 வருஷமா ஆஸ்திரேலியாவில் இருக்கானாம். விலாசமும், புகைப் படமும் இதுல இருக்குப் பாருடி. ஆனால் அவா இங்க வரலையாம். அவா வீட்டுக்கு நாம போகணுமாம். ஆஸ்திரேலியாவில் இருக்கப் பையனை அவங்க வீட்டுல இருந்தே கணினியில பார்க்கலாமாம். என்ன இழவோ, பொண்ணு வீட்டுக் காராவை, மாப்பிள்ளை வீட்டுக்குக் கூப்பிடற சம்பிரதாயம்?" என்று சத்தமாகப் பேசிவிட்டு கோவிலுக்குப் புறப்பட்டார் சந்தானம்.

செல்லம்மா படபடத்தாள், ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப்போட்டக் கல்யாணம் நடந்திடுமா என்று யோசித்தாள். எதிர்வீட்டில் இருக்கும் சுப்பிரமணியைத்தான் கல்யாணம் செய்துக்கனும்னு அவளுக்கு ஆசை. ஆனால் சுப்பிரமணிக்கு சுத்தமா கடவுள் நம்பிக்கை இல்லை. மீசையும், தாடியுமா கடவுளைக் கும்பிடாமல் அவன் அலையுறது சந்தானத்திற்கு சுத்தமா பிடிக்காது. "கடவுளே எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நீதான் நிறுத்தனும். நான் இன்னும் என் காதலை சுப்பிரமணியிடம் சொல்லவே இல்லை. ஆனால் அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும். இதுக்கு நீதான் துணை நிற்கணும்" என்று வேண்டிக்கொண்டாள்.

மாப்பிள்ளை வீட்டுக்கு மறுநாள் இவர்கள் கிளம்புவது சுப்பிரமணிக்குத் தெரிய வந்தது.

மறுநாள் மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்பின சந்தானம், மைதிலி, இன்னும் சில சொந்தக் காரர்கள் வாசலுக்கு வரவும் எதிரே தனியாய் வந்த சுப்பிரமணியைப் பார்த்ததும் விருட்டென வீட்டுக்குள் போனார் சந்தானம்.

"என்ன இழவோ, காலையிலேயே ஒத்தப் பிராமணனா எதிர்க்க வர்றான், அதுவும் இந்த சமயத்துல. போற காரியம் விளங்குமோ? வேற எவனா வந்தாலும் ஒரு சொம்பு ஜலத்தைக் குடிச்சுட்டுப் போயிடுவேன். இந்த நாத்திகனா வரணும். அரை மணி நேரம் கழிச்சுப் போலாம்டி எல்லோரும் ஆத்துக்குள்ள வாங்கோ" என்று சத்தம்போட்டு பேசிவிட்டு உள்ளே அமர்ந்துகொண்டார் சந்தானம்.

ஒரு கால் மணி நேரம் கழித்து வந்த செல்லம்மாவின் பெரியப்பா மகன் சிவா, "சித்தப்பா, நீங்க பார்த்திருக்க பையன் அந்த அளவுக்கு நல்லவன் இல்லை. அவனுக்குப் பொம்மனாட்டிகள் பழக்கம் கூட இருக்காம், அவன் படிச்ச கல்லூரியில படிச்ச என் நண்பனிடம் விசாரிச்சேன்" என்று ஒரு குண்டைப் போட்டான்.

"என்னடா சொல்ற, கொஞ்சம் தாமதமா வந்திருந்தா அவா ஆத்துக்குப் போயிருப்போமேடா கடங்காரா. நல்ல வேளை இப்போவாவது வந்தே. எதிர்க்க வந்த சுப்பிரமணிக்கும், என் கடவுள் சுப்பிரமணிக்கும்தான் நன்றி சொல்லனும்" என்று சொல்லி விட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டார் சந்தானம்.

"டேய் சுப்பிரமணி, நீ சொன்னதை நான் அங்கே சித்தப்பாகிட்ட சொல்லிட்டேண்டா. உன்னால இந்த நிச்சயம் நின்னுடுச்சு. உனக்கு நல்லா தெரியும்ல, அந்தப் பையன் அப்படித்தானான்னு" என்று கேட்டான் சிவா.

"அவன் என் கல்லூரியில படிச்சவந்தான். எனக்கு நல்லாவே தெரியும். நீ வர்றதுக்கு நேரம் ஆச்சுன்னுதான் அவா எதிர்க்க வந்து கொஞ்சம் நேரம் கடத்தினேன்" என்றான் சுப்பிரமணி.

"சுப்பிரமணியை எதிர்க்க வரவழைச்சு அவகாசம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி கடவுளே. எப்படியாவது இனியும் காலம் கடத்தாம ஆத்துல சொல்லிடணும். எல்லாம் கடவுள் செயல்" என்று மெத்தையில் குப்புறப் படுத்துக் கொண்டு தலையணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டாள் செல்லம்மா.

எலும்புகளின் தேடல்கள் - அறிவியல் புனைவுக் கதை

"சங்கர், நீங்களும் உங்க மூன்று பேர் கொண்ட குழுவும் இன்னைக்கு இரவு விமானத்தில் ரஷ்யா போகனும்" என்றார் இந்திய உளவுத் துறை அதிகாரியில் ஒரு முக்கியப் பிரமுகரும் தமிழருமான மாறன்.

தானும் தனது குழுவும் ஏற்கனவே சேமித்த சில தகவல்களின் படி ஒரு முடிச்சு கிடைத்திருக்கிறது. அதை அங்கே சென்று உறுதிப் படுத்தி விட்டு வருகிறோம் என்று சங்கர் வாக்களித்தார்.

"இது உலகளாவியப் பிரச்சினை, எங்கே எப்போ அடுத்து அந்தப் பிரச்சினை வெடிக்கும்னு தெரியலை. ஏற்கனவே நாம நிறைய இழந்துட்டோம். நியாபகம் இருக்கட்டும் இந்தப் பிரச்சினையில் சம்பந்தப் பட்டிருப்பவர் உலக பணக்காரர்களின் பட்டியலின் இருப்பவர்" என்று அறிவுரை கூறினார்.

சரியாக இன்றிலிருந்து ஒரு மாதம் முன்பு குமரி மாவட்டத்தில் சரமாரியாக மக்கள் நோயுற்று இறந்திருக்கிறார்கள். இதற்கான காரணம் அவர்களின் உடலிலுள்ள இரத்த அணுக்கள் செயலிழக்கத் தொடங்கியதே. மேலும் குமரிக் கடலில் பல இலட்சம் மீன்களும் இறந்தது. இதை போல் தென் ஆப்ரிக்காவிலும் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்தது. இது போன்று இதுவரை உலகம் முழுதும் 27 இடத்தில் நடந்துள்ளது. இது இன்னும் எங்கு தொடரலாம் என்ற ஆய்வறிக்கை ஒன்றைப் பற்றிப் பேசுவதற்காகவே சங்கர் ரஷ்யாவிற்கு செல்கிறார்.

விமான நிலையத்திற்கு சங்கரும் அவரது குழுவும் ஒரு வாரத்திற்கு முன்பு பயணிக்க ஆரம்பித்த போது, திடீரென்று ஒரு லாரி பலமாக மோதி இருவர் உயிரழந்தனர். சங்கரும் அவருடன் உள்ள மூவரும் உயிர் தப்பினர். ஒரு வாரம் கழித்து இன்று மீண்டும் செல்கிறார்.

"சார், இந்தக் குழுவுல நாம இப்போ நாலு பேருதான் இருக்கோம். மீதி இரண்டு பேர் இறந்ததற்கு ஒரு வேளை அந்த லாசன் தான் காரணமாக இருக்குமா?" என்றார் முகில்.

"இது பற்றி சி.பி.ஐ விசாரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த முறை எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று நினைக்கிறேன்" என்று சங்கர் கூறும் போது விமானம் கிளம்பியிருந்தது, நால்வரும் சிறு கலக்கத்தினுடனே சென்றனர்.

தான் சேகரித்த விசயங்களை உலகின் பல இடங்களிலிருந்து கூடிய அதிகாரிகளிடமும், லாசன் தற்பொழுது வசிக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த சில உயர் அதிகாரிகளுக்கும் சொல்ல ஆரம்பித்தார் சங்கர்.

"இது வரைக்கும் திடீர் மரணங்கள் இப்படி நடந்த எல்லா இடத்திலும், ஏதோ தொற்று நோய்தான் காரணம் என்று பலரும் அந்த கிருமியைத் தேடி அலைகின்றனர். ஆனால் இது எந்தக் கிருமியாலும் வந்ததல்ல. இது லாசன் என்பவரின் ஆராய்ச்சியால் வந்த விணை. அவர் நடத்தும் மியூஸியம் ஒன்றும் அவரது தொழிலில் முக்கியமான ஒன்று. அது சமீப காலமாக மிகவும் பிரபலமடைந்து இருக்கிறது. இதற்குக் காரணம் லாசன் நிறுவணம் கண்டு பிடித்த டினோசர்களுக்கும் முந்தைய உயிரனங்களின் எலும்புகளும், ஆதி மனிதனின் எலும்புகளும், இன்னும் பலப்பல.... இவையெல்லாம் நடந்து முடிந்து சுமார் 5 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அவர் சில இடங்களில் எலும்புகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் குமரியை ஒட்டிய கடல் பகுதியிலும் இந்திய அரசாங்கத்தின் அனுமதி பெற்று சில அரிய உயிரினங்களின் எலும்புகளைக் கைப்பற்றி அங்கே வைத்திருக்கிறார்."

இடையே குறுக்கிட்ட இங்கிலாந்திலிருந்து வந்த அதிகாரி, அவர் எலும்புகள் எடுக்காத இடத்திலும் பல பேர் இறந்திருக்கிறார்கள் என்றார்.

இதற்கு சங்கர், லாசன் எலும்புகள் எடுத்த இடங்களின் பட்டியலும், உலகில் இது வரை இது போன்ற மரணம் நிகழ்ந்த 27 இடங்களின் பட்டியலையும் அளித்தார். அதில் அவர் 28 வதாக ஒரு ஊரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

"இந்த கேள்விக்கான விடை அவர் சமீபத்தில் தனக்கான ஒரு செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதுதான். அவர் அந்த செயற்கைக்கோளை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னால் செலுத்திக் கொண்டார். அந்த செயற்கைக் கோள் மூலம் எக்ஸ்ரே போன்ற ஏதோ ஒரு புதிய கதிர்வீச்சு மூலம் அவர் உலகின் பல இடங்களில் சோதனை நடத்தியுள்ளார். இவற்றில் மக்கள் வாழும் பகுதியும் அடங்கும். தரையைத் துளைத்துச் சென்று அங்கே எலும்புகள் எங்கெல்லாம் இருக்கின்றது என்பதை அவர் கண்டு பிடித்திருக்க வேண்டும். அந்தக் கதிர்வீச்சின் காரணம்தான் பொறுமையாகச் செயல் பட்டு அந்த ஊர் மக்களை சில ஆண்டுகள் கழித்து கொன்றிருக்க வேண்டும். என்னுடைய கணக்கு சரியென்றால் அவர் 11 வதாக எலும்பு எடுத்த இடம் ரஷ்யாவில் உள்ள பனி அதிகமும், மக்கள் குறைவாகவும் வசிக்கும் ஒரு பகுதியின் இந்தப் பட்டியலில் இறுதியாக இருக்கும் இடம்தான். அடுத்த மரணம் அங்கேதான் நிகழும், அது கணக்குப் படி ஒரு மாதத்திற்குள் நிகழும்" என்று சொல்லி முடித்தார் சங்கர்.

இதைக் கேட்டு அதிர்ந்து போன அதிகாரிகளில் ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவர் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. அது ரஷ்யாவைச் சேர்ந்த அந்த கிரமாத்திலுள்ள 700 பேர் இதே போன்று திடீரென மரணித்திருக்கின்றனர் என்றது.

இன்னும் எத்தனை நாள் இப்படி?

கற்பனைகளிலேயே ஒருமாத காலமாய்க் கொடுத்துக் கொண்டிருந்த முத்தங்களை உண்மையாக்கும் தினம் இன்று என மீண்டும் கற்பனையோடே, ஊருக்குச் சென்று திரும்பியக் காதலி அணுவைப் பார்க்க ஆவலோடு சென்று கொண்டிருந்தான் ஞானி. வழக்கமாக அணு நிற்கும் அந்த மகளிர் விடுதியின் தெருமுனையில் ஞானி தான் புதிதாக வாங்கிய சொகுசு மகிழ்வுந்தை நிறுத்தினான்.

நொடிகள், நிமிடங்களாகியது, நிமிடங்கள் மணியானது, ஆனால் கற்பனையிலேயே இருக்கும் ஞானிக்கு அந்த மணித்துளிகள் பெரிதாகப் படவில்லை. அவளைப் பார்க்கும் ஆவலில் ஒரு மணி நேரம் முன்பே வந்து நின்றிருந்தான். சில முறை அணுவை அலைபேசியில் பிடிக்க முயன்றும் முடியாமல் போயிற்று. அவளது வீட்டில் இருக்கும் பொழுது அலைபேசியின் தொடர்பு இருக்காது. தீடிரென்று பனியில் மயங்கியிருந்த புற்களெல்லாம் உணர்வு பெற்றது. தூரத்தில் ஒரு சுடிதார் அணிந்து அந்த வானவில் நடந்து வந்து கொண்டிருந்தது. அவள் அணுதான்.

"ஹேய், எவ்வளவு நேரமா இங்க நிற்குறேன் தெரியுமா? என்னை ஒரு மாதிரி பார்த்துட்டுப் போராங்கப்பா எல்லோரும்" என்று சொல்லிக் கொண்டே அவள் கரத்தைப் பிடித்தான்.

"எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்ட, சீக்கிரமா வந்து இங்க நிக்காதன்னு. சரி அது போகட்டும் இதுதான் நீ புதிதாய் வாங்கியதா, நல்லா இருக்குடா" என்று அணு கூறிமுடித்துக் கொண்டே அவனை எப்பொழுதுமே அசத்திவிடும் அந்த கண்ணக் குழியை ஒரு புறமாகக் காட்டினாள்.

அவன் வந்து காத்திருந்தாலும் பரவாயில்லை, அவள் சீக்கிரம் வந்து நின்று அவளை அந்தத் தெருமுனையில் எல்லோரும் ஏதோ போல் பார்த்துவிட்டுப் போகவேண்டாமென்றுதான் எப்பொழுதுமே சீக்கிரம் வந்துவிடுவான் ஞானி. "சரி உள்ளே ஏறு, இன்னைக்குப் பூராவும் நீ என்னுடந்தான் இருக்கனும். நிறைய இடம் சுற்றலாம் வா" என்றான் ஞானி.

நகரத்தின் நெரிசல் அதிகம் இல்லாத அந்த இடத்தில் வேகமாகச் சென்றவனை திடீரென்று ஒரு ஆள் தடுத்து நிறுத்தினார். அங்கே கொஞ்சம் கும்பல் அதிகமாக இருந்தது. படபடப்புடன் பேசிய அந்த நபர் "இங்கே ஒரு ஆள் அடிபட்டுக் கிடக்கிறாரு, அவரை ஆஸ்பத்திரிக்கு இட்னு போணும்பா" என்று பேசி முடித்தார். எதுவும் யோசிக்காமால் "நான் அவசரமா போறேம்பா, பின்னாடி வர்ற வண்டியில கேளு" என்று கூறிவிட்டு வாகனத்தை எடுத்து விட்டான்.

நடந்ததைப் பார்த்த அணுவிற்கு கோபம் வந்துவிட்டது. "எல்லார மாதிரியும்தான் நீயும் இருக்க, பாவம் ஒரு உயிர் போராடிகிட்டு இருக்கு, நீ பாட்டுக்கு இப்படிப் போற" என்று கோபித்துக் கொண்டாள்.

இன்னைக்கு காலையிலேயே கவலைன்னு தினசரிப் பலன்ல போட்டிருந்தது நடக்காதுன்னு நினைச்சுட்டு வந்த ஞானிக்கு அது இன்று இவளால் நடந்துவிடும் என்று புரிந்தது. "ஹேய், உன் கூடப் பேசியே ஒரு மாசம் ஆகுதுப்பா. நான் இன்னைக்கு நிறைய கனவுகளோட வந்தேன், அதுவும் இது இப்போ வாங்கின வண்டி, இதுல போயி இரத்தக் கறையெல்லாம் படனுமா? நான் இன்னைக்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாதுன்னு நினைச்சு வந்தா, இப்படியா எனக்கு நடக்கனும்" என்று அலட்டிக் கொண்டான் ஞானி.

"ஹலோ, இங்க பழைய மகாபலிபுரம் சாலையில திருவான்மியூர்ல இருந்து 40 நிமிட தூரத்துல ஒருத்தர் அடிபட்டுக் கிடக்குறாருங்க, அங்கே ஒரு ஆம்புலன்ஸ் அனுப்புங்க" என்று அவசர தகவலுக்குப் பேசிவிட்டு மூச்சு விட்டாள் அணு. "நீ என்னை சமாதானப் படுத்த முயற்சிக்காத, ஒரு உயிர் மேல அக்கரையில்லாத உனக்கு எதுக்குக் காதல்" என்று மீண்டும் அவனைக் கடிந்து கொண்டாள்.

இவளைச் சமாதானப் படுத்துவதிலேயே அரை நாள் கழிந்து போனதும், இடையே ஒரு கூரியர் பற்றி ஞாபகம் வரவே இந்தப் பிரச்சினைக்கிடையில் வீட்டிற்குப் பேசி விட அலை பேசி எடுத்தான். இவளிடம் பேசும்போது இடைஞ்சல் செய்யப் போவதாய்க் கூறியிருந்த ஒரு நண்பனைத் தவிர்ப்பதற்காக அலைபேசியை அமர்த்தி வைத்திருந்தான். அதை சரிசெய்து கொண்டு அம்மாவிற்குப் பேசினான்.

"ஏம்பா எங்க இருக்க, உடனே அடையார் மலர் ஆஸ்பத்திரிக்கு வந்திடுப்பா, காலையில மகாபலிபுரத்துக்கு ஒரு ஆளைப் பார்க்க போன அப்பாவுக்கு விபத்தாயிடுச்சுப்பா. அவரோட ஒரு காலை எடுத்திட்டாங்க. அரை மணி நேரத்துக்கு முன்னாடி வந்திருந்தா காலைக் காப்பத்திருக்கலாம்னு சொல்றாங்கப்பா. சீக்கிரம் வா" என்று அழுது அழுது பேசி முடித்தாள் ஞானியின் தாய் சத்யா.


இன்னும் எத்தனை நாள்தான் மனிதர்கள் இப்படி மனிதம் இழந்து இருக்கப் போகிறார்கள் எனப் புரியவில்லை.

நான் இறை தூதுவன்

சரியாக அறுபதாயிரம் வருடங்கள் கழித்து.....

ஒரு புறம் மிகப் பெரிய புனித விழா ஒன்று கொண்டாடப் பட்டுக் கொண்டிருந்து சூரியனிலிருந்து மூன்றாவதாக இருக்கும் அந்த கிரகத்தில். அங்கே ஏற்கனவே மக்களுடன் மக்களாக வாழ்ந்த ஒரு மாபெரும் இறை தூதரைப் பற்றி பேச்சு நடந்து கொண்டிருந்தது. கூடியிருந்த மனிதர்கள் எல்லோரும் ஒரு தேவனை நினைத்து வழிபட்டுக் கொண்டிருந்தார்கள், அந்த இறைவனை அடைய வழிமுறைகள் கற்பித்து விட்டுப் போன அந்த இறை தூதர் சில்லா என்பவரின் கோட்பாடுகள் எனக் கூறிக் கொண்டு ஒன்று புத்தகமாக வெளிவந்திருந்தது. அந்த புத்தகத்தில் இறைவன் செவ்வாயைய்ப் படைத்தார், அதற்கு வெளிச்சம் தருவதற்கு சூரியனைப் படைத்தார் என்றும், இரவு வெளிச்சத்திற்கு போபோஸ், டெய்மோஸ் எனும் இரண்டு நிலாவையும் படைத்தார் எனவும் மனிதர்களாலேயே எழுதப் பட்டிருந்தது. அது இறை தூதர் சொன்னதல்ல. அதே சமயத்தில் அதிலிருந்து சில நூறு வருடங்களுக்கு முன்பு தோன்றி மறைந்த இன்னொரு இறை தூதராக கருதப்பட்ட பயஸ் என்பவர் கூறிய வழிமுறைகளின் படி வாழ்ந்து வந்தவர்களுக்கும் இவர்களுக்கும் கடுமையான மன வேறுபாடு இருந்தது. மிகப் பெரிய போர்க் கருவிகளுடன் இன்னொரு புறம் இரு தரப்பினரும் பெரிய திடல் ஒன்றில் சண்டையிடுவதற்காக தயாராக இருந்தனர். அப்பொழுது அழிந்து கொண்டிருக்கும் மனிதர்களைக் காப்பாற்ற ஒரு புது இறை தூதர் ஒருவர் வானிலிருந்து வந்து கொண்டிருந்தார். அவர் அவருக்குக் கற்பிக்கப்பட்டதை எடுத்துரைத்து மனிதர்களைச் சமாதானப் படுத்த வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கையிலிருந்த தமிழில் எழுதப் பட்டிருந்த ஒரு குறிப்பேட்டை எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். இந்த மூன்றாவது கிரகத்தில் வாழ்பவர்களுக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும். இதுவரை வந்த எல்லா இறை தூதர்களும் கொண்டு வந்த அந்த அந்த புத்தகத்தில் இருக்கும் தமிழ் எழுத்துக்கள், ஹிந்தி எழுத்துக்கள், உருது எழுத்துக்களும் தேவ பாஷையாக நினைக்கப் பட்டது. அது இறை தூதர்களுக்கு மட்டுமே புரியுமெனவும் சித்தரிக்கப் பட்டது. இருப்பதிலேயே குறைவாகப் பேசப்பட்ட மொழிகளை எடுத்து தேவபாஷைக்குப் பயன்படுத்திக் கொண்டனர் இறை தூதர்கள்.

அப்பொழுது சூரிய குடும்பத்தின் மூன்றாவது கிரகமாக செவ்வாய் இருந்தது. ஆமாம் ஒரு மிகப் பெரிய எரிகல் ஒன்று சுமார் கி.பி. 3200 வது ஆண்டு பூமியைத் தாக்கியது. அப்பொழுது அந்த எரிகல்லின் விசையை தாங்கிக் கொள்ள முடியாத பூமி வெடித்துச் சிதறியது, சுமார் 48 மணி நேரத்தில் அந்த இடத்தில் ஏற்பட்ட வேகமான வெற்றிடத்தால் செவ்வாய் கிரகம் பூமியிருந்த இடத்திற்கு இழுக்கப் பட்டது. இறுதியில் தனது பாதையைக் கடந்து பூமியின் பாதைக்கும் வரமுடியாமல் தனது இயல்பு பாரம் காரணமாக சற்றே பூமி இருந்த இடத்திலிருந்து 5000 கி.மீ தூரத்தில் நிலைபெற்று சூரியனைச் சுற்ற ஆரம்பித்தது. இதனால் ஏற்கனவே இருந்த இரண்டு துணைக் கோள்களுடன் உடைந்து சிதறிய சின்னச் சின்ன துண்டுகளும் சேர்ந்து மொத்தம் 6 துணைக்கோள்களுடன் செவ்வாய் சுற்ற ஆரம்பித்தது. ஆனால் இரண்டு மட்டும்தான் இரவில் தெரியும். மற்றவை மிகவும் சிறியதாக இருப்பதால், அது கொஞ்சம் பெரிய நட்சத்திரம் அளவிற்கே தெரியும். இந்த நிகழ்வு நடந்த பொழுது பூமியின் விஞ்ஞான வளர்ச்சியினால் ஒளி வேகத்தை தொட்டுவிடும் மனிதர்கள் பயணிகக் கூடிய வானூர்திகள் கண்டு பிடிக்கப் பட்டிருந்தது, மேலும் மிகப் பெரிய வான் திடல் மூன்றும் அமைக்கப் பட்டிருந்தது. இந்த பேராபத்தின் பொழுது உலக பணக்காரர்கள் பலரும், அந்த தொழில்நுட்பம் அறிந்த வல்லுனர்களும் சரியாக சூரியனிலிருந்து 4.3 ஒளி வருடத் தொலைவில் இருக்கும் ப்ராக்ஸிமா சென்ச்சரி எனும் சூரிய குடும்பத்திற்கு பயணமானார்கள். அவர்கள் மொத்தம் 350 பேர் கொண்ட குழு. அவர்கள் அங்கே சென்று சேருவதற்கு 6 வருடம் ஆகியது. பின்னர் அங்கேயே வசிக்கக் கூடிய அளவிலான ஒரு இடத்தில் இறங்கி 58,802 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

சுமார் கி.பி. 3200 இல் ஏற்பட்ட இந்த சம்பவத்திற்குப் பிறகு 45000 வருடங்களில் செவ்வாய் கிரகத்தில் வெகுவாக ஆக்ஸிஜனும், தண்ணீரும் பெருகத் தொடங்கியது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் இருந்ததும் அதன் படிமங்களும் மனிதர்கள் கண்டு பிடித்திருந்தனர். அந்த சமயத்தில் அங்கே ப்ராக்ஸிமாவிலிருந்து மனிதர்கள் செவ்வாய்க்கு வந்திறங்கினார்கள். அவர்கள் திரும்ப அந்த ப்ராக்ஸிமாவிற்குச் செல்லவில்லை. காலப் போக்கில் சுமார் 13,800 வருடங்களில் மனிதர்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருந்தது. சென்றவர்கள் திரும்பி வராததால் அங்கே அனுப்பி வைக்கப் பட்ட வெவ்வேறு மனிதர்கள் செவ்வாய்க்கு வந்தார்கள். அவர்கள் வெவ்வேறு இடத்தில் இறங்கி மனிதர்களைச் சமநிலைப் படுத்த பல வழிமுறைகள் கற்பித்து பின்னர் இறந்து போனார்கள். அவர்கள் தான் வாழ்ந்த ப்ராக்ஸிமா எனும் இடத்தில் சொர்க்கம் நரகம் இருப்பதாகவும் அங்கே வாழ்பவர்கள் இறைவன் எனவும் இவர்கள் செய்யும் பாவங்களிற்கேற்ப அங்கே தண்டனை வழங்கப் படும் என்றும் பயமுறுத்தினர். அப்படி வந்த அந்த இருவர்தான் பயஸும், சில்லாவும்.

தன்னுடைய பெரும்பணியை மட்டும் கருத்தில் கொண்டு செவ்வாயில் வாழும் மனிதர்களை நன்னெறிப் படுத்த வந்து கொண்டிருந்தார் அவர் பெயர் தில்கி. ஏற்கனவே சில்லா எனும் இறைதூதர் வந்த பிறகு அந்தப் பகுதியில் அதுநாள் வரை இருந்த மக்கள் சிலபேர் இடம் பெயர்ந்து வசிக்கும் இடம்தான் இப்பொழுது தில்கி வந்து இறங்கும் இடம். இவர்களுக்கு தில்கி என்ற பெயரில் இறை தூதர் ஒருவர் வருவார் என்பது பயஸ் என்பவர் சொல்லிச் சென்ற சில குறிப்புகளை வைத்து அந்த மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அங்கே வந்து இறங்கிய தில்கி அந்த மக்களுக்கு தாந்தான் தில்கி என்றும், தான் இறைதூதுவன் என்றும் அறிமுகப் படுத்திக் கொண்டார். இங்கே நடப்பதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தனர் இறைவனாகக் கருதப்படும் ப்ராக்ஸிமாவில் வாழும் பழைய பூமியின் மனிதர்கள்.....

இனி நான் கெட்டவன்

"சீக்கிரமா கிளம்புங்க, ரெண்டு வருசம் கழிச்சு நம்ம புள்ள வர்றான், விமான நிலையம் போகனும்" என்று வேக வேகமாக அடுப்பில் வேலையை முடித்துவிட்டு காலை ஏழு மணிக்கே கிளம்பி இருந்தாள் மலர்.

மகிழ்வுந்தைத் துடைத்துக் கொண்டிருந்த நாகய்யன் சற்று பொறுமையிழந்து "காலையில இருந்து இதேதான் சொல்லிகிட்டு இருக்க, விமானம் இங்க வர்றதுக்கு இன்னும் மூன்று மணி நேரம் இருக்கு" என்று சலித்துக் கொண்டார். நமக்கு மட்டும் நம் பையனைப் பார்க்கனும்னு ஆசையில்லாத மாதிரி விரட்டிகிட்டு இருக்கா என்று முணங்கிக் கொண்டார்.

இங்கிலாந்துக்கு வேலைக்குச் சென்ற சூர்யா இரண்டு வருடம் கழித்து இப்பொழுது சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறான். அவனை அழைத்து வந்தவுடன் சொந்த ஊர் திருச்சிக்கு இரண்டு வாரம் கழித்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்திருந்தார் நாகய்யன். அங்கே சூர்யாவோட அண்ணன் மாறன் இருக்கிறார். அவரது திருமணத்திற்கும் சூர்யா இங்கிலாந்திலிருந்து வரவில்லை.

பத்து மணிக்கு தரையிறங்கும் விமானத்திற்கு காலை எட்டரை மணிக்கே சென்று காத்திருந்த நான்கு விழிகளும் பதினோரு மணிக்கு வெளியே வந்த மகனை ஆரத்தழுவி அணைத்த பிறகு வடித்த சிலசொட்டு ஆனந்தக் கண்ணீரில் திளைத்து இருந்தன. வீட்டில் ஒரே ஆராவாரமாக கூடியிருந்த சூர்யாவின் சில நண்பர்களும், சூர்யாவும் நாட்களைக் கடத்திக் கொண்டு இருந்தனர்.

ஒருவாரம் கழித்து நாகய்யன் நாம வர்ற வெள்ளிக் கிழமை திருச்சிக்குப் போகிறோம் என்றார். சட்டென்று அதிர்ந்து போன சூர்யா "நான் நாளைக்கே இங்கிலாந்து கிளம்பிடுவேன், எனக்கு இன்னும் ஒரு வருசம் அங்கே இருக்கனும்" என்று மெதுவாக சொல்லி முடித்தான்.

பாசத்தின் மிகுதியில் நாகய்யன் சற்றே கோபம் கொண்டு "அதெல்லாம் முடியாதுப்பா, ஒன்றரை வருசத்துல போயிட்டு வர்றன்னு சொல்லிட்டுப் போனவன், இரண்டு வருசம் கழிச்சுதான் வந்திருக்க, இனி நீ அங்கே போக வேண்டாம், உன் அண்ணனுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சாச்சு, அடுத்து உனக்கும் முடிச்சு வைக்கனும், அதனால நீ போகவேண்டாம்" என்று கட்டளை இட்டார். இறுதியில் சூர்யா எல்லோரும் அதிரும்படியான ஒரு விசயத்தைப் போட்டு உடைத்துவிட்டான். தான் அங்கே ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அந்தப் பெண் வேறு மதத்தவள் என்றும், நீங்கள்லாம் சம்மதிக்கலைன்னாலும் அந்தப் பொண்ணைத்தான் கல்யாணம் பன்னுவேன் என்றும் கூறி விட்டு வீட்டை விட்டு கிளம்பிவிட்டான்.

காதலே சற்றும் பிடிக்காத நாகய்யனுக்கு இது பெரிய இடி. நம்ம பிள்ளையா இப்படிப் பேசுகிறான் என்று சுத்தமாக நம்ப முடியாமல் வீட்டிலேயே புலம்பிக் கொண்டிருந்தார், அதுவும் தன்னிடமே மகன், நீங்கள் வேண்டாம் அந்தப் பெண்தான் முக்கியமென்று சொல்லிவிட்டானே என்று நொந்து வெதும்பினார். மறுநாள் கிளம்புவதற்கு மூன்று மணி நேரம் முன் வந்தவனுக்கும் நாகய்யனுக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தை முற்றிப் போய் "நீ என் மகனே இல்லைடா, உன்னைப் பெத்ததையே மறந்து தல முழுகிடுறேன், என் கண்ணுலையே படமா ஒழிஞ்சுப் போடா" என்று கோபமாக பேசிவிட்டார். தாயும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவள் இல்லாமல் என்னால் ஒரு நாள் கூட வாழ முடியாது என்று சென்றுவிடான்.

தனியாக விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்ற சூர்யாவை பொங்கி வழியும் கண்ணீரோடு காத்திருந்த நண்பன் முகிலன் சந்தித்தான். "நீ பன்றது சரின்னு எனக்குப் படலைடா, எதுவா இருந்தாலும் வீட்டைக் கஷ்டப் படுத்திட்டுப் போகாதே, நடந்ததையெல்லாம் வீட்டுல சொல்லிடலாம் இல்லையென்றால் நீ இதை என்னிடமும் சொல்லாமல் இருந்திருக்கலாம்" என்று முகிலன் வறண்டு போன தொண்டையில் பேசினான்.

இறுகிய குரலில் "இல்ல முகிலா, இப்போதைக்கு வீட்டுக்கு நான் கெட்டவன். இனி எனக்குக் கவலையில்லை. நீதான் என்னோட வீட்டைப் பார்த்துக்கனும், அவங்களுக்கு ஆறுதலா இருக்கனும், என்னைப் பற்றி எந்தத் தகவலும் உனக்கும் நமது நண்பர்கள் யாருக்கும் தெரியாது என்று சொல்லிவிடு. உங்களையெல்லாம் பிரிவதற்கு எனக்கு ரொம்ப கஷ்டமாதான் இருக்கு. ஆனால் கடந்த ஆறு மாசமா நான் யோசிச்சு எடுத்த முடிவு இது. உன்னிடமாவது இந்த உண்மையை சொல்லிவிடுவதால் ஏதோ என் மனதுக்கு ஒரு ஆறுதல். மரணம் எனக்கு பயம் இல்லை, இதுவும் தூக்குத் தண்டனைப் போலதான், சிறையில் தனியாய் இருந்து பின்னர் மரணிப்பது போல உங்களிடமிருந்து விலகி இருந்து நான் மரணிக்க விரும்புகிறேன், இந்த உண்மை உன்னை என்னைத் தவிற யாருக்கும் தெரியக் கூடாதென்று சத்தியம் செய்" என்று பேசி முடித்து சத்தியமும் வாங்கிக் கொண்டு கால்கள் நகர்த்திவிட்டான் சூர்யா.

ஆறு மாதத்திற்கு முன்புதான் சூர்யாவிற்கு புற்றுநோய் இருப்பதை அவன் அறிந்தான், அதைக் குணப்படுத்த முடியாமல் மருத்துவர்களும் கைவிட்டு விட, வாழ்க்கையை நீட்டித்து மட்டுமே கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான். தன் இறப்பை நிச்சயம் பெற்றோர் தாங்கிக் கொள்ள மாட்டார்களென்று சகஜமாகிவிட்ட காதல் பிரச்சினையில் பிள்ளைகளைத் தலை முழுகும் எத்தனையோ நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக இருந்து போகட்டுமே என்று மரணம் நோக்கச் சென்றுவிட்டான். இதிலும் சூர்யாவின் பெற்றோர்களுக்கு வருத்தமெனினும், அவனது மரணத்தை விடக் கொடிதல்ல.

தேடலின் தொடக்கம்

சுதந்திரக் காற்றில் செல்லும் இவன் பெயர் செழியன். இவன் பதினைந்து வருடங்களில் சென்ற இடங்களை விட செல்லப் போகும் இந்த இடம் சிறப்பானதாக இருக்கும். இந்தப் பயணம் இவனது பதினைந்து வருடத் தேடுதல். ஏதோ பிரச்சினையில் இவனுடைய சொந்த ஊருக்கே திரும்பிப் போகாத செழியனின் அப்பாவின் கோபத்தின் காரணமறியவில்லை, அறியவும் விரும்பவில்லை இவன். நகரத்தின் நெரிசலிலும், நாகரீகத்தின் செயற்கையிலும் சிக்கித் தவிக்கும் நகர எல்லையை கடந்து வந்தது பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. செழியன் பிறந்து எட்டு வருடத்தில் நகரவாசியாகிவிட்டான்.

செழியனின் அம்மா அவ்வப்பொழுது சொல்லிவிடும் சின்னஞ்சிறு ஊர் ஞாபகங்களையெல்லாம் அவனுகுள் இருக்கும் இதயத்தின் சுகந்த அறையில் பத்திரமாக வைத்திருக்கிறான். பஞ்சு மிட்டாய், திருவிழாத் தேர், கோவில் விசேசம், மார்கழித் தெருக் கோலங்கள், ஊர்க் கிணறு, அதில் தினமும் கூட்டமிடும் துணி துவைக்க வரும் பெண்கள், தாரில்லாதா செம்மண் சாலைகள், அதில் கொஞ்சம் ஆட்டுப் புளுக்கைகள், பச்சைப் பசேலென்ற வயல் வரப்பு, அதில் நடுவே செல்லும் ஒற்றையடிப் பாதை, பாதை கடந்து வரும் மோட்டார் கிணறு, குச்சி ஐஸ், கான்கிரீட்டில் வானம் மறைக்காத வீட்டு முற்றம், அதில் பெய்யும் மழை, இன்னும் ஏராளமாய்ப் பூத்துக் குலுங்கும் ஊரின் ஞாபகக் கனவுகளை நிசமான நினைவாக புசிக்க செல்கிறான்.

அங்கு செல்ல வேண்டுமென்று வீட்டில் இரண்டு வருடமாக அடம்பிடித்து இப்பொழுது கிளம்பி இருக்கும் செழியனுக்கு வயது 23. "தாத்தா மூக்கைய்யனுக்கும், ஆச்சி பொன்னாத்தாளுக்கும் நான் வரும் சேதியைச் சொல்லிவிடு. தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர் சொன்ன குறிப்பின்படி அந்த ஊருக்கு வரும் என்னை எந்த ஆராவாரமும் இல்லாமல் என் பாட்டி பிசைந்து தரும் பழைய கஞ்சியை எனக்காகக் கொஞ்சம் மிச்சமெடுத்து வைக்கச் சொல்" என்று காற்றிடம் பேசிக் கொண்டிருந்தான்.

இன்னும் 8 மணி நேரம்தான் இருக்கிறது இவன் கனவுலகத்துக்குச் செல்ல....

விடிந்து விட்ட வானத்தில் வடியாது நிற்கும் அடர்ந்த மேகங்களுக்கிடையில் தெரியும் சூரியனின் கிரணத்தில் தூரத்தில் தெரியும் அந்த தென்னந்தோப்பின் பின்னாடிதான் இவன் தாத்தா ஆச்சி வீடு இருக்க வேண்டும்.

இதோ வழியில் வரும் ஒரு பெரியவரிடம் "ஐயா, இங்க மூக்கையன் வீடு எங்க இருக்கு" என்றான். ஆடம்பர உடையில் இவனைப் பார்த்து அவர் ஆச்சரியப் படுவது அதிசயமில்லை. இருந்தாலும் சரியான வீட்டைக் காண்பித்துவிட்டார்.

"ஆச்சி நீங்கதான் பொன்னாத்தாளா?" என்றான் வாசலில் உரலில் அரிசி போட்டு அரைத்துக் கொண்டிருந்த பொன்னாத்தாளிடம்.

ஏதோ அந்தக் குரலில் அந்நியம் இல்லாதது கண்டு சற்றே வியந்த பொன்னாத்தாள், அருகே சென்று "யாரு அய்யா நீ, நான் தான் பொன்னாத்தாள். உன்னைப் பார்ப்பதற்கு பழக்கப்பட்ட முகம்போலத் தெரிகிறதே. நீ யாருப்பா" என்று பேசி முடிக்க திண்ணையிலிருந்து எழுந்து வந்து விட்டார் மூக்கைய்யன்.

தாந்தான் பேரன் என்றும், எப்படி இங்கு வந்தேனென்றும் சொல்லி முடிப்பதற்குள் கண்கள் குளமாகிவிட்ட பெருசுகளால் அவனை அள்ளி அணைக்காமல் இருக்க முடியவில்லை. அன்பு முத்தங்களும், அவனை கயிற்றுக் கட்டிலில் உட்கார வைத்து விட்டு கை, கால்களைத் தொட்டு தடவிப் பார்த்தும் தலையில் அடித்துக் கொண்டே பொன்னாத்தாள் புலம்பலானாள். "எத்தனை வருசம்பா, பதினைந்து வருசம் ஓடிப் போச்சே. இந்தப் பாவி மனுசன் வாய வச்சுக்கிட்டு இல்லாம மருமகன்கிட்டே முரண்டு புடிச்சு என் செல்வத்த என்கிட்ட இருந்துப் பிரிச்சுட்டாரே" என்றாள். ஏதோ ஒரு கோபத்துல நான் பேசினாலும் பதினைந்து வருசமா தண்டனைன்னு உறைந்து உட்கார்ந்தார் மூக்கைய்யன்.

பழங்கதைகள் பல பேசி பழைய கஞ்சியும் குடித்துவிட்டு, காலார நடந்தான். வழியில் தென்பட்ட ஒரு சின்ன வீட்டு வாசலில் இவனைக் கூர்மையாய்ப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை விட்டு விழிகளை நகற்ற முடியாமல் கேட்டே விட்டான். "நீங்க யாரு, உங்ககிட்ட சின்ன வயசுல பேசின ஞாபகம் இருக்கு, நான் செழியன்" என்றான்.

கையில் வைத்திருந்த சுளகைக் கீழேப் போட்டுவிட்டு ஓடிப் போய் வீட்டுக் கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். உள்ளே இருந்து வந்த ஒருவர் சொன்னார் "வாய்யா மருமகனே. இப்பந்தான் நீ வந்த சேதி தெரிஞ்சுது. அங்கதான் கிளம்பிகிட்டு இருக்கேன். நாந்தான் உன் அத்தை சீதா, அது எம்பொண்ணு பத்மினிதேன், சின்ன வயசுல ஒன்னா வெளாண்டதெல்லாம் மறந்துடுச்சுப் போல" என்று பேசி முடித்தார்.

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.

தழல் ததும்பும் கோப்பை

காலை ஏழு மணிக்கு வாசன் வீடு எங்கும் பரபரப்பாய் சுற்றிக் கொண்டிருக்கிறான். மாடி, அடுக்களை, மூன்று படுக்கையறை, குளியலறை எங்கேயும் தென்படவில்லை. உடல் முழுதும் வியர்த்திருக்கிறது அவனுக்கு. சத்தமிட்டு சத்தமிட்டு தொண்டை வறண்டுவிட்டது. படியிலிருந்து வேகமாக கீழே இறங்கியவன் கால் இடறி 17 படிகளிலும் உருண்டு கீழே விழுந்தான். பின்னந்தலையில் லேசான அடி. உடம்பு எல்லாம் செயலிழந்தது போல உணர்வு. உதடுகள் மட்டும் கனவு கண்டு புலம்புவது போல புலம்ப ஆரம்பித்தது. "எங்கே போனீங்க.. எங்கே போனீங்க... நான் என்ன தப்பு பன்னினேன்...." அப்படியே அந்த பேச்சும் அடங்கி விட்டது.

இதற்கு சரியாக ஒரு நாள் முன்பு.......

அவனுக்குப் பிடித்த ஆப்பம் சுட்டுத்தருமாறு அம்மாவைக் கேட்டுக் கொண்டே இருந்தான் வாசன். "சீக்கிரம்மா, இன்னைக்கு நாம வெளியில போறோம், உனக்கு எங்க போனும்னு தோணுதோ, அங்கே போகலாம். இரவுதான் திரும்பி வருவோம்".

வழக்கத்துக்கு மாறாக என்ன இவன் இப்படிப் பேசுகிறான் என்ற லேசான அதிர்ச்சியோடு இருந்தாள் வாசுகி. "என்னப்பா, எங்கே போகனும், சித்ராவும் நேத்துதான் அவங்க அம்மா வீட்டுக்குப் போனா, பொண்டாட்டி இல்லைன்னதும் உனக்கு நேரம் போகலையா? அதுக்கு பெருசுங்க நாங்க இரண்டு பேருமா கிடைச்சோம்? எதுக்குப் பறக்குற?" என்று வழக்கமான சிரிப்போடு கேள்வி கேட்டாள் வாசனின் தாய். அந்த நேரம் வாசனின் தந்தை சண்முகமும் வந்துவிட்டார்.

"இல்லைம்மா எனக்கு இன்னைக்கு விடுமுறைதானே, நாம் மூன்று பேரும் வெளியே போய் நீண்ட நாள் ஆச்சு, அதனாலதான், இன்னைக்கு முழுசும் உங்க கூட சுத்தலாம்னு..." என்று கெஞ்சிக் கேட்டான் வாசன். சண்முகம் குறுக்கிட்டு "சரி விடுடி பிள்ளை ஆசப்பட்டு கூப்பிடுறான், போயிட்டு வருவோம்."

மகிழ்வுந்து புறப்பட்டு மகாபலிபுரம் சென்றது. நல்ல நிழலோரமாகப் பார்த்து மதிய சாப்பாடு சாப்பிட்டு முடிந்த பிறகு அமர்ந்து கொண்டனர். அவ்வளவு நேரம் சுற்றியதில் கால் வலித்தது வாசுகிக்கும், சண்முகத்திற்கும். ஏதோ போல இருந்த மகனின் முகத்தை தந்தை கண்டுபிடித்து விட்டார். "இங்கே வா, என் மடியில் படுத்துக்கோ. என்ன ஆச்சு, இன்னைக்கு உன் நடவடிக்கையே சரியில்ல... நீ எதையோ எங்ககிட்ட இருந்து மறைக்குறா மாதிரி இருக்கு, எதுவா இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லுப்பா."

தேக்கி வைத்திருந்த கண்ணீரைத் தாரை தாரையாக வடித்தான். அப்பா மடியில் தலையும், அம்மா மடியில் காலும் வைத்துக் கொண்டு விசும்பினான்.கண்களைத் துடைத்துக் கொண்டே தனக்கும் தனது மனைவிக்கும் நடந்த பிரச்சினையைக் கூறினான்.

"நீங்களா பார்த்துதான் எனக்கு கல்யாணம் செஞ்சுவச்சீங்க, நான் சித்ராவை எப்படிப் பாத்துக்குறேன்னு உங்களுக்கே தெரியும். ஆனால் அவளுக்கு எப்பவுமே நீங்க இரண்டு பேரும் என்கூட இருக்கிறதே பிடிக்கலை. தனிக்குடித்தனமாத்தான் இருக்கனும்ங்குறா. நானும் பலநாள் சமாதானப் படுத்திப் பார்த்துட்டேன். ஆனா நேத்து வெளியில சாப்பிடப் போனப்போ, நான் இன்னைக்கு குழந்தையோட எங்க வீட்டுக்குப் போறேன், தனிக்குடித்தனம் போகலாம்னா என்னைக் கூப்பிடுங்கன்னுட்டுப் போயிட்டாம்மா." என்று கூறி மீண்டும் அழத் தொடங்கினான்.

நடந்ததையெல்லாம் உணர்ந்த இருவரும் அவனைச் சமாதானப்படுத்தி, அப்பா, அம்மாவும் இருக்கிற வரை உனக்கு எந்தக் கவலையுமில்லை. நாளைக்கே அவளை நம்ம வீட்டுக்குக் கூப்பிட்டு வந்துவிடுவோம் என்று ஆறுதலும்ம் சொன்னார் சண்முகம். அழுது அழுது இரவு 2 மணிக்குத் தூங்கிவிட்டான் வாசன்.

இன்று சரியாக காலை 11 மணிக்கு....

யாரோ தண்ணீர் தெளிப்பது போன்ற ஒரு உணர்வு மெல்ல வாசனுக்கு ஏற்பட்டது. அது மனைவி சித்ராதான். அவன் தெளிந்ததும் அவள் அவனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தாள். இதை உன்னிடம் கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார் மாமா. வீட்டு தபால் பெட்டியில் இது கிடந்தது. அதை வாங்கி வாசிக்க ஆரம்பித்தான்.

"அன்பு சித்ரா, சீக்கிரமாக நம், இல்லை உன் வீட்டுக்குப் போ. நாங்கள் கிளம்புவதை அவனிடம் சொல்லாமலேயே கிளம்புகிறோம். நாங்கள் எங்கே போகிறோம் என்று எங்களுக்கேத் தெரியாது, எங்களை அவன் தேடவேண்டாமென்று சொல். என் மகன் அழுது நான் பார்த்ததேயில்லை, நேற்று அவன் அழுததை எங்களால் தாங்க முடியவில்லை. எங்களை விட அவனை நீ நன்றாகப் பார்த்துக் கொள்ளுவாய் என்ற நம்பிக்கையோடு செல்கிறோம்.

அன்பு மகனே, தனிக்குடித்தனம் போக வேண்டுமெனின் நாங்களே உன்னை மகிழ்ச்சியோடு அனுப்பியிருப்போம். சித்ராவிடம் எந்தக் கோபமும் கொள்ளாது அவளுடன் அன்புடன் நடந்துகொள். இதில் அவள் தவறு எதுவும் இல்லை. நீங்கள் இருவரும் அன்போடு வாழவேண்டும் என்னும் ஒரே காரணத்திற்காகவே உன்னைவிட்டுப் பிரிகிறோம். இதற்கு பங்கம் விளைவித்துவிடாதே. இப்படிக்கு உன் அன்பு அப்பா, அம்மா."

கண்ணீரோடு கலைந்து நின்ற சித்ராவைத் திட்டமுடியாமல், வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தான் அவளை. இருவரையும் 8 வயது மகன் சாரதி உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தேட

பின்தொடர...

வாசித்தவர்கள்

Website counter

கதைகள்

திரட்டி

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

தமிழ்வெளி

More than a Blog Aggregator

உலகோர்

திசைப்புள்ளிகள்